311. “ஆர்த்தி கண்டுமென் மேனின் றழற்கதிர்
 
  தூர்ப்ப தே! யெனைத் தொண்டுகொண்
                           டாண்டவர்
நீர்த்த ரங்க நெடுங் கங்கை நீண்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி!“
165

     (இ-ள்.) ஆர்த்தி........தூர்ப்பதே! - துன்பத்தைக்
கண்டபின்னும் மேலும்மேலும், எப்போதும் போல் உனது
போக்கின்படியே போகாமல் நின்று, உனது இயல்பான குளிர்ந்த
கிரணமல்லாது இயல்புக்கு மாறான வெப்பக் கதிர்களைத் தூவுவதா!?
எனை.......போன்றிலை - எனைத் தடுத்து ஆளாகக் கொண்ட
இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய நெடிய
கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து
கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தா யில்லையே;
தண்மதி! - ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! (தண்மதி -
அண்மை விளி).

      (வி-ரை.) ஆர்த்தி - துன்பம். பாவை தந்த படர்பெருங்
காதலால் விளைந்தது. காதலின் நிறைவு, தலைவன் தலைவியர்
சேர்ந்தபோது இன்பமாயும், அதுவே பிரிந்த போது துன்பமாயும்
விளைவதாம். இங்குத் துன்பத்தின்மேல் நின்றது.

     கண்டும - கண்ட பின்னரும். ஒருவன் மற்றொருவனுடைய
துன்பங் காண்பானாயின் அவன்பால் இரங்கக் கொள்வான்;
அங்ஙனங் கொள்ளாவிடினும் மேலும் துன்பஞ் செய்யமாட்டான்;
ஆனால் நீயோ எனது துன்பத்தைக் கண்டுங்கூட இவ்வாறு
அழற்கதிர் தூர்ப்பதே என உம்மையின் பொருள் விரிக்க.

     மேன்மேல் நின்று அழற்கதிர் தூர்ப்பதே - மேல்
தூர்ப்பதே; மேலும் தூர்ப்பதே; நின்று தூர்ப்பதே; அழற்கதிர்
தூர்ப்பதே என ஒவ்வொன்றுடனும் கூட்டுக. ஒருகால் துன்பம்
செய்வானும் தான் செய்து விட்ட துன்பத்தின் விளைவு கண்டபோது
பின்னருஞ் செய்ய ஒருப்படா தொழிவான். நீ அவ்வாறன்றி மேலும்
மேலும் செய்வானாயினை. நின்று - உனது ஆகாயவழிச் செலவிலே
போகும் போக்கையும் நிறுத்தி நின்று தூர்ப்பதோ? அழற்கதிர் -
அதுவும் உனது இயல்பாகிய குளிர்க் கதிர் வீசாமல் அழற்கதிர்
வீசுவதாயினை. தூர்ப்பதே - தூர்ப்பதோ? என ஏகாரம்
வினாப்பொருள் குறித்தது. கதிர் ஒன்றிரண்டல்லாது அநேகமாய்
என்னை அதிலே மூழ்கும்படித் தூவுவதோ என்க. ‘என்மேல் நின்று'
என்று கூறுவாரு முண்டு. இவ்வழற்கதிர் தூர்க்கும் நிலவைக்
கண்டவுடன் தமது இறைவனது முடிமீதுள்ள குளிர்நிலா நினைவுக்கு
வந்தது; வரவே அதை “எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த்தரங்க நெடுங் கங்கை நீண்முடிச் சாத்தும் வெண்மதி“ என்று
வாயார, மனதார, வாழ்த்தித் தம்மைக் குளிர்வித்து ஆற்றிக்
கொள்கின்றார் நம்பிகள். எமது இறைவன் தமது சிரத்தில்
வைத்ததனாலே உய்ந்தவனாகிய நீ - என்று முன் தொடர்பை
அவனுக்கு நினைவூட்டியவாறு. எனது ஆர்த்தி நிலவியதைக்கண்டும்
என்மேல் நின்று - என்று உரைத்தலுமாம்.

     நீர்த்தரங்கம - நீர் நிறைதலால் உள்ள அலைகள். தண்ணிய
நீர்மை கொண்ட அலைகள் என்றலுமாம்.

     நெடுங்கங்கை - கங்கை வெள்ளத்தின் அளவிடலாகாத
பெருமை கூறியவாறு.

“நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு,
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு“
                     - திருப்பூந்துருத்தி - 1
“கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்,
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்“
                     - திருப்பூவணம் - 5
“பகீரதற்காய் வானோர் வேண்டப் படர்ந்திழியும்
புனற்கங்கை பனிபோ லாகச், செறுத்தானை“
                     - திருவீழிமிழலை - 10

என்பனவாதி திருத்தாண்டகத் திருவாக்குக்கள் காண்க.

     நீண்முடி - நீண்ட சடையாகிய முடி. இது சிவபெருமானுக்கே
உரிய சைவத்திருவடையாளங்களில் ஒன்று. இதன் விரிவு
மும்மையாலுலகாண்ட மூர்த்தியார் புராணத்துக் காண்க. “சடைமுடி
சாட்டியக் குடியார்க்கு “என்பது திருவிசைப்பா பிரமனுங் காணாமே
நீண்ட திருமுடி எனினுமமையும். “போதார் புனைமுடியும் எல்லாப்
பொருண்முடிவே“ என்னும் திருவாசகத்தின்படி எல்லா
அளவைகளையும் கடந்து நீளநீளச் செல்லும் திருமுடி
என்றுரைத்தலும் பொருந்தும்.

     சாத்தும்வெண்மதி - இயல்பிலே குளிர்ந்த அமுத உருவாகிய
சந்திரன் கங்கையின் சார்பினால் மேலும்மேலும் அதிக குளிர்ச்சி
பெறுவன் என்பது குறிப்பு.

     தண்மதி - தண்ணிய இயல்புட னிருக்கத்தக்க மதி. தண்ணிய
இயல்புடையவனாகிய மதியாயினும் அவ்வாறின்றி இயல்புக்கு மாறாய்
அழற்கதிர் தூர்ப்பதே என்க. 165