372. நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
 
  கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம் புண்ணியத்
தொண்டரா மென்று போற்றிசெய் தெண்ணிய
வகையினா லெதிர்கொண் டேத்தினார்.
13

     (இ-ள்.) வெளிப்படை. மேலே கூறியவாறு நண்ணிய
தவக்கோலம் பூண்ட சிவயோக நாதரைக் கண்ணாரக் கண்ட
ஆசைமிகுந்த அன்பனார், இவர் புண்ணியத் தொண்டரேயாம் என்ற
கருத்துடன் துதித்து நினைத்திருந்த வகையினுக் கேற்ப எதிர்கொண்டு
சென்று வணங்கித் துதித்தார்.

     (வி-ரை.) தவச்சிவயோகநாதர் - தவக்கோலமுடைய
சிவயோகியார். தவம் நண்ணிய - செய்த தவத்தினாலே நண்ணிய
என்று கூட்டியுரைத்தலுமாம். யோக நாதர் - யோகிகளுக்கெல்லாம்
பெரியவர் - தலைவர். யோகத்தாற் கிடைக்கும் பொருளாகிய
இறைவர் என்றதும் குறிப்பாம்.

     கண்ணுற நோக்கிய - கண்களினாலே ஆர நோக்கிய.
“கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும்“ என்ற அம்மையார்
திருவந்தாதியும் (25) காண்க. இது குறிக்கவே நோக்கிய என்றதனோ
டமையாது கண்ணுற நோக்கிய என்றார். கண் காதலுற நோக்கிய
அன்பர் என்று கூட்டி உரைத்தலுமாம்.

     காதலன்பர் - மெய்யடியார்கட்கான பணிசெயும்
விருப்பினின்றவரான (361) தொண்டர். காதல் - நாயகன்
நாயகிகளிடத்து நிகழ்வது. அடியார்களே தமது நாயகர்கள் -
தலைவர்களாவார் எனக் கொண்டு ஒழுகும் ஆசையாதலால் காதல்
என்ற சொல்லாற் கூறினார்.

“உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
   (9)

“எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க“ (19)

என்ற (திருவெம்பாவை) திருவாசகங்கள் காண்க.

     “ஆசையொடு மானடியா ரடியாரை யடைந்திட்டு“ என்பது
சாத்திரம்.

     புண்ணியத் தொண்டராம் - புண்ணியஞ் செய்தமையாலே
தொண்டராகப் பெற்றார் இவராகும். நாம் செய்த புண்ணியத்தினாலே
போந்த தொண்டர் - அடிமை செய்யும் புண்ணியமுதவும் தொண்டர்
- என்றலுமாம். புண்ணியம் - இங்குச் சிவ புண்ணியம் குறித்தது.

     போற்றிசெய்து எண்ணிய வகையினால - மனத்தாற்
றுதித்துக்கொண்டு இது வளர அன்பர் பணிசெய்வதிலே தாம்
எண்ணியிருந்த எல்லா வகையாலும், வழக்கமாய் அன்பர்களைப்
போற்றி எண்ணியிருந்த வகையினாலே என்றலுமாம். “நித்தமாகிய
பத்திமுன் கூர“ (442) காண்க. எதிர்கொண்டு - எதிர்கொண்டு
சென்று.அவர் முன்னர் வரவேற்கச் சென்று. எத்தினார் - உபசார
மொழி கூறித் துதித்தார்.

 “கூர வந்தெதிர் கொண்டு கைகள் குவித்து நின்று                                 செவிப்புலத்
  தீர மென்மது ரப்ப தம்பரி வெய்த முன்னுரை                              செய்தபின்“
            - இளையான்குடியார் புராணம் - (3)

      என்றமை காண்க.

     போற்றி செய்து - என்பது கண்டவுடனே தாமிருந்த
நிலையில் மனத்தாலும் வாக்காலும் துதித்தல்; ஏத்தினாரென்பது
அவர்முன்னர்ச் சென்று உபசரித்துத் துதித்தல்.

     தொண்டர்தாம - எண்ணிய வுவகையால் - என்பனவும்
பாடங்கள். 13