370. கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
 
  வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேற்
றோளொடு மார்பிடைத் துவளு நூலுட
னீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்,
11

     (இ-ள்.) வெளிப்படை. கீளும் கோவணமும் சாத்திக்கொண்டு,
அழிவின்மையைச் செய்கின்ற ஒளி வீசுகின்ற திருநீற்றின் பூச்சினாலே
விளங்குகின்ற திருமேனியில் தோளிலும் மார்பிலும் விழுந்து
துவள்கின்ற பூணூலணிந்து கொண்டதுடன், விரிகின்ற அந்த
நீற்றொளியே வளரும் திருமுண்டமாகிய நெற்றியும்,

     (வி-ரை.) கீளொடு கோவணஞ் சாத்தி - கீள் - தகட்டு
வடிவாக நூலினால் நெய்து அரைஞாணாகக் கட்டுவதற்கமைந்தது.
“கீளார் கோவணமும் திருநீறு மெய்பூசி“ - சுந்தரர் - நட்டராகம் -
திருமழபாடி - 2 , “சடையும் பிறையுஞ்சாம்பற் பூச்சுங்கீள், உடையுங்
கொண்ட உருவம்“ - சம்பந்தர் - தக்கராகம் - திருக்கோலக்கா - 1,
“கீளலா லுடையுமில்லை“ - அப்பர் - திருநேரிசை - திருவையாறு 7
முதலிய திருவாக்குக்கள் காண்க. இது கோவணத்துடன் சேர்த்தணைப்பதனால் ஒரு விகுதி சேர்த்துச் சாத்தி என ஒரு
வினைமுடிபுபடுத்திக் கூறினார். யோகியாய் வருதலின் கீளும்
கோவணமுமேயன்றி வேறு உடையில்லை என்றார். “கீளுடையும்
கொண்ட உருவம்“ என்ற தேவாரத்துக் கூறியதும் காண்க.
கோவணத்தினியல்பு அமர் நீதியார் புராணத்துட் காண்க.

     கேடிலா வாள்விடு நீற்றொளி - கேடிலா ஒளி என்றும்,
கேடிலா நீறு - என்றும் கூட்ட அமையும். ஏனை ஒளிகள் யாவும்
கேடுறுவன; கேட்டினைச் செய்வன. ஆயின் இவ்வொளி ஒன்றே,
தான் கெடாதிருப்பதுடன் காண்பார்க்குக் கேடு தவிர்ப்பதாம்.
திருநீற்றின் தன்மையும் இதுவேயாம். இதுபற்றி யன்றே இறைவனது
திருவருட் கொடையாகிய முத்துச் சிவிகையின் தூய தண்ணிய
ஒளியினைக் கண்டபோது அவ்வருள் ஒளி திருநீற்றொளி எனக்
கண்டு வணங்கினர். ஆளுடைய பிள்ளையார். “வெண்ணீற்றொளி
போற்றி“ - திருஞான - புரா - 216. வாள்விடு மேனி - என்று கூட்டி
யுரைத்தலுமாம். மலர்ந்த - மலர்தற்கிடமாகிய.

     நீளொளி வளர் திருமுண்ட நெற்றி - திருமுண்ட
நீளொளிவளர் நெற்றி என மாற்றுக. திருமுண்டம் - திரிபுண்டரமாக
- மூன்று கீற்றுக்களாய்த் தரிக்கும் திருநீறு. திரிபுண்டரம் என்பது
திருமுண்டமென மருவிற்று என்பர். மேனி மேல் நீறுபரவி
விரவுதலின் மலர்ந்த என்றார். நெற்றியிற் கீற்றுக்களாய்த் தொக்குக்
கூர்ந்து நீண்டு விளங்குதலின் நீள்ஒளி வளர்முண்டம் என்றார்.
“முண்ட நிறைநெற்றி“ (மானக் - புரா - 22). 11