373. பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்
 
  றுறையுளி லணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்,
14

     (இ-ள்.) வெளிப்படை. பிறை வளர்தற்கிடமாகிய
சடைமுடியினையுடைய இறைவனை அவரது தொண்டராம் என்று
கொண்டு, தம் வீட்டிலே அழைத்து வந்து சேர்த்து, மிக மகிழ்ச்சி
கூரும்படி முறைப்படி வழிபாடு செய்வதில் நூல்களில் விதித்த
முறைப்படி பூசைகளை யெல்லாம் உள்ளம் நிறைந்த பெரிய
விருப்பத்துடனே செய்து அவர்முன்னே வணங்கிக் கூசி
நின்றுகொண்டு, பின்னர்,

     (வி-ரை) பிறைவளர் சடைமுடி - சடையினையுடைய
இத்திருமுடியிற் சேர்ந்த அதனால் பிறை தனது குறை நோய்
நீங்கப்பெற்றதேயன்றி வளர்தலையும் பெற்றதென்பது சரிதம்.
“மதிவளர் சடைமுடி“ (4) என்றதும் காண்க. “துணிவளர்
திங்கடுளங்கி விளக்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்து“ முதலிய
எண்ணிறந்த தமிழ் வேதங்களும் இதனை எடுத்துத் தேற்றம்பெறத்
துதிப்பதும் காண்க.சடை முடி - “சடைமுடி சாட்டியக் குடியார்க்கு“
- திருவிசைப்பா.

     பிரான - தலைவர். “இவரலா தில்லையோ பிரானார்“ -
நம்பிகள - திருப்பாச்சி லாச்சிராமம்.

     தொண்டர் என்று இவர் ஒரு அடியவரேயாவார் என்று கருதி.
அடியவர்களை அரன் எனவே கொண்டு வழிபடுக என்று சாத்திரம்
விதிக்கும். “மாலற நேய மலிந்தவர் வேடமும், ஆலயந் தானு
மரனெனததொழுமே“ - சிவஞானபோதம் 12-ம் சூத்திரம். ஆயின்
இங்கு அவ்வாறன்றி அரனை அடியாராகக் கொண்டு வழிபட்டனர்
நாயனார் என அதை எடுத்துக் காட்டியவாறு.

     உறையுள் - உறைவதற்கிடமாயுள்ளது - வீடு. அணைந்து
கொண்டணைந்து.

     பேருவகை கூர்ந்திட - மிகுகாதல் பெருகும்படி. கூர்தல் -
மிகுந்து நிறைதல். தாம் உவகை கூர என்றும், அவர் உவகை கூர
என்றும் ஈரிடத்தும் இயைய நின்றது.

     முறைமையில் வழிபட - அடியவர் அரனேயாவார் எனக்
கொள்ளும் முறைமையால் அரனுக்குரியபடியே பூசை செய்ய.
மொழிந்த - நூல்களால் விதிக்கப்பெற்ற. நூல்கள் - தொக்கி நின்றது.
மொழிந்த - மொழியப்பட்ட. செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது.

     நிறைபெரு விருப்பொடு செய்து
- உளமகிழ் சிறப்பின்
மல்க ஓடளி த்தலாலே (362) முன்னர் நிறைந்த விருப்பு, இங்குப்
பெருகிற்று என்பார் நிறை பெருவிருப்பு என்றார். விருப்பொடு
செய்து
- விருப்பு - மனநிகழ்ச்சி; செய்து - காயத்தின் செயல் மனம்
வாக்குக் காயமாகிய மூன்றினால் ஏத்தினார் (372) என முன்னர்
வாக்கின் தொழில் கூறப்பெற்றதால் இங்கு ஏனை இரண்டின்
செயலுமே கூறப்பெற்றன. எனவே, முக்கரணங்களாலும் முறைமையின்
வழிபட்டார் என்க.

     நின்றபின் - அடியார்கள் முன்னர் அமர்ந்திருக்கலாகாது
ஆதலின் நின்று என்க. வணங்கிப் பணி கேட்கும் முறைமையின்
நின்று, அதன் பின்னே, என்றனர் என வரும் பாட்டினோடு வினை
முடிபு செய்க. 14