399. அந்நிலை யவரைக் காணு மதிசயங் கண்டா
                                ரெல்லாம்
 
  முன்னிலை நின்ற வேத முதல்வரைக் கண்டா
                                  ரில்லை;
இந்நிலை யிருந்த வண்ண மென்னென மருண்டு
                                  நின்றார்
துன்னிய விசும்பி னூடு துணையுடன் விடைமேற்
                                 கண்டார்
40

     (இ-ள்.) வெளிப்படை. அந்நிலையிலேநின்ற அவ்விருவரையுங்
காணப்பெற்றதாகிய அதிசயத்தைக் கண்கூடாகக் கண்ட உலகர்
எல்லோரும் முன்னிலையாய் நின்றிருந்த வேதியராகிய இறைவரைக்
கண்டாரில்லை; நாயனார் இவ்வாறு நிகழ்ந்த வண்ணந்தான் யாது?
என மருட்சியை யடைந்தனராகிப் பின்னர்ப் பொருந்திய ஆகாய
வெளிக்குள்ளே தமது துணைவியான உமை யம்மையாருடன்
இடபவாகனத்தின்மேற் காட்சிதரக் கண்டார்.  
    
     (வி-ரை.) அந்நிலை காணும் அதிசயம் கண்டார் - பாரோர்
கேட்பப்பண்டுதஞ்செய்கை சொல்லி மூழ்கினார் நாயனார். அவ்வாறு
கேட்ட உலகர் எல்லாம் கேட்டதுடனில்லாமல் இவ்வாறு
இருவரையும் காணும் அதிசயத்தையும் கண்டார். தொண்டரை
விளக்கங்காண உலகர்க்கு நெறிகாட்ட வந்த யோகியார் காட்டிய
அந்நிலையிலே அவரைக் காணும் எனவும் கூட்டி விரித்துக்கொள்க.
“அதிசயங் கண்டாமே“ என அதிசயப்பத்தில் மாணிக்கவாசகப்
பெருமான் அருளியதும் இங்கு வைத்துக் காண, அதிசயங் கண்டார்
என்றார்.

     முன்னிலை நின்ற வேத முதல்வர் - முன்னிலை நின்ற -
முன்னிலையாக நின்ற - முன்னிலையாக வந்தவருக்குள்ளே மறைந்து
நின்று என்றலுமாம். வேத முதல்வர் - வேதம் நாதத்தின்
காரியமாகிய வாக்கு ரூபமாயுள்ளது. வேதத்துக்குக் கருத்தா,
வேதத்தாற்றுணியப்படும் கருத்தா என இருதிறமும் விரித்துக்கொள்க.
“சாத்திரயோனித்துவாத்“ என்ற வியாச சூத்திரப்பொருளும் காண்க.
ஆதலின் முதல்வர் என்றார்.

     கண்டாரெல்லாம்........கண்டாரில்லை - முன்னிலையாக
நின்ற யோகியாரைக் கண்டார் எல்லாரும் முதல்வரைக்
கண்டாரில்லை. எனவே, சிலர் கண்டார் என்பதாம். அவராவார் -
நாயனாரும் மனைவியாருமாம்; இவர்களே அவரைக்காணத்தக்க
பக்குவான்மாக்களாம். அன்றியும் இவர்களை உலகுக்கு விளக்கங்
காட்டி அருளவே இறைவன் எழுந்தருளினார். ஆதலின்
இவ்விருவருமே கண்டார் - பிறர் கண்டாரில்லை. இவர் கண்டார்
எனப் பின்னர் விரித்துக் கூறுதலும் காண்க.

