4. மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
 
  துதிசெயு நாயன்மார் தூய சொன்மலர்ப்
பொதிநல னுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.
4

     (இ-ள்.) மதிவளர்........உளாரை - பிறை வளர்தற்கு
இடமாகிய சடைமுடியையுடைய திருச்சிற்றம்பல வாணரை; முன் துதி
செயும் நாயன்மார் - நினைந்து துதித்துச் செயல் செய்யும்
நாயன்மார்களுடைய; தூய.....பேரவை - தூய சொன்மலரின் நலத்தை
அனுபவிக்கும் தூயவர்களாகிய அடியார்களது
பெருந்திருக்கூட்டமானது; விதிமுறை - இறைவன் ஆணை வழியே;
உலகினில் விளங்கி வெல்கவே - உலகில் விளக்கமடைந்து வெற்றி
பெறுவதாக.

     (வி-ரை.) மதிவளர் சடை - மதியை வளரச்செய்து இடமும் கொடுத்த சடை; மதிவளர் - மன்றுளார் எனக் கூட்டித் தம்மை
யடைந்தார்க்கு நாளுநாளும் நல்லறிவு வளரச்செய்யும் இறைவன்
என்றுரைத்தலுமாம். ஆணவமல மறைப்பிலே கிடக்கும் உயிர்களுக்கு
இறைவன் நல்அறிவு விளக்கம் செய்து தன்னை அடையும்படி
செய்கின்றான் என்பது சாத்திரமாம். “நல்லறிவையும் வகுத்து”என்றார்
தாயுமானார்.

     முன் துதி செயும் - முன் - நினைக்கின்ற, துதி -
துதிக்கின்ற,செயும- செய்கின்ற என மூன்றாகப் பகுத்து மனம்
வாக்குக் காயம் என்ற மூன்றாலும் பணி செய்கின்ற நாயன்மார்
என்க. முன் - முன்னே என்று உரைத்தலும் ஒன்று. அடியவர்கள்,
தேவர்க்கும் ஏனைய எல்லார்க்கும் முன்னே சென்று நின்று துதிக்கும்
உரிமையுடையவர். “தொண்டர்கள்பின் உம்பர்குழாம் மல்குதிருக்
காளத்திமாமலை”என்பது திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 343.
இப்பொருளில் துதிசெயும் - துதிக்கும் என்க.


     நாயன்மார் - தலைவர்கள், அடியார்கள். சிவபெருமானது
திருவடிசம்பந்தமுடையவர்களே ஏனை யாவர்க்கும் தலைவராவார்
என்ற உண்மைப்படி அடியவர்களே நாயன்மார் (தலைவர்) என்று
பெயர் பெறுவர். நாயனார் என்பது எல்லார்க்குந் தலைவராயினமை
பற்றிச் சிவபெருமானுக்கே உரிய பெயர். அவர் பெயர் அவரைச்
சார்ந்த அடியவர்க்குமாயிற்று.


     “அழகிது நாயனீரே அமுதுசெய் தருளும்”என்றார்.
(கண் - புரா - 125) “அயவந்தி யமர்ந்த நாயனாரையும் அருச்சனை
புரிந்திட யந்தார்” (திருநீலநக்க நாயனார் - புரா - 7.) “நாயனு
மடிமையு நாட்டிய தாகும்” (அகத்தியர் தேவாரத் திரட்டுரை)
“தில்லை நாயனாரை நயந்துரை செய்தன” (சேதிராயர் திருவிசைப்பா
- 10.) முதலிய திருவாக்குக்கள் காண்க.


     புனிதர் - உள்ளும் புறம்பும் தூய்மையுள்ளவர்கள். “மாசிலாத
மணிதிகழ்மேனிமேற் பூசு நீறுபோல் உள்ளும் னிதர்கள்”(திருக்கூட்டச்
சிறப்பு.) “அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்” என்பது குறள்.
இராசத தாமத குணங்களின் தொழில் ஒழிந்து சத்துவ குணத்
தொழில் மிகுந்தவர்கள்.


     நாயன்மார் தூய சொல் மலர் பொதி நலன் நுகர்தருத லாவது - நாயன்மார்கள் அருளிய தூய தேவாரம் திருவாசகம் முதலிய தூய சொற்களாகிய மலர்களிலே பொதிந்த நலமாகிய
சிவபெருமானது புகழ்ச் சிறப்புக்களை எண்ணி எண்ணித் திளைத்து
அனுபவித்தல். நாயன்மார்களைப் பற்றிய தூயசொல் என்றுரைப்பினும்
அமையும். துதிசெயும் நாயன்மாரும் அந்தத் துதிகாளகிய தூய
சொன்மலர் நலனுகர் புனிதரும் நிறைந்த பேரவை என உம்மைத்
தொகையாக்கி உரைத்தலுமாம். நுகர்தரு - ஒருசொல். அதை
(நுகர்
புனிதர் - தரு புனிதர் என) இரண்டாக்கித், தாமும் நுகர்ந்து
பிறர்க்கும் தரும் புனிதர் என உரைக்கினும் அமையும்.


     பேரவை - அடியார்களது திறங்களை அனுபவிக்கும் பெருஞ்
சபை. பெருந் திருக்கூட்டம் - இச்சபை இறப்பு, நிகழ்வு, எதிர்வு
எனும் முக்காலத்தும் நிகழ்வதாதலாலும் அளவின்மையாலும் பெருஞ்
சபையாயிற்று. நுகர்தரு புனிதர் என மூன்று காலத்துக்கும்
பொருந்தும் வினைத் தொகையாற் குறித்ததும் காண்க. ஆதலின்
பேரவை என்றார். அளவின்மை வரும் பாட்டிற் காண்க. இச்சபை
எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழும் தன்மை

“மூவேந்தர் தமிழ்வடிங்கும் நாட்டுக் கப்பால்
     முதல்வனா ரடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும்
     நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்.......”                       என்பதனாற்  காண்க.
                  - அப்பாலுமடிச்சார்ந்தார் புராணம்

விளங்கி வெல்கவே - விளக்கமும் வெற்றியும் பொருந்துவதாக என்க.
விளக்கம் பெறுதல் உலகத்தாராற் போற்றப் பெறுதல்; வெற்றி
பெறுதல்
- மேலோங்கி நிற்றல். “வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க”முதலாகத் திருவாசகத்திலே இறைவனது திருவடிகள்
வெல்க - வெல்க என்று பன்முறையும் வாழ்த்திப் போற்றியது
காண்க.     4