313. பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்
 
  சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினிற்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றதெங் கோ?தமிழ் மாருதம்!
167

     (இ-ள்.) தமிழ் மருதம்! - இனிய தென்றலே!; பிறந்தது ........
மலயத்திடை - நீ பிறந்தது எங்கள் பெருமானாகிய இறைவனுடைய
பொதிய மலையிலேயாம்; சிறந்து ........ புறம்பணைத் தடம் -
(அவ்வாறு பிறந்த இடத்தினின்று இங்குச் சிறப்புப்பெற்று வந்து)
சேர்ந்த வழியாவது தெய்வத் தன்மை பொருந்திய சோழநாட்டுத்
தடாகங்களின் வழியாம்; பொங்கு ..... எங்கோ? - (இவ்வாறாகவும்)
தீக் காற்று வீசும்படியாக நீ வன்மை பழகியது எங்கேயோ? (மாருதம்
- அண்மைவிளி).

     (வி-ரை.) தமிழ - இனிமை. இனிய மொழியாதலின் தமிழ்
மொழிக்குக் காரணப் பெயராய் வந்ததென்பர். “தமிழ் தழீஇய சாயல்“
என்றதும் காண்க. மலயத்திலே தமிழ் முனியிருத்தலின் அங்கே
பிறந்த மாருதம் தமிழ் மாருதமாயிற்று என்று கொண்டு தமிழுடன்
பயின்ற மாருதம் என்றுரைத்தலுமொன்று.

     எங்கள் பிரான - எமது இறைவனுடைய மலையிலே
பிறந்தனை யாதலின் அந்நண் புரிமையால் எங்களுக்கு இடையூறு
செய்தலாகாது என்ற குறிப்பு. பிரான் - தண்ணிய அருளுடையான்.
பெருமான் என்பதன்மரூஉ என்றுங் கூறுவர். “சுழலார் துயர் வெயிற்
சுட்டிடும் போதடித் தொண்டர் துன்னும் நிழலா“கும்
திருவடிகளையுடையவன்.

      மலயம் - பிரானது குளிர்ந்த சார்பன்றியும் தன்
இயல்பாலேயும் குளிர்ந்தது. எனவே நீ பிறந்த இடம் இருவகைக்
குளிர்ச்சி பொருந்தியது என்க.

      சிறந்து அணைந்தது - நீ புகுந்த இடமானது நீர் நாட்டினிற்
புறம்பணைத் தடம். காவிரி கால்வாய்ப் பிரிந்து ஓடும் நீர்களாலும்,
நிற்கும் நீர் நிலைகளாகிய புறம்பணைகளாலும் இருவகையிலும்
குளிர்ந்தது நீ புகுந்த இடம். இந்நீர் தெய்வத்தன்மை
பொருந்தியதாதலின் நீ பிறந்த மலையத்தைப்போலவே இதுவும்
இரண்டு வகையிலும் குளிர்ந்தது.

      பொங்கு அழல் வீசிட - அழலின் தன்மை பொருந்திப்
பெருகி வீசும்படியாக. நீ பிறந்த இடமும் புகுந்த இடமும்
தண்மையுடையனவாகவும் அழலையுளதாக்கிப் பொங்க வைத்து
வீசுமாறு. அழல் - நெருப்பு. அழல் போன்ற வெங்கதிர்களைக்
குறித்தது ஆகுபெயர்.

      மறம் பயின்றது - வன்மை பழகியது. வீசிடும்படிச் செய்யும்
வன்மை. பிறந்த இடமும், புகுந்த இடமுமல்லாது பயிலுதற்கு வேறு
இடமில்லை யாதலின் வேறு எங்கோ? என்று வினாவினார்.
பிறந்ததும் புகுந்ததுமாகிய இடத்தினல்லாது பிறக்கு முன்னரே
பொருந்திப் பயின்ற தென்பையேல் நீ தமிழ் இயல் உடையாய்;
ஆதலின் மறம் உனதியற்கை யன்று என்பார் தமிழ் மாருதம் என்று
கூறி முடித்தனர். தமிழ் நாவலராதலின் குறிப்பாய் அத்தொடர்பு
காட்டத் தமிழ் மாருதம் என்றாரென்பதுமாம்.

      310 திருப்பாட்டிலே முடித்த என்பார் எனும் எதிர்கால
வினைமுற்றை முறையே 311, 312, 313 பாட்டுக்கள்
ஒவ்வொன்றினிறுதியிலும் - தண்மதி! என்பார் - என் செய்யாய்?
என்பார் - மாருதம்! என்பார் - எனக்கூட்டி முடித்துக்கொள்க.
நம்பிகள் சொல்பவை அன்றிரவு ஆரூர்ப்பெருமான் திருவருள்
செய்கின்றவரையில் நிகழ்ந்து கொண்டிருந்தனவாகலின் என்பார்
என எதிர்கால வினைகொண்டு முடித்தார். 167