365. மூண்டவப் புலவி தீர்க்க வன்பனார் முன்பு
                                  சென்று
 
  பூண்டயங் கிளமென் சாயற் பொற்கொடி
                         யனையார் தம்மை
வேண்டுவ விரந்து கூறி மெய்யுற வணையும்
                                 போதில்
“தீண்டுவீ ராயி னெம்மைத் திருநீல கண்ட“
                                மென்றார்.
6

     (இ-ள்.) மூண்ட அப்புலவி தீர்க்க - (மானமுன் பொறாது
வந்து) மூண்டதாகிய அப்புலவியைத் தீர்த்துக் கூடும்பொருட்டு;
அன்பனார்......போதில் - அன்புடையாராகிய நாயனார் தமது அழகிய
மனைவியார் முன்னேபோய் வேண்டுவனவற்றையெல்லாம் பணிவுடன்
இரந்து சொல்லி அதனால் அவர் அப்புலவி தீர்ந்தார் என்று
கொண்டு அவரது திருமேனியைத் தழுவப்புக்கபோது;
தீண்டுவீர்....என்றார் - நீர் எம்மைத் தீண்டுவீரானால்
திருநீலகண்டத்தின் ஆணை நும்மேல் இருக்கக் கடவது என்று
ஆணையிட்டனர்.

     (வி-ரை.) மூண்ட - நாயகர் பரத்தை பாலணைந்து
நண்ணியதால் மானமுன் பொறாது வந்து மூண்ட என வருவிக்க.
அப்புலவி - முன்னே ஊடல் என்று குறித்த அந்தப் புலவி.

     அன்பனார் அன்பு - தொடர்புடையார்பால் நிகழ்வதோர்
உள்ள நிகழ்ச்சி. மனைவியாரது ஊடலினால் தமது அன்புநிலை
திரியாது அவர்பால் அகப்பொருளிலக்கணப்படி அது காரணமாக
மேலும் மிகப்பெற்றவர். இறைவனிடத்தே அன்பு மிக்கவர்
என்றலுமாம்.

     பூண் தயங்கு இளமென் சாயல் பொற்கொடி அனையார்-
அணிகள் இவரது அழகினுக்குத் தோற்றுப்போய்ப் பின்னிடுகின்றன.
தயங்குதல் - பின்னடைதல். பூண்கள் விளங்குகின்ற
என்றுரைத்தலுமாம். பூண்கள் தயங்குந் தன்மை பெற்று, இளமையும்
மென்மையுமுடைய சாயலுடையராய்ப், பொற்கொடி போல்வாராகிய
அவர். திருவினு முருவமிக்கார் ஆயின. மனைவியாரது இளநலத்திலே
ஈடுபட்டழுந்தினார் நாயனார் என்பார் அவரது அத்தன்மைகளிலே
நாயனாரைப் பிணித்தன இவை இவை என அடுக்கிக் கூறினார்.
சாயல் - ஐந்து பொறிகளாலும் நுகரப் பெறும் மென்மை என்பர்.
இது தலைவியிலக்கணமாதல் முன்னர்க் குறிக்கப்பெற்றது.

     வேண்டுவ - அவர்பால் தாம் வேண்டுவனவாகிய பொறை
முதலியவற்றை, இரந்துகூறி - யாசிப்பார் போலப் பணிந்து சொல்லி,

“மனைவி யுயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியு ளுரிய“

என்பது இலக்கணம். (தொல்காப்பியம் - பொருளதிகாரம் -
பொருளியல் - 33) “படிறுவவேங் - காறான் றொடறொட ரேல்விடு
தீண்டலெங் கைத்தலமே“ என்ற திருக்கோவையா (390)ருங் காண்க.

     மெய்யுற அணைதல - அவரது மேனியினோடு தமது
மேனியுறத் தழுவுதற்கு நெருங்குதல். தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்டம் - எம்மைத் தொடுவீரானால் திருநீலகண்டத்தின்
ஆணை உம்மைத் தடுப்பதாக. திருநீலகண்டத்தின் மேல்
ஆணையிட்டு எம்மைத் தொடாதீர் எனத் தடுக்கின்றேன் என்பது.
ஆணை - பேசப்பெற்றார் மேற்கொண்டு கடக்கலாகாததோர் சத்தி.
“இத்தவன் போகப் பெற்ற திறைவன தாணை“ (மெய்ப்பொருள் - 18),
“நடுவிரு ளாடு மெந்தை நனிபள்ளி யுள்க வினைகெடுத லாணை
நமதே“, “ஆனசொன் மாலையோது மடியார்கள் வானி லரசாள்வ
ராணை நமதே“ முதலிய திருவாக்குக்கள் காண்க.

     எம்மை - “மனைவி யுயர்வும்“ என்ற இலக்கணப்படி
புலவியுள் மனைவியாரின் உயர்வு தோன்ற வழங்கிய ஒருமைப்
பன்மை. இதனை நாயனார் சாதி குறித்த உளப்பாட்டுத் தன்மைப்
பன்மையாக ஏற்று நிகழ்த்திய வரலாறு வரும்பாட்டிற் காண்க.

     பலவிநீக்க - நீண்டுவீரானீர் - என்பனவும் பாடங்கள். 6