400. கண்டனர், கைக ளாரத் தொழுதனர்; கலந்த காத
 
  லண்டரு மேத்தி னார்க; ளன்பர்தம் பெருமை
                                 நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின்மேல்
                         வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந் தொழுதுடன்
                          போற்றி நின்றார்.
41

     (இ-ள்.) வெளிப்படை. கண்ணாரக்கண்டார்கள்; கைகள்
நிறைந்து திருப்தியடையக் கும்பிட்டார்கள்; அன்பருடைய
பெருமையைப் பார்த்து விருப்ப மிகுந்த தேவர்களும் துதித்தார்கள்;
ஆகாயத்திலே பொருந்திய அழகிய திருக்கோலத்தினை வெளிப்படக்
காட்டி இடபவாகனத்தின் மேல் எழுந்தருளிவந்த இறைவரை
நாயனாரும் மனைவியாரும் தொழுதும் உடன் துதித்துக் கொண்டும்
நின்றார்கள்.

     (வி-ரை.) கண்டனர் - விடைமேற் கண்டார் கண்ணாரக்
கண்டனர். “கண்ணாரக் கண்டுமென் கையாரக்கூப்பியும்,
எண்ணாரவெண்ணத்தா லெண்ணியும்“ - என்ற அம்மையார்
அற்புதத் திருவந்தாதி (85) காண்க. முன்னர் “விடைமேற் கண்டார்“
என்றதும் நிருவிகற்பமாகிய பொதுக்காட்சி; யோகியாரைக் காணாதும்,
தந்நிலைமை மாறியும் மருண்டு நின்றவர்கள் மேலே ஒரு காட்சி
கண்டனர். கண்டதும் இவையெல்லாம் இறைவனது
திருவருட்செயலேயென்று தெளிந்தவர்களாய்க்
கண்ணாரகண்டுகொண்டு நின்றார்கள். முன் கண்டது வாயிற் காட்சி;
இது அதனைச் சிந்தித்துத்தெளிந்த அனுபவக் காட்சி.

     கைகளாரத் தொழுதனர் - மனநிறைவுபெறக் கைகளாற்
கும்பிட்டு நின்றனர்.

     கலந்த காதல் அண்டரும் - போக பதங்களை விரும்பி
யாகாதிகளைச்செய்து அவற்றிலே முழுகி இன்பத் துன்பங்களை
அனுபவித்து நின்ற தேவர்களும், தமது நிலைகளினெல்லாம்
பெரிதாகிய இந்நிலையினைக் கண்டு இதிலே ஆசை
கெண்டவர்களாகி அன்பர்தம் பெருமை நோக்கிக் கலந்த காதலால்
ஏத்தினார்கள் என்று கூட்டியுரைக்க. காதல் கலந்த அண்டரும்
நோக்கி ஏத்தினார்கள் என்றுரைத்தலுமாம். காதல் கலந்த அன்பர்
பெருமை என்று கூட்டி யுரைப்பாருமுண்டு.

     அன்பர்தம் பெருமை நோக்கி - நாயனாரது பெருமைகண்டு.
திரு ஆணைகாத்த உறைப்பினாலே பிறரெவரும் கடத்தற்கரிய
காமக்கடலைக் கடந்து தாம்கொண்ட சபதத்தைக் கடைபோகக்
காத்தும் இறைவனை வெளிப்படக் கண்டும் மீளஇளமை பெற்றுத்
திருவருட் பெருஞ் செல்வத்து மூழ்கிய பெருமையைப் பார்த்து.
அன்பின் பெருமையே எப்பொருட்கு மேலாய் விளங்குகின்றது
கண்டு.

