401. மன்றுளே திருக்கூத் தாடி யடியவர் மனைக
                                 டோறுஞ்
 
  சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்க டேவர்
                                   தாமும்
“வென்றவைம் புலனான் மிக்கீர்! விருப்புட
                            னிருக்க நம்பா
லென்றுமிவ் விளமை நீங்கா“ தென்றெழுந்
                              தருளினாரே.
42

     (இ-ள்.) வெளிப்படை. திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடி,
அடியார்களது மனைகள் தோறும் போய் அவர்களது உண்மை
நிலையினை உலகறியக் காட்டுகின்ற தேவ தேவராகிய
சிவபெருமானும்“, (நாயனாரையும் மனைவியாரையும் நோக்கி)
“வென்று அடிப்படுத்தப்பட்ட ஐம்புலன்களினாலே மிக்கு
விளங்குபவர்களே! நீங்கள் இப்போது எமதருளால் மீளப் பெற்றஇந்த
இளமை என்றும் நீங்காதநிலையுடன் எம்மிடத்திலே இருப்பீர்களாக!“
என்று அருளிச்செய்து தமது நிறைவு நிலையினுள்ளே
எழுந்தருளிப்போயினார்.

     (வி-ரை.) மன்றுளே திருக்கூத்து ஆடி - மன்றினியல்பு,
திருக்கூத்தினியல்பு, ஆடும் இயல்பு முதலியன முன்னர் 350, 351
திருப்பாட்டுக்களிலும் பிற இடங்களிலும் உரைக்கப் பெற்றன.

     அடியவர் மனைகள் தோறும் சென்று - “அமர்நீதியார்
திருமடங்குறுக“ - அமர்நீதி - புரா - 9

“............திருமனையி லொருவழியே
தெள்ளுதிரை நீருலக முய்வதற்கு மற்றவர்த
முள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் றாமணை வார்.“
                     - மானக்கஞ்சாறர் - புரா - 21

“கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து“
- சிறுத்தொண்டர் - புரா - 36

     முதலியவை காண்க. அடியவர்கள் இருக்குமிடந்தோறும் தாமே
சென்று வலிய அவர்களை ஆட்கொள்ளுந் திறத்தாலே
உலகத்தையும் அறிவுறுத்தி ஆட்கொள்வது எமது பெருமானது
அருட்பெருக்கின் இயல்பு. உயிர்களை வழிப்படுத்தி ஆட்படுநெறியிற்
செலுத்தும். இதுவே அவரது ஐந்தொழிற் றிருக்கூத்தினியலும்
பொருளுமாம். ஆதலின் “திருக்கூத்தாடிச் - சென்று - காட்டும்“
என்று தொடர்புபடுத்திக் கூறினார்.

“இங்குநம் மில்லங்க டோறு மெழுந்தளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை“
- திருவெம்பாவை- 13

“பந்தணை விரலியு நீயுநின் னடியார்
பழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே“
- திருப்பள்ளியெழுச்சி - 8

     என்ற திருவாசகங்களின் சொல்லும், பொருளும், கருத்தும்
இங்கு வைத்து நினைவு கூர்தற்பாலன.

     அவர் நிலைமை காட்டும - அடியவர் நிலையை உலகுக்குக்
காட்டுவித்து உலகரை நன்னெறியிற் செலுத்தும். “உய்யும் அந்நெறி
காட்டுமாற்றால்“ என்ற விடத்துக் காண்க.

     தேவர்கள் தேவர் - தேவர்களிலெவரும் அடியவர் முன் வர
லாற்றாதவர்கள்; தொண்டர்களின் பின்னே நின்று அவர்களை
ஆசிரயித்துப் பயன்பெற வேண்டியவர்கள். இது முன்னர்
விளக்கப்பெற்றது. ஆதலின் தேவர்கடேவரே முன் வந்து அருள்
புரியவல்லார் என்பது.

