354. வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான்
                                   மல்கத்
 
  தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியிற்
                                 செல்லும்
அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்று
                                 வல்லார்;
திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் பொலிந்த
                                   சீரார்;
5

     (இ-ள்.) வெளிப்படை. அறத்தையே பொருளெனக்
கைக்கொண்டு, தத்துவ வழியிலே செல்கின்ற, நால்வேதங்களையும்
ஆறங்கங்களையும் மிகப் பயின்று அவற்றிலே வல்லாராய், உலகம்
அருள்பெற்று வாழும்பொருட்டு, விதிமுறையில் வரும் ஆகவனீயம்,
தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்னும் மூன்று எரிகளையும்
வழுவாது வளர்த்துக் காத்து, அருள்நடம் புரியும் இறைவனுக்கு
ஆட்செய்யப் பெற்ற அருட்செல்வத்தினாலே சிறந்துவிளங்கும்
சீர்மையுடையாராவர் (இவ்வந்தணர்கள்);

     (வி-ரை.) வருமுறை - உண்மை : நூல்களில் விதித்த
முறையிலே வருகின்ற முறை வரும் என மாற்றி உரைக்க.

     எரிமூன்று - மூன்றுவகைப்பட்ட எரி. அவற்றுள் ஆகவனீயம
- தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக்
குண்டத்தில் வளர்க்கப்படுவது. தெற்கில் அரைச்சந்திர வடிவமான
குண்டமிட்டு அதில் வளர்க்கப்பெறுவதால் தட்சிணாக்கினி எனப்
பேர் பெற்றது பிதிரர்களுக் குரியதென்பர். காருகபத்தியம்
ஆகவனீயத்தை அடுத்து வட்ட வடிவமைந்த குண்டமிட்டு வளர்க்கப்
பெற்று, இல்வாழ்வோரால் ஓம்பப்பெறுவதால் அப்பெயர் பெற்றது.
எரி மூன்று
- வைதிகாக்கினி, சைவாக்கினி, வைந்தவாக்கினி
என்பதுமொன்று.

     ஓம்பி - இறக்கும் வரை காக்கப்பெறுவது. இறந்தால்
அக்கிரியைக்கும் இதுவே உதவுவது.

     மன்னுயிர் - உலகிற் பிறக்கும் உயிர் யாவையும். மன -
நிலைத்தல். உயிர்கள் நித்தமாதலின் மன்னுயிர் என்றார். “நின்னளந்
தறிதல் மன்னுயிர்க் கருமையின்“ - திருமுருகாற்றுப்படை.

     தருமமே பொருளாக் கொண்டு - அறத்தையே
குறிக்கோளாக உட்கொண்டு,

     ஆறு அங்கம் - இவை வேதத்துக்கு அங்கமாகப்
பொருந்துவன. ஆறங்கம - சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம்,
நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்பன. இவற்றைக் கற்று
நிரம்பிய பின்னரே வேதப்பொருள் ஆராய்தல் வேண்டும் என்பது
விதி. பயின்று வல்லார் - “கற்க; கசடற“ என்றபடி பயின்றது
மாத்திரமன்றி
அதில் மிகுவன்மையும் படைத்துள்ளார். தருமம் -
பூருவ மீமாஞ்சையி்கண்ட யாகாதி கருமமும், தத்துவநெறி - உத்திர
மீமாஞ்சையிற் கண்ட பிரமோபாசனையும் குறித்தது.

     ஆளாம் திருவினாற் பொலிந்த சீர் - ஆள் ஆகும் திரு
அருட் செல்வம். “ஆட்பாலவர்க்கருளும் வண்ணம்“ - பிள்ளையார்.
தருமமே பொருளாக் கொண்டு ......... செல்லும் அருமறை ........
பயின்று வல்லாராய், அருளான் மன்னுயிர் மல்க .... ஓம்பி - ஆளாம்
திருவினால் ....... சீரார் - என்று கூட்டி முடிக்க. கொண்டு செல்லும்
அருமறை என்க. “அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா“ என்பது
தருமமீமாஞ்சை. “அதாதோ பிரம்ம ஜிஜ்ஞாசா“ என்பது பிரம
மீமாஞ்சை.

     தத்துவ நெறி - “இலகு மெய்ந்நெறி“. சிவமாகிய
பரதத்துவத்தை அடைதற்குரிய நெறியிற் சென்று முற்றுதலின் தத்துவ
நெறியிற
செல்லும்....மறை என்றார். இவர்களை முன்வைத்துப்
பாடியபோது மன்னுயிர்கள் அருளால் மல்க எரியோம்பும்
இச்சிறப்பையே திருஞான சம்பந்த நாயனார்,

     “கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே, செற்றார்“

எனத் தில்லை முதற் பதிகத்தில் முதலில் வைத்தோதியருளினார்.
ஓதுதலும், ஓதியபடியே நிற்றலும் வல்லார் என்க. “கற்க....நிற்க
அதற்குத் தக“ என்ற நீதிக் கிலக்கியமாவார் என்பது. 5