328. தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர்
 
  சென்னியிலுஞ் சிந்தையிலு மலர்வித்துத்
                           திருப்பதிகம்
பன்னுதமிழ்த் தொடைமாலை பலசாத்திப்
                           பரவையெனு
மின்னிடையா ளுடன்கூடிவிளையாடிச்
                           செல்கின்றார்.
182

     (இ-ள்.) தன்னை.....மலர்வித்து - (நாவலூர் மன்னன், தம்மை
ஆளாக உடைய சிவபெருமானது பாததாமரைகளைத் தலைக்கு
அணியாக மேற் சூட்டியும், மனத்தினுள் நினைத்தும்;
திருப்பதிகம்...சாத்தி - திருப்பதிகமாகிய தமிழ்ச் சொற்றொடை
மாலைகள் பலவற்றை அருளியும்; பரவை....செல்கின்றார் - பரவை
எனும் தேவியாருடன் கூடிவிளையாடி வருவாராயினார்.

     (வி-ரை.) நாவலூர் மன்னன் எனும் எழுவாய்
மேற்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது.

      மலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து - மலரைச்
சென்னியிற் சூட்டுதலும், மனத்தில் மலரச் செய்தலுமாம். சென்னியிற்
சூட்டுதல் சென்னியில் வைத்துச் சிந்தித்தல். “சேவடிக்கணஞ்
சென்னிமன்னித் திகழும்“ - திருவாசகம். “சிரஹிஸம்சிந்த்ய“ என
ஆகமங்கள் விதிக்கும். சிந்தையில் மலர்வித்தலாவது மனத்திலே
முழுதும் மலர்ந்து பயன்தருமாறு செய்தல். இவ்வாறு ஈரிடத்தும்
மலர்வித்தல் ஒரு செயல். அதன் பயனாக, அவ்வாறு வைத்துச்
சிந்தித்தலினாலே, திருப்பதிகமாகிய பன்னு தமிழ்த்
தொடைமாலைபலவும் போந்தன. அவற்றையே இறைவனுக்குச்
சாத்தினார்.

“புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்
பொற்பாத மெப்போதும் போற்றல் செய்வாம்“
                     -சித்தியார் - பரபக்கம்

     மலர்வித்து - சாத்திக் கொண்டே விளையாடியும்
செல்கின்றமையால் மேலே யோகம் பரம்பரையின் விரும்பினார்
என்றது சிவயோகத்திலேநிலைத்த உணர்ச்சி பிறழாமலே வாழ்ந்தனர்
என்பது பெறப்படும். திருமலையிலே “மெல்லிய லாருடன்
காதலின்பம் கலந்து“ எனவும், திருவாரூரிலே “நின்வேட்கை தீர
வாழி மண்மேல் விளையாடுவாய்“ எனவும் பெருமான் நம்பிகளுக்குத்
திருவருள் புரிந்தவை இங்கு “மின்னிடையாள் உடன் கூடி
விளையாடிச் செல்கின்றார்“ என்பதனுடன் வைத்து உணர்தற் பாலன.
மலர்வித்து என்பது தம்மிடத்தும், சாத்துதல் என்பது பிரானிடத்தும்
நிகழ்ந்தமையால் பிரித்துக் கூறினார்.

     செல்கின்றார் - வாழ்ந்து வருகின்றார் என்னும் பொருளில்
வந்தது. வாழி மண்மேல் விளையாடுவாய் என்று முன்னர்க் கூறியதற்
கேற்ப இப்பொருள் கொள்ளப் பெற்றது. 182