360.. வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து
                                    வந்தார்
மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே
ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத் தாடு
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின்
                                   மிக்கார்;
   1

     (இ-ள்.) வேதியர்....வந்தார் - மேலே விரித்துச் சொல்லிய
அந்தணர்கள் வாழ்கின்ற தில்லை என்கின்ற தொல்பெரும் பதியிலே
அவதரித்தவர்; மாது..........மிக்கார் - உமையம்மையா ரமர்ந்த ஒரு
பாகத்தை நோக்கிக்கொண்டு, நிறைந்த திருச்சிற்றம்பலத்தி னிடமாக
நின்று, ஆதியுமந்தமுமில்லாத அற்புதத் தனித் திருக்கூத்தினை
ஆடுகின்ற இறைவனது திருவடிகளையே போற்றி வழிபட்டு வருகின்ற
நல்லொழுக்கத்திலே தலைசிறந்தவர்.

     (வி-ரை.) வேதியர் தில்லை மூதூர் - நாயனாரது
சரிதத்திற்குரிய நாட்டுச் சிறப்பும், நகரச்சிறப்பும், அதன் குடிச்சிறப்பும்
உரைத்ததுடன் முன் புராணத்திற் கூறிய பொருளைத்
தொடர்ந்துகொண்டு அந்த வேதியா என அனுவதித்து
எடுத்துக்கொண்டதுமாம். மூதூர் - பழம் பதி.

     வேட்கோவர் - குயவர். மண்ணிலே குல உரிமைத் தொழில்
செய்பவர் என்பது பொருள்.

     மாதொருபாக நோக்கி - அம்மையார் இருக்கும்
இடப்பாகத்தைத் திருவருளினாலே நோக்கம்செய்து கொண்டு.
நோக்கி ஆடும் நாதனார் என முடிக்க. “வலப்பானாட்டமிடப்
பா னோக்க“
என்பது திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (1).
நோக்குதல் - அருளினை அம்மையார் வழியே உயிர்க்குழவிகள்
பெற்றுய்யும்படி பார்த்தல். ஒரு பாகம் - ஏற்புழிக்கோடல் என்ற
விதியால் இங்கு இடப்பாகம் என்று கொள்க.

     மல்கு சிற்றம்பலம் - எங்கும் - என்றும் நிறைவுற்ற ஞானாகாயம்.

     ஆதியும் முடிவுமில்லா - இன்னகாலத்திலே, இன்ன
இடத்திலே தோன்றிற்று - முடிவுபெறும் என்பதில்லாத -
காலத்தையும் இடத்தையும் கடந்த. ஆதியுமுடிவு மில்லாத கூத்து -
என இயையும்.

     கூத்து - ஐந்தொழிற் றிருக்கூத்து. இது என்றும் நித்தியமாய்
உள்ளது. “திகழ்பதியாம் ஈசனது நடத்தொழிலும்....அனாதி“ என்றனர்
உமாபதி சிவாசாரியார்.

     ஆதயு முடிவு மில்லா நாதனார் - என்று
கூட்டியுரைத்தலுமாம். அற்புதம் - தனி - என்பன கூத்திற்குரிய
அடைமொழிகள். அற்புதம் - 351ம் பாட்டிற் காண்க. அற்புதம்
ஞானமுமாம். தனி - தனி முதல்வன் இயற்றுவதாலும், பிறர்
இயற்றுதற்கியலாமையாலும் தனி என்றார். இக்கூத்தின் இயல்பு
முன்னர் உரைக்கப்பட்டது.

     வாழ்த்தி - “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்“
என்றபடி, “நாதன்றாள் வாழ்க“ என வாழ்த்துதல் திருவடிக்கீழ்
வாழும் வாழ்வருளும் பொருட்டு.

     நலம் - வீடுபேறு. நலந்தருவதனை நலமென்றது உபசாரம்.
இவ்வழிபாடு ஒன்றே நலந்தருவதாம் என்றதாம். இப்பாட்டினுக்குத்
தொண்டர் என்று மேற்பாட்டிற் கூறிய அவர் என எழுவாய்
வருவித்துக் கொள்க.

     மன்னுசிற்றம்பலத்தே - என்பதும் பாடம். 1