395. அருந்தவத் தொண்டர் தாமு மந்தணர் மொழியக்
                                 கேட்டுத்
 
  திருந்திய மனைவி யாரைத் தீண்டாமை செப்ப
                                 மாட்டார்,
“பொருந்திய வகையான் மூழ்கித் தருகின்றேன்
                            போது“மென்று
பெருந்தவ முனிவரோடும் பெயர்ந்துதம்
                       மனையைச் சார்ந்தார்.
36

     (இ-ள்.) வெளிப்படை. அரிய தவஞ் செய்வாராகிய நாயனாரும்
இவ்வாறு தில்லைவாழந்தணர்கள் கூறிய தீர்ப்பைக்கேட்டு,
(அவர்களிடம்) திருத்தம் பொருந்திய தமது மனைவியாரைத் தாம்
தீண்டக்கூடாத நிலையைச் சொல்ல மாட்டாதவராகி, (வழக்கிலே
வென்ற) பெருந்தவ முனிவரைப் பார்த்து “பொருத்தமானபடி நான்
மூழ்கித் தருகின்றேன் - வருவீராக“ என்று சொல்லி அவரோடுகூட
அங்கிருந்து தமது மனையை அடைந்தார்.

     (வி-ரை.) மொழிய - முடிபைச் சொல்ல.

     திருந்திய - “அருந்ததிக் கற்பின் மிக்கார்“ (363), “கற்புறு
மனைவியார்“ (367) என்றபடிக் கற்பினாலும் அன்பினாலும் திருந்தி
மெய் தீண்டாது நின்றும் கணவனார்க் கானவெல்லாம் பொருந்துவ
போற்றிச் செய்துவந்த என்பதாம்.

     செப்பமாட்டார் - தாம் திருவாணை போற்றிய செய்தி
அயலறியாமை வாழ்ந்தாராதலின் இங்கும் நாயனார் அதனைச்
சொல்ல மாட்டாதவராயினர். சொல்லினும் அவர் ஒப்பாது தமது
உண்மைத் தன்மையினில் ஐயமுறுவர்; யோகியாரும் அவ்வுண்மை
தெளியாது மேலும் பிணங்கி வருந்துவர்; அவரை மேலும் வருந்த
வைத்துப் பின்னும் பிழைபடுதல் சரியன்று; இதனை முன் சொல்லியும்
(388) யோகியார் கேளாது வழக்கிட்டாராதலின் அதனையே
பின்னரும் சொல்லுதல் ஏற்குமாறில்லை என்பனவாதி
காரணங்களாலே செப்பமாட்டார் என்றவாறு. பொருந்திய வகையான்
பெரியோராணை, அரசனாணை, ஈசுவராணை என ஆணைகள் பல
திறப்படும். பெரியோராணையினும் அதன் துணைகொண்டு நடப்பதும்
அதனை நிறுத்தவல்லதுமாகிய அரசனாணை பெரிது; இவை
எவற்றினும் ஈசுவராணை பெரியது; இங்குத் தாம்
கைக்கொண்டொழுகியது ஈசுவராணை; இப்போது பிறந்தது அரச
நீதியின் ஆணை; எனவே, இவற்றுட் பெரிதாகிய ஈசுவராணைக்கு
மாறுபடாமல் எந்த அளவில் அதனுட்பட்ட அரச நீதியாணை
பொருந்துமோ அந்த அளவில் என்பது கருத்து. வகையான -
வகையினாலே. வகை - யான் - என்று பிரித்து வகையில் யான்
மூழ்கித் தருகின்றேன் என்றலுமாம்.

     பெயர்ந்து - சபதம் செய்தற்காக அச்சபையினிடத்தினின்றும்
பெயர்ந்து.

     மனையைச் சார்ந்தார் - தீர்ப்பின்படி மூழ்கித்தர
மனைவியாரை உடனழைத்துச் செல்வதற்காக.

     பெருந்தவ முனிவர் - அவரும் தவத்தொண்டர்; இவரும்
தவமுனிவர் என்றதாம். “தவச்சிவயோக நாதர்“ (372) என்றதும்
காண்க.

     அரும்பெருந் தொண்டர் - என்பதும் பாடம். 36