343. நாதனா ரருளிச் செய்ய, நம்பியா ரூரர்“ நானிங்  
  கேதந்தீர் நெறியைப் பெற்றே“ னென்றெதிர்                        வணங்கிப் போற்ற,
“நீதியா லவர்க டம்மைப் பணிந்துநீ நிறைசொன்                                  மாலை
கோதிலா வாய்மை யாலே பா“டென வண்ணல்                                   கூற.
197

     (இ-ள்.) வெளிப்படை. (இறைவன் அருளிச்செய்தாராக)
நம்பிகள் “நான் குற்றந்தீர் நெறியை இங்கு அடையப்பெற்றுய்ந்தேன்“
என்று துதித்து எதிர்வணங்கி நிற்க, “விதிப்படி இவர்களை நீ
வணங்கி நிறையசொன்மாலையைக் குற்றமில்லாத
உண்மைத்தன்மையாலே அவர்களைப் பாடுவாயாக“ என்று இறைவன்
அருளிச்செய்ய,


     (வி-ரை.) ஏதம் தீர் நெறி - குற்றங்கள் தீர்தற் கேதுவாகிய
நெறி. “ஏத மானவை தீர்க்க விசைந்தன“ (339) என்றமை காண்க.
இங்கு நெறி என்றது அடியவர் கூட்டத்து அணைவதனை. இது
சிவஞானபோதம் 12-ம் சூத்திரத்திலே விதந்து பேசப் பெறுவதாம்.
இப்புராணத்தி னுட்பொருளாய் விளங்குவது இதுவே. மலந்தீர்ந்த
சீவன்முத்தர்க்கும் வாசனாமலத்தையும் வாராமற்காத்துதவுவது
அடியார் கூட்டமேயாம் என்பது சாத்திரம். தீர்த்தல் - தீர்தற்
கேதுவாதல்.

     நீதியால - அடியவர் வணக்கத்திற்குச் சாத்திரங்களில்
விதித்தபடி.

“ஆசையொடு மானடியா ரடியாரை யடைந்திட்
டவர்கரும முன்கரும மாகச் செய்து

கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே“

எனவரும் சிவஞானசித்தியார் முதலிய சாத்திரவிலக்கணங்களிலும்,
இளையான்குடி மாற நாயனார் முதலியோர் சரிதவிலக்கியங்களிலும்
கண்ட நீதி.

      நிறை சொன் மாலை - நிறை சொல் - “அருளிக் கூறினும்
வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி“
என்பர் பரிமேழலகர். ஈண்டு இம்மொழிகள் தம்முடைய பயன்களைப்
பயந்தேவிடுதலாவது தேவாரத் திருவாக்குக்களின் விளையும் உறுதிப்
பயன்களாம். முதலைவாய்ப் பிள்ளை அழைத்தல் முதலியவற்றிற்
கண்டுகொள்க.

     கோதிலா வாய்மை - குற்றங்களை இல்லையாகச் செய்யும்
உண்மைத் தன்மை. “வாய்மையெனப் படுவதி யாதெனில்
யாதொன்றுந், தீமையிலாத சொலல்“ என்னும் குறளும், அதில்
தீமையிலாத - என்பதற்குத் தீமைபயவாத என்ற உரையும் இங்கு
வைத்துக் காண்க. “நாவின் வாய்மையாற் போற்றினார்“ (திருஞான -
புரா - 1078), “போதியோ வென்னும் - அன்னமெய்த்
திருவாக்கெனும் மமுதம்“ (மேற்படி 1088), “குரும்பை
யாண்பனையீனும் என்னும் வாய்மை குலவுதலால்“ (மேற்படி 980)
முதலிய ஆணைகளின் இலக்கணத்தை நோக்குக.

     சொன்மாலை - சொல்லாலாகிய மாலை.
     கோதிலா வாய்மையாலே பாடு -

“...........நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு மாதலான் மண்மே னம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்.....“
(216)

என முன்னர்த் தம்மைப் பாடுமாறு ஆணையிட்ட பரமன், இப்போது
அதுபோலவே தம் திருவாக்கினால், தமக்கும் தம் அடியவர்க்கும்
பேதமின்மையை விளக்கி, “இவர்களை நிறைசொன் மாலை பாடுக“
என்றருளியது காண்க. தம்மைச் சொற்றமிழ் பாடுக என்றவர்,
அவர்களை நிறைசொன் மாலை பாடு என அடைகொடுத்துக் கூறியது
அவர்களது ஏற்றத்தை எடுத்துக் காட்டியபடியாம். 197