371. நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
 
  விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவு மேம்பட
விடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.
12

     (இ-ள்.) வெளிப்படை. தமது இயல்பாகிய நீண்ட சடை
மறைந்திட அதனிடத்தே நெறித்துச் சுருண்ட பம்பை மயிரும்,
திருவாயிலே ஒளிவீசும் வெண்ணிலவு போன்ற புன்முறுவலும்
விளக்கமாகக் கொண்டு, பலியை இடுதற்கிடமாகிய திருவோட்டினை
ஏந்திய கையை யுடையராகி, நடந்துவந்து திருநீல கண்டக்
குயவனாரது வீட்டை அடைந்தனர்.

     (வி-ரை.) நெடுஞ்சடை - நீண்டு விரிந்து தொங்கும்
சடைக்கற்றை; காந்திட - மறைந்து நிற்க, அதனிடத்தில்; நெறித்த -
அலைகள்போல சுருண்டு சுருண்டு கிடந்த; பம்பை - கீழ் வீழ்ந்து
தொங்காமல் தூறாயுள்ள தலைமயிர். சடையிருக்க வேண்டிய
இடத்திலே பம்பையிருந்தது என்க.

     விடுங்கதிர் முறுவல் வெண்ணிலவும் - வெண்ணிலவுக்
கதிர்விடும் முறுவலும் என மாற்றுக. இவரது முறுவல் திரிபுர மெரித்த
எரி வீசுவது. ஆயின் அவ்வாறன்றி இங்கு நிலவுக் கதிர் வீசிற்று
என்பதாம். முறுவல் வெண்ணிலவும் என்பதனை நெற்றியும்
பம்பையும் என்றதற் கேற்ப நிலவு முறுவலும் என்று மாற்றி
உரைக்கப்பட்டது. உம்மை பிரித்துக் கூட்டுக.

“கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்“
            - கோயிற்றிருவிருத்தம் - 4

“சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே“
              - கோயிற்றிருவிருத்தம் - 7

காண்க.

     இத்தேவாரத்திலே “திரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்க
எரித்தஇறைவன்“ என்று இந்த முறுவலின் மற்றை யியல்பையும் உடனே குறித்தவாறு காண்க.

“அருள்பொழியுந் திருமுகத்தி னணிமுறுவ னிலவெறிப்ப“
       - சிறுத்தொண்டர் புராணம் - 35

எனப் பின்னர்க் கூறுவதும் இங்கு வைத்துன்னு

     மேம்பட - நெற்றியும் - பம்பையும் முறுவலும் - மேம்பட
என்று கூட்டியுரைக்க. மேம்பட - விளக்கமுறத் தாங்கிக் கொண்டு.
மேம்பட - மேம்படும் பொருட்டு என்று பொருள் கொண்டு
அதற்காகப் பலியிடும் பாத்திரம் என்று கூட்டியிரைப்பினுமாம்.
இந்தப் பலிப்பாத்திரத்திற்குட் பிச்சையிடுவோர் மேன்மை யடைவர்
என்பது பின்னர்த் “தன்னுழைத் துன்னிய யாவையுந் தூய்மை
செய்வது“ (375) என்ற இடத்துக் காண்க.

     நடந்து - தமக்குரிய விடையாகிய ஊர்தியின்றிக் காலால்
நடந்து சென்று. விடையின்மேல் வருவது, பின்னர், வெளிப்பட
அருள் புரியுங் காலத்துக்காண்க. “அணையுடன் விடைமேற்
கண்டார்“ (399) “பெற்ற மூர்வதுமின்றி“ (8) என்ற இளையான்குடிமாற
நாயனார் புராணமும், இவ்வாறே வரும் பிற இடங்களுங் காண்க.
சடையும் - கீளும் - கோவணமும் - திருநீறும் - திருமுண்டமும் -
நூலும் - பிச்சைப் பாத்திரமும் சிவயோகிகளது அடையாளங்கள்
என்க. இவைகளையே மேற்காட்டிய தேவாரப் பிரமாணங்களினும்
குறித்தமை காண்க. யோகியர்க்கு நீற்றுப் பூச்சு வேண்டுவதில்லை
என்று திரியும் அவயோகியர்கள் இவ்வுண்மைத் தவச்சிவயோகக்
கோலத்தியல்பு கண்டு திருந்துவார்களாக.

     நாளில் - சடையோன் - ஞாலத்தார் - உய்யும் அந்நெறி
காட்டுமாற்றால் - தானும் தொண்டரை - விளக்கங் காணச் -
சிவயோகியாகி - சாத்தி - வாள்விடு மேனிமேல் - திருமுண்ட
நெற்றியும் - பம்பையும் - முறுவலும் - மேம்பட - இடும்
பலிப்பாத்திர மேந்து கையராய் - நடந்து வேட்கோவர் மனையை
நண்ணினார் - என இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து முடித்துக்
கொள்க. 12