398. வாவியின் மூழ்கி யேறுங் கணவரு மனைவி யாரு
 
  மேவிய மூப்பு நீங்கி விருப்புறு மிளமை பெற்றுத்,
தேவரு முனிவர் தாமுஞ் சிறப்பொடு பொழியுந்
                                 தெய்வப்,
பூவின்மா மழையின் மீள மூழ்குவார் போன்று
                                 தோன்ற.
39

     (இ-ள்.) வெளிப்படை. குளத்திலே மூழ்கித் தந்து
கரையேறுகின்ற கணவரும் அவர் தம் மனைவியாரும் அதற்கு
முன்பு தம்பால் மேவியிருந்த மூப்பு நீங்கப் பெற்று விருப்பமுறும்
இளமையைப் பெற்றார்களாகித், தேவர்களும் முனிவர்களும்
இவ்வற்புதங் காரணமாகப் பொழிந்த கற்பகப் பூமழையிலே மேலும்
மூழ்குவார் போலத்தோன்றவும்,

     (வி-ரை.) மூழ்கி ஏறும் - மூழ்கித் தந்து பின்
கரையேறினார்கள்; அவ்வாறு ஏறும் என விரித்துக்கொள்க.
பிறவிக்கடலிற்றப்பி ஏறிய என்ற குறிப்புமாம். கணவர் - கண்ணவர்;
எப்போதும் இம்மையிலும் அம்மையிலும் எம்மையிலும் பிரியாது
உடனிற்பவர். சரிதப் பின் நிகழ்ச்சி காண்க. “அன்னவரே
யெங்கணவராவார்“ - திருவெம்பாவை. “இந்தவுயி ரவருயிரோ
டிசைவிப்பன்“ (திருநாவு - புரா - 32) என்று திலகவதியம்மையார்
துணிந்தமையாற்,கணவர் உடல் நாயகரேயன்றி உயிர்த்துணைவருமாம்
என்பது பெறப்படும். “கற்புறு மனைவியாருங் கணவர்க் கான
வெல்லாம்“ (367) என இளமையிற் கூறிய கணவனார் என்ற
சொல்லால் இங்கு முதுமையிலும் கூறியதுங் குறிக்க. மேவிய மூப்பு
மனித உடலியல்புபற்றித் தம்பாற் பொருந்திய மூப்பு. “வடிவுறு மூப்பு
வந்து“ (368) என்ற இடத்துக் காண்க.

     விருப்புறு மிளமை பெற்று - யாவரும் எப்போதும்
விருப்பமுறும் இளமை. நாயனார் விரும்பியதென்பதன்று. விருப்புறும
- சாதியடை என்பர். இவ்வாறு மூப்பு நீங்கி மீளப்பெற்ற நீங்கா
இளமையை யாவரும் விரும்புவது மனித இயல்பேயாம். யாவரும்
ஆசைப்படத்தக்க இளமைப் பருவமும் அதற்குரிய கோலமும் மூப்பு
நீங்குதல் வேறு; இளமை வருதல் வேறு. (368) முன்னர்
உரைத்தாங்குக் கண்டுகொள்க.

     தேவரும் முனிவர் தாமும - தேவர்கள் திவ்விய
தேகமுடையார். தாமும் - உலகை விட்ட நிலையில் உள்ள
முனிவரும் - சிறப்பும்மை. சிறப்பொடு - சிறக்கும் வகையாலே.
இத்திருவருள் வெளிப்பாட்டினை உலகம் உணர்ந்துய்யக்கடவது
என்று பாராட்டிக் காட்டி உபகரிக்கும் வகையாலே.      

     பொழியும் தெய்வப்பூவின் மாமழை - பெய்த கற்பகப்
பூமாரி. திருவருள் வெளிப்பாடு, பெரியார் அவதாரம் முதலிய
நன்னிகழ்ச்சிகளைத் தேவர் முதலிய ஆத்தர்கள் கண்டு பாராட்டிக்
காட்டும் நிகழ்ச்சிகளில் இதுவுமொன்று. “வானவர் வளர்பூமாரி
பொழிந்தனர்“ - கண். புரா - 179 முதலியன காண்க. பூவின் -
பூப்பெய்தலாகிய இனிய என்றலுமாம். மீள மூழ்குவார்போன்று
யோகியார் கேட்ட வுண்மைக்கிருமுறை அடையாளமாதல் போல
என்ற குறிப்புமாம். 39