389. “தந்ததுமுன் றாராதே, கொள்ளாமைக்
                              குன்மனைவி
 
  யந்தளிர்ச்செங் கைப்பற்றி யலைபுனலின்
                                மூழ்காதே,
சிந்தைவலித் திருக்கின்றாய்!; தில்லைவா
                              ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையின் மன்னுவன்யா“
                           னெனச்சென்றார்.
30

     (இ-ள்.) வெளிப்படை. அதனைக் கேட்ட இறைவர் “நான்
உன்னிடம் ஒப்புவித்த பொருளை முன்னே மீளத்தாராமலும், அல்லது
அதனை நீ களவு செய்யவில்லை என்று காட்ட உனது மனைவியின்
அழகிய தளிர்போன்ற கையைப்பிடித்துப் புனலில் மூழ்கித்தாராமலும்,
உன்மனதில் மிகவும் வன்கண்மை கொண்டிருக்கின்றாய்; இதற்காக
நான் தில்லைவாழந்தணர்கள் கூடிய திருந்திய சபையிலே போய்
இருப்பேன்“ என்று சென்றார்.

     (வி-ரை.) தந்தது - வைக்கத் தந்ததாகிய பொருளை.
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கது. முன - என் முன்னே நான்
கேட்கு முன்னே;முதற்கடமையாக என்ற குறிப்புக்களுமாம். தாராதே
- மீளத் தாராமல். “நீ தருக நாம் வேண்டும்போ“தென்று (374) நாம்
கூறிக் கொடுத்தபடித் தாராமல்.

     கொள்ளாமைக்கு - தந்த பொருளை களவாக
எடுத்துக்கொள்ளாமையைக் காட்டுதற்கு. கொள்ளாமை அதனைக்
காட்டும் வகைக்காயிற்று.

     சிந்தை வலித்திருக்கின்றாய் - மனவலிமை யுடையவனா
யிருக்கின்றாய். மனவுறைப்பின் மிகுதியினாலே காமத்தை அறவே
வென்றவனா யிருக்கின்றாய் என்பதும் குறிப்பு.

     வந்திருந்த திருந்து அவை - வந்து நியாயம்பேசக்
கூடியிருந்த திருந்திய சபை. திருந்து அவை - திருந்து என்றதன்
காரணம் வரும்பாட்டிற் கூறுவார். பேரவையின் என்பது பாடமாயின்
பெருஞ்சபை என்க. பேரம்பலம் என்றலுமாம். இந்நாளிலும் தில்லை
மறையோர் பேரம்பலத்திலே கூடி வழக்குக்களைப் பேசி முடிவு
செய்யும் வழக்கமுங் காண்க.

     மன்னுவன் யான் - அவர்கள் சபையின் நாதனாய்
இருக்கின்றவன் நானே என்பதும் குறிப்பு.

     எனச் சொன்னார் - என்பதும் பாடம். 30