36. முன்ன மாங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
 
  என்னை யாட்கொண்ட வீசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்ன மன்னவ ருங்கொண் டகன்றபின்.
26

     (இ-ள்.) முன்னம் - முன்னே; ஆங்கவன் ... செல்ல -
அங்கிருந்து ஆலாலசுந்தரர் வண்டுகள் மொய்க்கும் தருணத்திலே,
புதுமலர்களில், என்னை ஆளுடைய இறைவனுக்கு விதிக்கப்பெற்ற
பலவற்றையும் கொய்து கொண்டு செல்லுதலும்; பனிமலர் ...
அகன்றபின் - அவ்வண்ணமே குளிர்ந்த பூக்களைக்
கொய்துகொண்டு அன்னம்போன்ற அச்சேடியர்களும் போயின
பின்னர்;

     (வி-ரை.) முன்னம் - காட்சியின்மேல் சொல் முதலியன
நிகழ்வதன்முன். சேடியர் அகல்வதன் முன் என்றலுமாம். எனவே,
அவர்களுக்குப் பின்னர் வந்த சுந்தரர் முன்னரே சென்றனர்
என்பதாம்.

     மொய்ம்முகை நாண்மலர் - வண்டுகள்
மொய்க்கக்கூடியனவாய் அப்போது மலருந் தன்மை வாய்ந்த
“மொட்டறாமலர்”; மொய்ம்முகையாகிய நாண்மலர். மேலே 34-ம்
பாட்டில் “கொந்து கொண்ட திருமலர்” என்பதன் கீழ்க் குறிப்புரை
காண்க.

     நாண்மலர் - என்பது அலருந் தருணத்தையும், பன்மலர் - என்பது மலர்களின் பற்பல தொகை வகைகளையும் குறித்தன.
நாண்மலராகப் பன்மலர் கொய்து என்க.

     ஏய்வன - ஏய்வனவாகிய. இதனைப் பனிமலர் என்பதனோடும் சேர்க்க.

     பனிமலர் - நாயகன் பூசைக்கு ஏய்வன பலவும் நாயகி
பூசனைக்கு ஆகாமையினால் ஆலாலசுந்தரர் கொய்தவை பன்பலர்
என்று குறித்த ஆசிரியர், சேடியர் கொய்தவை பனிமலர் என்று
மட்டும் குறித்தனர் போலும்.

"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு" எனவும்,

"நாறும் பூவும் தேவர்க்காம் - நாறாப் பூவும்                          தேவர்க்காம்"

எனவும் வரும் புறனடை விதிகளால், விதிப்படிக்குள்ள பூக்கள் கிடையாத போது எல்லாப் பூவும் பூசைக்கு ஆகும் என்பது நாயகன்
பூசைக்கு உரியது. நாயகி பூசைக்கு அவ்வாறு விதியில்லாமையும்
கூறுவர்.  26