377. வைத்தபின் மறையவ ராகி வந்தரு
 
  ணித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்;
அத்தர்தா மம்பல மணைய மேவினார்.
18

     (இ-ள்.) வைத்தபின்.....மீண்டனர் - அவ்வாறு வைத்து
எய்திய பின்னர், யோகியாராக வந்த இறைவர் அவ்விடம் விட்டுப்
பெயர்ந்தாராகவே, இதுவரை நின்று பணிகேட்ட தொண்டனாரும்
அவருடனே போய் வெளியே சென்று வழிவிட்டு விடைபெற்றுக்
கொண்டு தமது வீட்டிற்குத் திரும்பினார்; அத்தர்.........மேவினார்-
இறைவரும் தமது சிதாகாயமாகிய திருவம்பலத்திலே எழுந்தருளினார்.

     (வி-ரை.) வைத்தபின் - வந்து முன்போல நின்றுபணி கேட்ட
தொண்டரும் - நித்தனார் நீங்கிட - உடன்போய் - உய்த்து -
விடைகொண்டு - மீண்டனர் - என்று கூட்டுக.

     நின்ற தொண்டர் பெரியோர் முன்பு இருத்தல் ஆகாதென்ற
விதிப்படி, இது வரை, நின்று பணிகேட்ட நாயனார். “நின்றபின்“ என
(373) முன்னருங்கூறினார்.

     வந்தருள - அருள்புரியத் திருவேடம் தரித்து வந்தவர் என்ற
குறிப்பாம்.

     நீங்கிட - அவ்விடத்தினின்று புறப்பட்டு எழுந்தருள.

     உய்த்துடன் போய் விடைகொண்டு மீண்டனர் - அவருடன்
சென்று வழிவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினார்.

     உய்த்து - வழிவிட்டு. பெரியோர்கள் மீளும்போது அவர்கள்
பின்தொடர்ந்து நடந்து சென்று அவரனுமதி பெற்று வருதல்
ஆன்றோரொழுக்கமாம்.

     அம்பலம் - எங்கும் நிறைந்ததாயுள்ள அறிவொளியே
அம்பலமாம். அம்பலம் அணைய மேவினார் - என்பது யோகியாராய்
எல்லாருங் காண வெளிப்பட்ட அந்த நிலையிலிருந்து கண்ணுக்குத்
தோற்றாத நிலையினரானார் என்ற பொருளில் வந்தது. இது
தில்லையின் நிகழ்ந்ததாதலின் அங்குத் திருவம்பலத்திலே
எழுந்தருளினார் என்றுரைத்தலுமாம். 18