     விண்தரும் பொலிவு காட்டி - விண் - ஞானாகாயம். தரும்
- பக்குவமுடைய ஞானநாட்டம் பெற்றவர்களுக்குத் தருகின்ற.
பொலிவு - பொலிந்து வெளிப்பட்ட திருக்கோலம். தரும் - கருணை
தருகின்ற என்றுரைப்பாருமுண்டு

     தொழுதுடன் போற்றி நின்றார் - கண்ணாரக் கண்டும்
கைகளாரத் தொழுதும், நின்றதுடனே, மனதாரத் துதித்துக்கொண்டும்
நின்றார்கள். போற்றுதல் - இறைவன் தம்பாற் செய்த
பேரருளின்றிறத்தினை வியந்து பாராட்டுதல். “எத்தனையுமரியநீ
யெளியையானாய்;......இத்தனையு மெம்பரமோ? ஐய! ஐயோ!
எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே!“ (திருத்தாண்டகம்)
என்றெல்லாம் அவரது அளவு கடந்த அருள் வெள்ளத்தினை
எண்ணி யெண்ணித் துதித்தல்.

     மேலே உரைத்தவாறன்றி இப்பாட்டிலே கண்டனர் -
தொழுதனர் என்றவற்றிற்கு அதிசயங்கண்டாராய் முதல்வரைக்
காணாது நின்ற பிற உலகர் என்று பொருள் கூறுவாரும் உண்டு.
நாயனாரும் மனைவியாரும் மட்டுமே திருவருட்பெருக்குக் கிலக்காகி
அதனைக் கண்களால் முகந்துகொண்டு போற்றியவராவர். இறைவனது
அருட்காட்சியின் வெளிப்பாடு பக்குவப்பட்ட ஆன்மாக்களே யன்றி
ஏனையோர் தேவரேயாயினும் காண்டலரிது என்பது உண்மை
நூல்களின் துணிபு. இங்கு இறைவன் இடபவாகனத்தின்மீது உமை
யம்மையாரோடு எழுந்தருளிய விண்டரும் பொலிவுபெற்ற காட்சி
நாயனாருக்கும் மனைவியாருக்குமே காட்டினார். அவர்களே
கண்டுதொழுது போற்றி நின்றார்கள் என்றுரைப்பதே பொருளாம்.
ஏனை உலகரும் தேவரும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகிய யோகியார்
சொற் செயல்களும், நாயனார் சொற்செயல்களும், மூழ்கி ஏறி
முதுமைபோ யிளமை பெற்றமையும் முதலியவற்றையே கண்டார்கள்.
அருட்காட்சி நாயனாரு மனைவியாருமே கண்டார் என்க.
திருஞானசம்பந்த நாயனார் புராணத்திலே இறைவனை ஆகாயத்தில்
நேரேகண்டு தோடுடைய செவியன் முதலாகிய திரு
அடையாளங்களாலே இவன் என்னை யிதுசெய்த எம்மான் என்று
ஆளுடைய பிள்ளையார் பாடியருளினர். ஆனால் விண்ணிற்காட்டிய
இறைவன் கோலத்தை அவரது தந்தையாரும் கண்டிலர்;
ஏனையோருங் கண்டிலர்; ஏனை நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டனர்.

“தாணுவி னைத்தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப்போற்
காணுதல் பெற்றில ரேனு நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு ளாத றுணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு காதலர் பின்சென்றார்.
                            - திருஞான புரா - 86

     என்றது காண்க. விரிவு அங்குக் காண்க. அரிய தவஞ் செய்து
ஆளுடைய பிள்ளையாரைத் தமக்கு மகனாராகப் பெற்ற
சிவபாதவிருதயரும் காணக் கூடாத காட்சியைச் சாமானிய
உலகர்களா காணவல்லவர்? எனவே, இப்பாட்டிற்கு யாவரும்
தேவரும் இறைவனது அருட்கோல வெளிப்பாட்டைக் கண்டனர்,
தொழுதனர், என்றுரைக்கும் உரைகள் ஒன்றும் பொருந்தாதன
என்றொழிக. இறைவன் தொண்டரை விளக்கங் காண ஞாலத்தார்க்கு
நெறி காட்டவே யோகியராய் வந்தார் என்றமையுங் காண்க.

     விண்டரும் - என்பதனை விண்டு அரும் எனப்
பிரித்துரைப்பாருமுளர். 41