334. பொலங்கலம் புரவி பண்ணிப் போதுவார் முன்பு
                                  போத
 
  விலங்கொளி வலயப் பொற்றோ ளிடையிடை
                        மிடைந்து தொங்க
னலங்கிளர் நீழல் சூழ நான்மறை முனிவ ரோடும் அலங்கலந் தோளி னான்வந் தணைந்தன
                       னண்ணல் கோயில்.
188

     (இ-ள்.) வெளிப்படை. அழகிய அணிகள் பூண்ட ஆடற்
குதிரைகளை ஆடச்செய்து வருவார் முன்பு செல்லவும், ஒளிவீசும்
வாகுவலயங்களை அணிந்த தோள்களின்மீது இடையிடை நெருங்கக்
கட்டியதால் மயிற்பீலிக்குஞ்சங்களின் நன்மைதரும் நிழல் சூழவும்,
மாலையணிந்த அழகிய தோள்களையுடைய நம்பிகள் வேத
முனிவர்களுடனே, வந்து தியாகேசரது திருக்கோயிலை அணைந்தார்.

     (வி-ரை.) பொலங்கலம் புரவி பண்ணிப் போதுவார் -
குதிரை போல உருச்செய்து அதன்மேல் இருப்பதுபோல ஆடிச்
செல்லும் ஆட்டக்காரர். பொய்க்காற் குதிரை யென்பர். இது
இந்நாளும் பெரும்பாலும் தஞ்சைக் சில்லாவிற் பெரிய நகர்
வலங்களிற் காணப் பெறும்; முன்புபோத - கடா முதலியவற்றிற்கு
முன்னேசெல்ல; பின்புபோத - என்பது பாடமாயின் உண்மைப்
பிராணிகளான கடா முதலியவை முன்னும், பிராணி
போன்றனவாதலின் இவை பின்னும் போயின என்க. அன்றியும்
கோயிலுக்கு அணிமையிற் செல்லும்போது இவை பின் செல்வதும்
முறையாம். பொன்னனிகளாற் குதிரையை அலங்கரித்து வருபவர்
பின்னே வர - நாயனார் தங்கள் நாதனாரைக் கும்பிட்டுத் திரும்பி
வரும்போது இவர்ந்து வருதற்பொருட்டுப் புரவியைப்
பொன்னணிகளாற் புனைந்து கொண்டு வருவோர் பின்பு போத -
என்பது சித்தாந்தச் செல்வர் - சொக்கலிங்கச் செட்டியார்
உரைக்குறிப்பு.

     மிடைந்து - மிடைவதனால். தொங்கல் இடையிடைமிடைந்து
நலங்கிளர் நீழல் - என்று கூட்டுக. மயிர் பிஞ்சங்கள் விசிறி போன்ற
வடிவினவாய்ப் பித்த சாந்தியான உபசாரத்தின் பொருட்டுத் தாங்கப்
பெறுவன. அதனால் நலங்கிளர் நீழல் என்றார். மிடைந்து கிளரும்
என்க. தொங்கல் - அரதனமாலை எனவும், நீழல் - ஒளி எனவும்
கூறுவாருமுளர்.

     அலங்கலத் தோளினான - அலங்கல் -
திருவடையாளமாலை. ஆணையின்படி மணக்கோலத்தோடு
செல்கின்றாராதலின் மாலையணிந்த தோளினான் என்றார்.

     அண்ணல் - வரையாது கொடுக்கும் தியாகேசராதலின்
அண்ணல் என்றதாம். பின்னர் நம்பிகள் காண வெளியே வந்து எதிர்
காட்சி கொடுத்தும், திருத்தொண்டர்களது வழித்தொண்டுகளை
உண்ணின்று உணர்த்தியும், அவர்களைப் பாடுக என்று
ஆனையிட்டும், அதற்குத் தாமே அடியெடுத்துக் கொடுத்தும்,
உலகிற்கு உய்யும் வழி காட்டிப் பேரருள் செய்ததும் குறிக்க.

     கடா முதலியனவற்றைப் பற்றிச் செல்லும் கடையோர் முதல்
முனிவர்கள் வரை உள்ள எல்லாத் தரத்தவர்களும் போற்றும்
பெருந்தகையுடையார் நம்பிகள் என்பதும் இவ்விரண்டு பாட்டுக்களின்
குறிப்பாம்.

     முனிவரோடும - ஏனையோரெல்லாம் சூழ்ந்தும் முன்னும்
பின்னும் வரவும், அவர்களிற் கலவாது முனிவர்களோடும் கோயில்
அணைந்தார் என்க. கோயில் அணையும் போது உடன்
அணையத்தக்கார் முனிவரேயாதலின். “மெய்த்தவர் சூழ
வலங்கொண்டு திருமுன் மேவுவார்“ (ஏயர்கோன் - புரா - 89) என்று
பின்னர்க் கூறுதல் காண்க. “துறந்த முனிவர் தொழும் பரவை
துணைவா“ என்றார் சிவப்பிரகாசனார். மேலே கூறிய “இந்திரத் திரு“
விற்குள்ளே நின்றும் அதிற் சிறிதும் படாது மனத்தை இறைவன்பாற்
செலுத்திய யோக நிலையினர் நம்பிகள். முளிவர்களோ உலகைத்
துறந்தும் இறைவனிடத்து மனப்பற்று நிலைக்கப் பெறாது முயல்வோர்.
ஆதலின் முனிவர் நம்பிகளைச் சூழ்ந்து சென்றனர் என்க.  188