35. மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
 
  தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேன்மனம் போக்கிடக்
காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்.
25

     (இ-ள்.) மாதவம் ... வாழ்ந்திட - பெருந்தவம் செய்த
தென்றிசைப்பூமி வாழ்வடையவும்; தீதிலா ...... தர - தீதிலாத
திருத்தொண்டத் தொகை என்னும் நிதியை உலகுக்குக் கொடுக்கவும்;
போதுவார் - போக்கிட - போவாராகிய ஆலாலசுந்தரர்
அச்சேடியர்களின் மேல் மனத்தைச் செலுத்த; காதல் ... கண்ணினார்
- அவ்வாறு காதல் பெற்ற அவ்விரு பெண்களும் காட்சித்
துறையிலே ஈடுபட்டனர்.

     (வி-ரை.) தென்றிசை - இந்நில வுலகமாகிய அண்டத்திற்
பரதகண்டத்தில் விந்த மலைக்குத் தெற்குத் திசையில் உள்ள நிலமும்
நீருமாகிய பகுதி.

     மாதவம் செய்த தென்றிசை என்றது - எல்லாப்
புண்ணியங்களுக்கும் மேம்பட்ட சிவபுண்ணியம் செய்ய
ஏதுவாயுள்ளது பற்றி மாதவம் செய்த என்றார். இதனாலே இது
புண்ணிய பூமி எனப்பெறும். இதனை 31 முதல் 36 வரை உள்ள
திருப்பாட்டுக்களிலே ஆசிரியர் உபமன்னிய முனிவரது திருவாக்கிலே
அமைத்து விரிக்கின்றார். மேல் - கீழ் - நடு என்ற மூன்று
வகை உலகங்களிலும் நடுவாகிய பூவுலகம் சிறந்தது. மேல் உலகம் ஆகிய தேவருலகம் புண்ணியலோகம் என்பர். புண்ணியங்களுக்
கேற்க இன்பானுபவத்திற்கே உரியது. கீழ் உலகமாகிய நரக லோகம்
பாவத்திற்கேற்கத் துன்பானுபவத்துக்கே உரியது நிலவுலகம்
இரண்டுக்கும் உரியதாம். அதுவேயுமன்றிச், சிவபூசை
சிவதர்மங்களுக்கும் ஏற்றதாய் வீட்டுக்கும் வழிதரும். மற்ற இரண்டும்
அவ்வாறன்றி அந்தந்த அனுபவங்கள் தீர்ந்ததும் பிறவியிற்
செலுத்துவன. இந்தப் பூவுலகத்திலும் வேத சிவாகமங்களும் தமிழ்
வேதங்களும் பிறந்து வழங்குதலாலும், புண்ணிய நதிகளும் புண்ணிய
சிவதலங்களும் உள்ளனவாதலாலும் பரதகண்டம் சிறந்தது.
இப்பரதகண்டத்திலேயும் வடக்குப் பிரதேசத்திலே புண்ணிய நதிகளிருந்தாலும் எல்லாத் தேவர் இருடிகள் முனிவர்
முதலியோர்களும் வந்து பூசித்துப் பேறு பெற்ற தென்றிசை
சிறந்ததாம்.

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாருந் திலைவனந் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை யிவைசிவ பூமியே.
- திருமுலர் திருமந்திரம் - திருக்கூத்துத் தரிசனம் - 26

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்

பேறான வேதா கமமே பிறத்தலால்
மாறாத தென்றிசை வையகஞ் சுத்தமே.
 
- திருமந் - ,, - 34.

என்ற பிரமாணங்களும் காண்க. இவ்வாறு முன்னரே தவஞ் செய்து
சிறந்துள்ள தென்றிசையும் ஆலால சுந்தரர் திருவவதாரத்தால்
வாழ்வையடைந்தது என்பார்“ (மாதவம்) செய்த தென்றிசை
வாழ்ந்திட” என்றார்.

     வாழ்ந்திட - முன்னரே மாதவம் செய்து புண்ணிய
பூமியாயிற்றாயினும், அந்நிலையின் பெருவாழ்வை அடைந்து மேலும்
நிலைத்திருக்கும் பொருட்டு என்க. வாழ்ந்து, (அவ்வாழ்வின் பயனை அத்திசையிற் சேரும் உயிர்களுக்கு) இட - கொடுக்க - என்க.

     தீதிலாத் திருத்தொண்டத் தொகை - உயிர்களுக்கு உள்ள ஆணவமாதி தீமைகளை யெல்லாம் இல்லையாகச் செய்யும்
திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகம். இத்திருப்பதிகம்
ஒன்றே தன்னைப் பயில்வார்க்கு எல்லாத் தீமையும் போக்கி எல்லா
நன்மையும் அருள வல்லது என்றவாறு. இதன் உண்மையைச்
சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திரத்துக் காண்க.