     துன்னிய விசும்பினூடு - நான்கு பூதங்களிலும்
வியாபகமுடைய ஆகாயத்திலே - கலந்த சிதாகாயத்திலே. (இது
ஞானிகளாகிய பக்குவிகளுக்கு மட்டும் தரிசனமாவதாம்) துணை -
அருட்சத்தியாகிய உமையம்மையாருடன். விடை - அற உருவமானது.
“ஏலவார் குழலா டன்னோ டிடபவா கனனாய்த் தோன்றி“ -
இளையான்குடியார் புரா - 25, “தன்றுணை யுடனே வானிற்
றலைவனை விடைமேற் கண்டார்“ - இயற்பகையார் புரா - 31
முதலிய பலவிடத்தும் இவ்வாறே காண்க. இவையே
அருட்சொரூபமாகையால், அடியார்பால் அருள் வெளிப்பாடு நிகழும்
போதெல்லாம் இவ்வாறே இறைவன் எழுந்தருளுவதியல்பு.

     இந்நிலை யிருந்த வண்ணம் என்னென மருண்டு நின்றார்
- முன்னால் நின்ற வேதியர் காணாது போயினர்; முன் இருந்த
மூப்புப் போயிற்று; முன்னர்க் கழிந்து மறைந்து போயின இளமை
காணப்பெற்று வந்திருந்தது; என இந்நிலைமையாயிருந்த தன்மை.
என் என - விளைந்த வண்ணம் எவ்வண்ணமென்று. மருண்டு -
அறிந்தும் அறியாதும் நிற்கின்றதொரு மயக்க நிலையினையுடையராய்.
நின்றார்
-தெளிய இயலாது மேற்செயலின்றி நின்றவராகிய நாயனார்.
வினையாலணையும் பெயர்.

     முன்னிலை நின்ற முதல்வர் - என எப்பொருட்கும்
சர்வசாட்சியாய் எல்லாப் பொருளுக்குள்ளும் நிறைந்து நின்றவன்
என்ற கருத்துமாம்.

     நின்றார் - என்றது செய்வதறியாது மருண்டு நின்ற நாயனார்
நிலைகுறித்தது. முன்னரும் பலமுறை நின்ற நிலைவேறு; இங்கு நின்ற
நிலைவேறு. முன் நின்றவை இவன் இறைவன், இது அவன் செயல்
என்று அறியாது நின்ற நிலை “நின்றபின்“ (373) “நின்ற
தொண்டரும்“ (377); “உரைப்ப தொன்றின்றி நின்றார்“ (380);

     “இறைஞ்சி நின்றார்“ (382) என்ற இடங்கள் காண்க. இங்கு
நின்றது அறிவு மறியாமையும் கலந்த நிலை. அதனால் மருண்டு
என்றார். “முன்னின்ற தெருட்சி மருட்சியினான் முதல்வன் கருணைக்
கடன் மூழ்கினரே“ (திருநாவு - புரா - 71) என்றது காண்க. வரும்
பாட்டில் “போற்றி நின்றார்“ (400) என்றது அறிந்த நிலை குறித்தது.
இவ்வாறு இம்மூன்று நிலைகளினியல்பும் இவற்றில் ஆன்ம போதம்
நிகழுநிலையும் இறைவனருட்சத்தி நிறைந்து ஆன்ம சிற்சத்தியைக்
கொண்டுசெலுத்தியியக்கு நிலையும் அறிந்து கொள்க. குரு இயல்பும்
அருளியல்பும் ஆன்ம இயல்பும் இச்சரிதத்தால் விளக்கம்பெற்று
உயிர்கள் கடைப்பிடித் தொழுகும் நெறி காட்டப் பெறுதலால்
“மின்னொளிர் சடையோன்றானும் தொண்டரை விளக்கங் காண,
நன்னெறி யிதுவாமென்று ஞாலத்தோர் விரும்பி யுய்யும்அந்நெறி
காட்டுமாற்றால்“ குருவாகி வந்தார் என்று முன்னர்க் குறித்தது (369)
காண்க. அதிசயங் கண்டார் மருண்டு நின்றார் எனக் கூட்டி
யுரைப்பாருமுளர். 40