387. “ஐயர்!நீ ரருளிச் செய்த வண்ணமியான் செய்வ
                                  தற்குப்
 
  பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை; யென்செய்கேன்?
                            புகலு“மென்ன;
“மையறு சிறப்பின் மிக்க மனையவ டன்னைப்
                                   பற்றி
மொய்யலர் வாவிப் புக்கு மூழ்குவா“ யெனமொ
                                 ழிந்தார்.
28

     (இ-ள்.) ஐயர்.....என்ன. “ஐயரே!நீர் அருள்செய்தபடிச் சத்தியம்
செய்வதற்குப் பொய்ம்மையில்லாத சிறப்புடைய மகனில்லை. ஆதலின்
வேறு யாது செய்ய வேண்டும்? சொல்லுங்கள்“ என்று நாயனார்
சொல்ல; மையறு.....மொழிந்தார் - குற்றமற்ற சிறப்பிலே மிகுந்த
உனது மனைவியைப் பிடித்துக் கொண்டு நிறைந்த பூக்களையுடைய
குளத்திலே மூழ்கித் தருவாயாக என்று யோகியார் சொன்னார்.

     (வி-ரை.) பொய்யில்சீர்ப - புதல்வன் - நீர் கேட்குமாறு
நான் பொய்யில்லாதவன் என்பதை விளக்கும் சிறப்புப் பொருந்திய
மகன் என்பது குறிப்பு. பொய்யில்சீர் - பொய்ம்மையை
இல்லையாக்கும் சிறப்பு. மகனால் உண்டாகும் சிறப்புக்களைத்
திருக்குறள் மக்கட்பேறு என்ற அதிகாரத்தும், பிற இடத்தும்
அறிந்துகொள்க. மகன் றந்தைக் காற்று முதவிகளுள்
இதுவுமொன்றாதல் வழக்கு.

     மையறு சிறப்பு மிக்க மனையவள் - மகனில்லையேல்
அவன் உதவுவது போலவே இதனில் உம்மீது குற்றமில்லை என்று
விளக்கும் சிறப்பு என்றதும் குறிப்பு.

     மை அறு சிறப்பு - குற்றத்தைப் போக்குகின்ற சிறப்பு.
இதற்குக் கற்பிற் சிறந்த என்றுரைத்தலுமாம். மனையவளின் சிறப்பும்
இயலும் வாழ்க்கைத் துணைநலம் என்ற திருக்குறட் பகுதியிலும், பிற
இடங்களிலும் கண்டுகொள்க. மனையவள் - வீட்டுக்கு உடையவள்.
இல்லாள் - மனைவி முதலிய பல பெயர்களும் இப்பொருளே
குறிப்பன. இல்வாழ்க்கை என்பது அதற்குடையவளாகிய நன்மனைக்
கிழத்தியே யன்றி யில்லையாகும். இதுவே நமது நாட்டு வழக்கு.
இதனால் நம் நாட்டவராகிய தமிழர் பெண்மைக்கு உரிய உயர்வைக்
குறிக்கொண்டுள்ளார் என்பது தேற்றமாம்.

     தன்னைப் பற்றி - தனது கையைப் பிடித்துக்கொண்டு.
“அந்தளிர்ச்செய்கைப் பற்றி“ (389), “தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ்கியுந்தாரான்“ (391), என்பன காண்க. “காதலுன்
மகனைப்பற்றி“ (386), “உடன்மூழ்க“ (388), மனைவியோடு மூழ்குதல் (394); “மாதைத் தீண்டிக் கொண்டு“ (397) என்ற இடங்களிலும்
இவ்வாறே பொருள் கொள்க. 28