     வென்ற ஐம்புலனால் மிக்கீர் - ஐம்புலன்களும்
வெல்லப்பட்டமையால் இவர்கள் சொல்வழி அவை ஏவல் கேட்டு
அமைந்து நின்றன. ஏனையோர்களை, அவை, தம்மைப் பின்பற்றி
நடக்குமாறு கீழ்ப்படுத்தித் தாம் மேலோங்கி நிற்பன. ஆதலின்
ஏனையோர்களது நிலைகள் கீழ்ப்பட்டனவே. இவர்களோ ஐம்புலனை
வென்றதனால் நிலைமையில் மேலோங்கியவர்கள். “தம்மை யைந்து
புலனும் பின்செல்லுந் தகையார்“ - சண்டீசர் புரா - 2 என்றது
காண்க. வென்ற - வெல்லப்பட்ட. மிக்கீர் - மேலெழுந்தவர்.

     “ஐந்தவித்தான்“ என்ற குறளில் புலன்களிற் செல்கின்ற
அவாவைந்தனையும் அடக்கினான் எனப் பரிமேலழகரும்,
நுகர்ச்சியாகிய ஐந்தினையும் துறந்தான் என மணக்குடவரும் உரை
விரித்தது காண்க. எனவே புலன்களைந்தும் நின்றன; ஆயின்
அவற்றிற் செல்லும் அவாவும், அது காரணமாக வரும் நுகர்ச்சியும்
இல்லையாயின என்க. இங்கு நாயனாரிடத்தும் மனைவியாரிடத்தும்
ஐம்புலனும் இருந்தன.மெய்யுறு புணர்ச்சி ஒன்றொழிய இல்வாழ்வாரும்
அடியாரும் செய்யும் எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றினர்.
புலன்கள் தம் செயலற்று இவர்கள் வசமாய்த்
தாழ்ந்து நின்றன
என்பதாம். ஐம்புலன்களையும் ஒடுக்கி அசைவற்றிருக்கும் யோகநிலை
வேறு; அவற்றை அடிப்படுத்தித் தம்வழி நிறுத்தி அவற்றின்கட்
செல்லுமவாவை இறை வழிபாட்டிற்செலுத்தி நிற்றல் வேறு.

“வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறும்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி“

     என்ற திருவிளையாடற்புராணமும் காண்க.

     இருக்க - வியங்கோள் - இருப்பீர்களாக. இவ்விளமை
நீங்காது விருப்புடன் நம்பால் என்றுமிருக்க என்றியைத்துக்கொள்க.
என்றும் மாறுபாடின்றி ஒரு தன்மையனாகவுள்ள இறைவன்பா
லிருப்பவர்களே என்றும் மாறுபடாத இளமையோடிருக்க
வல்லவர்கள். காலகாலனது சார்பினாலே அவர்கள் காலத்தை -
மரணத்தை - வென்றவர்களாகலான் என்பது. அன்றியும் ஏனையோர்
யாவரையும் சாகச்செய்யும் விடத்தை உண்டு சாவாமலும் மூவாமலும்
இருக்கும் சிவபெருமானொருவனே மூவாத இளமை தர வல்லவன்
என்றலுமாம். “சாவாமூவாச் சிங்கமே“ - திருப்புகலூர்த்
திருத்தாண்டகம் - 2.

     விஷ்ணு, பிரமன், இந்திரன், சந்திரன் முதலிய தேவர்களும்
அவ்வவர் சரிதங்களால் அறியக் கிடக்கின்றபடி, ஐம்புலன்
வெல்லமாட்டாது ஒவ்வோர் குற்றங்களுக்காளாயினர்; இங்கு நமது
நாயனாரும் மனைவியாருமே புலன் வென்று மிக்கார்கள் என்பார்,
இவ்விடத்துத் தேவர்கள் தேவன் என்ற பெயராற் கூறினார் என்ற
குறிப்புமாம். இதுவறை “நின்றா“ ராகிய அவரை இருக்க என்றார்
என்ற குறிப்புமாம். 42