37. ஆதி மூர்த்தி யவன்றிற நோக்கியே
 
  “மாதர் மேன்மனம் வைத்தனை; தென்புவி
மீது தோன்றியம் மெல்லிய லாருடன்
காத லின்பங் கலந்தணை வர”யென.
27

     (இ-ள்.) ஆதி ... நோக்கியே - இறைவன் ஆலாலசுந்தரரது
செய்தியைக் கண்டவராய்; “மாதர்மேல் ... அணைவாய” என - நீ
பெண்களின்மேல் மனம் போக்கிவைத்தாய். ஆதலால்
தென்றிசையிலே அவதரித்து அந்த மாதர்களிடம் இன்பம் நுகர்ந்து
பின்னர் இங்கு வந்து அணைவாயாக என்று அருளினார். அருளவே;

     (வி-ரை.) ஆதிமூர்த்தி - எல்லாவற்றிற்கும் மூலகாரணனாக
நின்ற மூர்த்தி; சிவபெருமான். “அந்தம் ஆதி என்மனார்” என்பது
சிவஞானபோதம் முதற்சூத்திரம்.

     அவன்திறம் - அவர் மாதர்மேல் மனம் போக்கிய காட்சி.

     மனம் வைத்தனை - மனம் போக்கினாய் என்ற குறிப்பு.35
பார்க்க. இவர்கள் பெண்கள் என்ற எண்ணம் வைத்து நோக்குதலே
இங்கு மனம் வைத்தல் எனப்பட்டது.

     நோக்கி - அறிந்து, “தம்மையும் நோக்கிக் கண்டு” என்ற
அப்பர் சுவாமிகள் தனித் திருநேரிசையும் காண்க. இறைவர்
சர்வஞ்ஞராதலின் தமது எங்கும் நிறைந்த எல்லா மறியும்
அறிவினாலே அறிந்தார். “சகஸ்ர சீரிஷ : புருஷ : சகஸ்ராட்ச”
என்பது உபநிடதம்.

“அருள் எங்குமான வளவை யறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருளைங் கருமத் ததிசூக்க முன்னார்
அருளெங்குங் கண்ணான தாரறி வாரே,”
 
  - திருமூலர் - 7, திருவருள் வைப்பு - 7

     காதலின்பம் - பொருள்களின்மேல் வைத்த இச்சை காதல்;
அந்த ஆசை காரணமாக அப்பொருள்களைப் பெற்று நுகரப்படுவது
இன்பம்; காதல் - இங்குத் தலைவன் தலைவியர்க்குள் நிகழும் அன்பு
குறித்தது.

     காதலின்பம - காதலிக்கப்பட்ட பொருளாற் பெறப்படும்
இன்பம்.

     கலந்து அணைவாய - இன்பம் கலந்து அதன்பின்
மீண்டும் இங்கே அணைவாய் - வந்து சேர்வாய். இந்த
ஆணையின்படியேதான் அவரும்க்காரியம் முற்றி மீண்டு
அணைகின்றார் என்க. “எந்தையார் அருளால் அணைவான் என”
(17) என்று முன்னர்க் கூறியது காண்க.

     என - என்று ஆணையிட.
 மனம் வைத்தனை ஆதலின்
தோன்றிக் கலந்து அணைவாய் என்று அருள என முடிக்க.  27