353. பொங்கிய திருவி னீடும் பொற்புடைப் பணிக
                                  ளேந்தி
 
  மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற் றுதித்து
                                  மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பிற் றகும்பணி தலைநின்
                                 றுய்த்தே
யங்கணர் கோயி லுள்ளா வகம்படித் தொண்டு
                                செய்வார்,
4

     (இ-ள்.) வெளிப்படை. பெருகுகின்ற செல்வத்திற் சிறந்த
அழகிய திருவாபாணங்களை விதிப்படி அழகுபெற இறைவனது
திருமேனியிற் சாத்தி அலங்கரித்து, வேத மொழிகளாலே
தோத்திரஞ்செய்து, தாம் செய்தற்கேற்றனவாகிய உரிய பிற
பணிகளையும் சிறக்கச் செய்து, இறைவன் திருக்கோயிலுக்குள்ளே
அகம் படிமைத் திருத்தொண்டுகளைச் செய்து வருவார்கள(இவர்கள்);

     (வி-ரை.) திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை
நோக்கம். இது அப்பணிகளின் உள்ள மணிகள், வேலைப்பாடு
முதலிய சிறப்பாலும், அவை இறைவனுக்குரிய தன்மையாலும், அவன்
றிருமேனியைச் சிங்காரித்து அழகுபார்க்கும் வண்ணம் அடியார்கள்
மனத்தே விளைக்கும் விருப்பினால் மிகச் சிறந்தனவாயின. ஆதலின்
பொங்கிய திருவின் நீடும் என்றார். திரு - அருட் செல்வமெனவும்,
பணி - தொண்டு எனவும் கொண்டு, அருட் செல்வத்தின் மேம்பட்ட
திருத்தொண்டுகளை மேற்கொண்டு என்று கூறுதலுமொன்று.
அடித்தவம் புரிந்து வாழ்வார் என மேற்பாட்டிற் கூறியதனைத்
தொடர்ந்து விரித்தபடியாம். ஏந்தி - இக்காலத்தும்
பூசைமுறையுடையோர் பொற்பணிகள் அணிவதாலும், ஏந்தி எனத்
தன் வினையிற் கூறலாலும், பணிகள் ஏந்தி - பணிகளை
அணிந்துகொண்டு - என இதனை அந்தணர்க்கே ஏற்றிக்
கூறுவாருமுண்டு.

     மங்கலத் தொழில்கள - அணிகள், மணிகள், ஆடை, மாலை
முதலியவற்றை அணிந்து அலங்கரித்தல்.

மறைகளாற்றுதித்து -

“பணிந்தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன்முறையாற்
றுணிந்தமறை மொழியாலே துதிசெய்து“

                            - கண் - புரா - 140

என்றது காண்க. இவை வேதத்தின் துதி வசனங்களாகிய நமக
சமகங்கள், உருத்
திரம், இறைவனது தன்மை கூறும் உபநிடத
வசனங்கள், சிவாகம வசனங்கள், தேவார திருவாசக முதலிய
தமிழ்மறைகள் முதலியனவாம்.

     மங்கலத் தொழில்கள- என்றமையால் ஆகமவிதிப்படிக்குரிய
ஆவாகனாதி வல்லாப் பூசங்கங்களும், மற்றும் தரும்பணி
என்றமையாற் சாமரம், விசிறி முதலிய உபசாரங்களும் கொள்க.
மங்கலத் தொழில்கள என்றது நித்திய பூசையும், விழாச்
சிறப்புக்களுமாம்.

     அகம்படித்தொண்டு - திருக்கோயிலுக்குள்ளேயும்,
இறைவனது திருமேனியைச் சார்ந்து அணித்தேயும் செய்யப்பெறும்
அபிடேகம் முதலிய திருப்பணிகள்.

“அருவரைவில் லாளிதனக் ககத்தடிமை யாமதனுக்
கொருவர்தமை நிகரில்லார்“

                   - புகழ்த்துணை - புரா - 1

     திருக்கோயிலுள்ளிடமன்றிப் புற முன்றில்களிலும்,
வெளிப்புறத்தினிலும் திருவலகு திருமெழுக்கிடுதல், திருவிளக்கிடுதல்,
கீதம் பாடுதல், ஆடுதல், திருவீதி யலங்கரித்தல் முதலியன
புறத்தொண்டு எனப்பெறும். “நாளைப், போவா னவனாம் புறத்
திருத்தொண்டன்“ என்றதும் காண்க. 4