321. “கந்தங் கமழ்மென் குழலீ!ரிதுவென்?
     கலைவாண் வதியங் கனல்வா னெனையிச்
 
  சந்தின் றழலைப் பனிநீ ரளவித்
     தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்திங் குலவுந் நிலவும் விரையார்
     மலயா னிலமும் மெரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவுஞ்
     சடையா னருள்பெற் றுடையா ரருளார்.“
175

     (இ-ள்.) கந்தம்......கனல்வான் எனை - வாசனை வீசும்
மெல்லிய கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்!
அமிர்த கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச்
சுடுவாயினாயினான்; இச்சந்திரன்......தவிரீர் - இந்தச் சந்தனக்
குழம்பைப் பனிநீருடன் கலந்து என்மேல் பூசுகின்ற கொடியீர்களே!
நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர்; வந்து........வரும் ஆல் -
இங்குவந்து உலாவி நிற்கும் தென்றலோ தீயுருவமாய் வருகின்றது;
அம்......அருளார் - அழகிய குளிர்ந்த கங்கைப் புனலையும்
பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம்
சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ
என்பால் அருள் செய்கின்றாரில்லை.

     (வி-ரை.) கலைவாண் மதியம் கனல்வான் - அமுத
கலைகளால் ஒளி வீசுபவன் அதற்கு மாறாகக் கனல் வீசுகின்றான்
என்றதாம். திணை வழுவமைதி. கனல்வான் - வானீற்றுத்
தொழிற்பெயராகக் கொண்டு கனலுதல் என்றுரைத்தலுமாம். எனை -
யாது காரணம்பற்றி என்று பொருள் கூறுவாருமுண்டு. விரகத்தாற்
கூறும் மொழியாதலின் திணையும் காலமும் மயங்கக் கூறினார்
என்றலுமாம். எனை - என்னை.

      சந்தின் தழலைப் பனிநீர் அளவித் தடவும் கொடியீர்! - சந்து
- சந்தனம். மேலே “ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர் நறுந்திவலை
அருகு வீசி“ எனச் சொன்ன உபசாரம் இங்கே குறிக்கப் பெற்றது.
நீங்கள் தடவுகின்றது சந்தனம் அளைந்த நீராயில்லாமல்
நெருப்பையே தடவுகின்றதா யிருக்கிறதே.

     கொடியீர்! - ஆதலின் நீங்கள் கொடியவர்களே! தடவும்
கொடி போல்பவர்களே என்பதுமாம்.

      தவிரீர்! தவிரீர்! - அடுக்கு ஆற்றாமையின் மிகுதியைக்
குறித்தது. தவிர மாட்டீர்கள். விடாது செய்கின்றீர்கள்! என்க.
தவிருங்கள், தவிருங்கள் என்று வியங்கோளாக அடுக்கிய
குறிப்புமாம்.

      வந்திங்கு உலவும் மலயானிலம - மேலே வரும் தென்றல்
என்ற இடத்துக் காண்க. மலய அனிலம் - பொதிய மலையிலிருந்து
வரும் காற்று.

      அந்தண் புனலும் அரவும் விரவும் சடையார் - விடமுள்ள
அரவு வைத்தாரேனும் விடத்தாலும் தீயாலும் அவிந்தாரையும்
பிழைப்பிக்க வல்ல அழகிய தண்ணிய கங்கை நீரையும் உடனே
வைத்தார். அவரருள் பெற்றாரும் அத்தன்மையாரே ஆதல்
வேண்டும் என்பது குறிப்பாம்.

      தத்தம் இயல்புக்கு மாறாகி நின்ற நிலாவின் கனலும், சந்தின்
தழலும், மலயானிலத்தின் எரியும், ஆக மூன்று தீயும்கூடிச் சுடநின்ற
என்னைக் காக்க வல்லது அந்தண் புனலுடையார்
அருள்பெற்றுடையாரது அருளே. அவரும் இவை போலவே
அவ்வருளியலுக்கு மாறாகி விட்டாரோ என்பது குறிப்பு.

      அருள் பெற்றுடையார் - அருளைப் பெற்ற அதனால்
என்னையுடையவர் என்க. “தம்பிரான் றோழனார்“ என்று
உயிர்ப்பாங்கி அறிவிக்க உணர்ந்த குறிப்பு. 175