     தீதிலா - என்பதற்குத் தீமையை இல்லையாகச் செய்யும் என்று
பொருளுரைக்கப் பெற்றது சிவஞான போதத்திலே “கல்லானிழல்”
என்ற காப்புச் செய்யுளில் “மலைவில்லார்” என்பதற்கு மலைவை
இல்லையாகச் செய்தவர் எனப்பொருள் கண்டதைப் பின்பற்றி.
(மலைவு - மயக்கம்)

     திருத்தொண்டத் தொகை - எல்லாக் காலத்தும்,
எவ்விடத்தும், உள்ள எல்லாத் தொண்டர்களையும் தொகுத்துக்
கூறுவது. பிறிதொன்றினின்றும் எடுத்துத் தொகுத்தது என்பது
பொருள் அன்று.

     போதுவார் - தென்றிசையிலே அவதரிக்கப் போதுவாராகிய ஆலாலசுந்தரர்.

     அவர்மேல் - அவ்விரு சேடியர்மேல்.

     போதுவார் ... போக்கிட - காரணகாரிய சம்பந்தம்; மனம்
போக்குதல் காரணம் - போதுதல் காரியம்.

     மனம் போக்குதல் - மனங்கலந்த காட்சி. பின்னர் “காட்சியில்”
என்பதும் இது. வாழ்ந்திடவும், தரவும் - போதுவார் - ஈசரருளென
வந்து - அவர்மேன் மனம் போக்கிட - என இவ்விரண்டு
பாட்டுக்களையும் கூட்டி முடிக்க.

     காதல் - அவர் மனம்போக்கக் காரணமாயிருந்த காதல்.
காதலைக்கொண்ட மாதர்.

     மாதரும் - உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. போதுவார் மனம் போக்கியது போலவே மாதரும் - என்க.

     காட்சி - அகப்பொருட்டுறைகளிலே தலைவன் தலைவியர்
நேர்பட்டபோது முதலில் நிகழ்வது. இதன் விரிவுகளை அகப்பொருளி
லக்கணங்களிலும், திருச்சிற்றம்பலக் கோவையார் முதற் பாட்டுக்குப்
பேராசிரியர் கண்ட உரையிலும், பிற இடத்தும் கண்டுகொள்க.

     இங்ஙனம் ஆலால சுந்தரர் மனம் போக்கிக் கண்ட காட்சியின்
விளைவாகிய தொடர்ச்சி, காணப்பட்ட அவ்விருவருள், கமலினியார்,
இத்தென்றிசையில் பரவையாராய் வந்து சேர்ந்தபோது திருவாரூரில் நிகழும் : அனிந்திதையார், சங்கிலியாராய் இத்தென்றிசையிலே
வந்துழித் திருவொற்றியூரில் நிகழும். இவற்றை முறையே,

“... நற்பெரும் பான்மைகூட்ட நகைபொதிந் திலங்கு                                   செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண விளங்கிழை யவரைக்                                   கண்டார்”
                          தடுத் - புரா - 139

எனவும்,

“... முன்பு போலத் திரைநீக்கி முதல்வர் சாத்தும்                             பணிகொடுத்து
மின்போன் மறையுஞ் சங்கிலியார் தம்மை விதியாற்
                            கண்ணுற்றார்”
       
                          ஏயர் - புரா - 226

எனவும் கூறியவற்றாலே தெளிக.

     காட்சியின் பின் தலைவராகிய சுந்தரர்பால் நிகழும் ஐயம் தெளிதல் மருங்கணைதல், முதலிய ஏனைத் துறைகள் பின்னர்த்
தென்றிசையில் திருவாரூரிலும் திருவொற்றியூரிலும் நிகழ்வன காண்க.
தலைவியராகிய அக்காதன் மாதர்பால் காட்சியின் பின் நிகழும்
தொடர்ச்சிகளும் இவ்வாறே கண்டுகொள்க.

     காட்சியிற் கண்ணினார் - காட்சியிலே பட்டார்கள்.
கண்ணுதல் -கருத்து அமைதல். போதுவார் மனம்போக்க மாதரும்
காட்சியிற் கண்ணினார். இரு திறத்தார் நோக்கமும் ஒத்து ஒரு
நோக்காக நிகழ்ந்தன என்றவாறு.

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில” எனும் திருக்குறட் கருத்தை இங்கே                                 பெய்து காண்க.

இங்கு காட்சி மட்டும் நிகழ்ந்ததன்றி மேலே நிகழ்வனவாகிய சொல்
முதலியன நிகழ்வதன் முன்னரே இருதிறத்தாரும், ஒருவருக்கு ஒருவர்பால் சென்ற தத்தம் மனங்களைத் திரும்பக்கொண்டு, மலர்
கொய்து சென்றகன்றனர் என்பார், வருகின்ற பாட்டிலே “முன்னம்”,
“செல்ல” “அகன்ற” என்று கூறுவார். காட்சியேயன்றி வேறொன்றும்
நிகழாவிடினும் மனங் கலந்த இக்காட்சியே வினைக்கு முளையாகிப்
பின்னே முளைத்து விளைந்தது காண்க. 25