336. “அடியவர்க் கடிய னாவே“ னென்னுமா தரவு
                                  கூரக்
 
  கொடிநெடுங் கொற்ற வாயில் பணிந்துகை
                       குவித்துப் புக்கார்;
கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தா ரவர்க்கெதிர்
                         காணக் காட்டும்
படியெதிர் தோன்றி நிற்கப், பாதங்கள் பணிந்து
                                 பூண்டு,
190

     (இ-ள்.)வெளிப்படை. நான் இந்த அடியார்களுக்கு
அடியேனாவேன்' என்னும் அன்பு தமது திருவுள்ளத்திலே
மேலிட்டெழக், கொடிகள் கட்டியதாய், நெடியதாய், வெற்றியே
தருவதாய் உள்ள உட்கோபுரத் திருவாயிலைப் பணிந்து, கைகளைச்
சிரமேற் கூப்பிக்கொண்டு, திருக்கோயிலினுள்ளே நம்பிகள் புகுந்தார்.
(அப்போது) மணமும் அழகும் உடைய கொன்றை மலரைச்சூடிய
தியாகேசர் அவர் எதிர்காட்சி காணக் காட்டுமாறு அவர்க்கு எதிரே
தோன்றி நிற்க(க்கண்டு) அவரது சீபாதங்களை வணங்கி அவற்றைச்
சிரமேற்றாங்கிக் கொண்டவராய்; (பின்வரும் நான்கு
திருப்பாட்டுக்களிற் கூறியவாறு துதிப்பாராயினர்.)

     (வி-ரை.) ஆதரவுகூர - அன்புமிக. ஆதரவு - சார்பிலே
எழும் விருப்பம். கூர்தல் - மிகுதல்.

     கொடி நெடுங் கொற்ற வாயில - கொடி - கோபுரங்களின்
மீதும் வாயில்களின் மீதும் வெண் கொடிகள் உயர்த்திக் கட்டுதல்
மரபு. “வெண்கொடியாடும்“ என்றுமுன்னர்க் (243) கூறியதும் காண்க.
நெடும் - பெரியோர் உள்ளம்போல ஓங்கிய. “விளங்கும் வாயில்,
அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம்போல, ஓங்குநிலைத்
தன்மையவாய்“ (திருகுறிப்பு. புரா. 88) என்பது காண்க. கொற்றம் -
வாயில் வெற்றி பொருந்திய தாதல் - அதாவது எஞ்ஞான்றும் தீமை
உள்ளே வாராமற் காத்தல். “உலகுய்ய உமைபாகர் அருள் செய்த
வொழுக்கமல்லாற், றீங்குநெறி யடையாத தடையுமாகி“ (திருக்குறிப்பு
- புரா - 88) என்பது காண்க. வாயில் - இது தேவாசிரியனை
வணங்கியதும் திருக்கோயிலுனுள்ளே புகும் முதற்றிருவாயில். 166
பக்கம் - படம் பார்க்க.

     காணக் காட்டும்படி - காணுமாறு காட்டும்படி. இறைவன்
காட்டுவித்தாலன்றி உயிர்கள் காணா; ஆதலின் காணக் காட்டும்
என்றார். “காட்டுவித்தாலாரொருவர் காணாதாரோ காண்பாரார்
கண்ணுதலாய் காட்டக்காலே“ என்பது தேவாரம். நம்பிகள்
காணுமாறு காட்டுவதற்காக எதிரே தோன்றி நிற்க என்க.

     பாதங்கள் - எதிர் நின்றனவாகிய திருவடிகள். இவையே
சத்தியின் வியாபகம். இவற்றைக் காணுமாறு காட்டிய வகையினாலே
இவ்வியாபகத்திலே நிறைந்தவர்களாயும், திருவடி நிலையர்களாதலின்
அடியவர்கள் எனுங் காரணப் பெயர் பெற்றாராயுமுள்ள
அடியவர்களின் தன்மையும், அவர்கள் பெற்ற பேறும்
உணர்த்தியவாறாயிற்று. அந்த ஆதரவுடன் நம்பிகள்
உட்புக்காராதலின் அவர் வேண்டிய அதனையே தரும்படி இறைவன்
தமது பாதங்களைக் காணக் காட்டினார். முன்னர் “அந்நிலை
யவர்தாம் வேண்டு மதனையே அருள வேண்டி“ என்றது
இக்கருத்துப்பற்றியே என்க.

     பூண்டு - தலைக்குப் பூணாகச் சூடிக்கொண்டு. 1190


     குறிப்பு. 1இப்பாட்டின் கீழ்த் திருநெல்வேலிச் சுவடிகள்
சிலவற்றில் 16 பாட்டுக்கள் அதிகமாகவும் இடைச் செருகலாகவும்
காணப்படுகின்றன. அவற்றை இப்புராணத்திறுதியில் அநுபந்தத்திற்
காண்க.