402. விறலுடைத் தொண்ட னாரும் வெண்ணகைச்
                        செவ்வாய் மென்றோ
 
  ளறலியற் கூந்த லாரா மனைவியும் மருளி னார்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோக மதனை
                                 யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப் பேரின்ப முற்றா
                                  ரன்றே.
43

     (இ-ள்.) வெளிப்படை. வலிமைபெற்ற தொண்டரும்
மனைவியாரும் அருளினால் நிறைந்த திறமையான அரிய செய்கை
செய்து மேலே கூறியபடி அதன் விளைவாகிய சிவலோகத்தை
யடைந்து பிறர் எவராலும் பெறுதற்கரிய இளமையைப் பெற்றார்களாய்
அப்போதே பேரின்பத்தை அடைந்து விளங்கினார்கள்.

     (வி-ரை.) விறலுடைத் தொண்டனார் - விறல் - வலிமை.
புலனை வென்றது விறல். “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“
என்றதும் காண்க. இஃது வேண்டாமை என்கின்ற திண்மையால்
வரும் என்றார் நாயனார். “விறலீனும் வேண்டாமை யென்னுஞ்
செருக்கு“ - குறள்.

     வெண்ணகைச் செவ்வாய் மென்றோள் அறல் இயல் கூந்தலார்
ஆம் மனைவியும - இது மனைவியார் மீளப்பெற்ற இளமைக்
கோலத்தியல்பு கூறியதாம். வெள்ளிய நகையினை - பற்களை -
யுடைய சிவந்த வாயினையும், மெல்லிய தோள்களையும், கருமணல்
ஒழுக்குப் போன்ற கூந்தலையும் பெற்ற இளமை உடையவராய் ஆன
மனைவியாரும். வெண்ணகை - வெள்ளிய பல்வரிசை. நகை -
நகைப்பு. அதனைச் செய்யும் பல்லுக்காயிற்று. அறல் இயல்
கருமணலின் ஒழுக்குப் போன்ற தன்மை. ஆம் - ஆயின.

     செய்து எய்தி - செய்தல் - காரணம்; எய்துதல் காரியம்,
விளைவு. செய்ததனால் எய்தி யென்க.

     தொண்டரும் மனைவியும - செய்து - எய்திப் பெற்று -
அன்றே - பேரின்ப முற்றார் என முடிக்க.

     அருளின் ஆர்ந்த திறலுடைச் செய்கை - அருளிலே
நிறைவுபெற்ற செய்கை. திறலுடைச் செய்கை என்று கூட்டியுரைத்துக்
கொள்க. அருளினாலே நிறைவு பெற்றதாகிய திறல்
என்றுரைப்பினுமாம். அருளின் ஆர்தலாவது - திருவருள்
வசத்திற்கேயன்றி
வேறொன்றற்கும் இடந்தராமை திறல் உடைச்
செய்கை
- பிறர் எவராலும் செய்யலாகாத அரிய செய்கை.
செயற்கருமையே திறல் எனப்பட்டது. சிவலோகமதனை எய்தி -
மேற்பாட்டிலே “நம்பாலிருக்க“ என்று இறைவன் அருளியமையாலே
அன்றே சிவலோகத்தை யடைந்தனர். நம்பால் என்றது சிவலோகம்.
ஈண்டுச் சிவலோகம் என்றது சுத்த மாயா புவனத்தை; அதுவே
மீண்டு வராத முத்தியுலகமாதலின் என்க. “நலமிகு சிவலோகத்தில்,
ஊனமில் தொண்டர் கும்பிட் டுடனுறை பெருமை பெற்றார்“ என
இவ்வாறே இயற்பகை நாயனார் புராணத்திற் (35) கூறியதுங் காண்க.

     பெறலரும் இளமை - பிறர் யாவராலும் பெறுதற்கரியதாய்
முதுமையின் பின் மீளப் பெற்றமையாலும், ஏனை இளமைகள்
போலல்லாமல் என்றும் நீங்காதிருக்கும் நிலைமையாலும் இதனைப்
பெறலரும் என்றார். அன்றியும் திருவாணை என்று நிகழ்ந்ததோ
அன்றைக்கிருந்த அந்த இளமையே மீளப் பெற்றமையும் குறிப்பாம்.

     பேரின்பம் - நமதுசாமானிய பசுகரணங்களால்
அனுபவிக்கப்பெறும் இன்பங்கள் யாவும் சிற்றின்பங்களாம். அவை
சிறிதளவே நிற்பன; முடிவில் துன்பத்துக் கேதுவாவன. ஆனால் தமது
கரணங்கள் சிவனருட் பெருக்கினாலே சிவகரணங்களாக மாறப்பெற்ற
இவர்கள் அடைந்தது காலம்,இடம் முதலியன எந்த அளவைகளாலும்
அளவு படாததாய் உள்ளது; பேரானந்தம், பிரமானந்தம், சிவானந்தம்
முதலிய பெயர்களால் வேதங்களிற் பேசப்படும் பெருமையுடையது.
அன்று - ஏ அசை என்றொ துக்குவாரு முண்டு.

“பெற்றசிற் றின்பமே பேரின்ப மாமங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற, முளையாது மாயையென் றுந்தீபற“
- திருவுந்தியார் - 33

என்று சாத்திரங் கூறிய தொருநிலை. ஆயின் இங்கு நாயனார்
சிற்றின்பத்தைத் துறந்து திருநீலகண்டத் தியானத்திலே
னைந்தனுபவித்து வாழ்ந்து முடிவில் பேரின்ப நிலையடைந்தனர். 43