403. அயலறி யாத வண்ண மண்ணலா ராணை யுய்த்த
 
  மயலில்சீர்த் தொண்ட னாரை யானறி வகையால்
                              வாழ்த்திப்,
புயல்வளர் மாட நீடும் பூம்புகார் வணிகர்
                              பொய்யில்
செயலியற் பகையார் செய்த திருத்தொண்டு செப்ப
                               லுற்றேன்.
44

     (இ-ள்.) வெளிப்படை. அயலார் ஒருவரும் அறியாத
வகையாலே இறைவனது திருநீலகண்டத் திருவாணையைக் கடவாது
பாதுகாத்து வாழ்ந்தவரும், உலக மயக்கத்துட் படாது நீங்கியவரும்
ஆகிய சிறப்புடைய திருநீலகண்ட நாயனாரை யான் அறிந்த
அளவினாலே வாழ்த்தி, அவர் புராணத்தை நிறைவு செய்துகொண்டு,
அத்துணையாலே, மேகங்கள் தவழ்ந்து தங்கும்படி உயர்ந்த
மாடங்கள் நீடிய அழகிய புகார் நகரம் என்னும்
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகராகிய பொய்ம்மை
என்பதில்லாத செயல் புரியும் இயற்பகைநாயனார் செய்த
திருத்தொண்டினைச் சொல்லத் தொடங்குகிறேன்.

     (வி-ரை.) இதனால் இதுவரைச் சொல்லிவந்த புராணத்தை
முடித்துக்காட்டி, இனிச் சொல்லப்புகும் புராணத்திற்குத்
தோற்றுவாய் செய்தார்.

     அயலறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த -
இதுவே இப்புராணத்தின் உள்ளுறையாகிய தத்துவமாம். ஆணை
உய்த்தல் ஒன்றும், அதனை அயலறியாமல் வைத்தது ஒன்றும், ஆகிய
இவ்விரண்டையும் காட்டவே இறைவன் வந்தனர். ஆணையுய்த்தல
- எதனை இழக்கவரினும் ஆணையின் வரம்புகடவாமற் பாதுகாத்தல்.
உய்த்தல் - கொண்டு செலுத்துதல். அறியாமை வாழ்ந்தார் (367) என
முன்னரும் இதனைக் குறித்தமை காண்க. இப்புராணத்திற்கு முன்னர்த் தோற்றுவாய் செய்தவிடத்து “நிகழ் திருநீலகண்டக்குயவனார்“, “நீடு
வாய்மை திகழுமன்புடைய“, “செய்தவம்“ (359) என்று தொடங்கிக்
காட்டியவை இவையே என்று தொகுத்துக் காட்டியவாறு காண்க.
திருநீலகண்டம் = அண்ணலாராணை; நீடு வாய்மை = உய்த்தல் ;
செய்தவம் = அயலறியாது வாழ்ந்தது என்றிவ்வாறு கண்டுகொள்க.

     மயலில - ஏனையோர் யாவரையும் மயக்கி வீழ்த்தும் வலிய
உலகமயக்கமாகிய காமத்தினைத் தம்மிடம் இல்லாது செய்த. இல் -
இல்லையாகச் செய்த.

     சீர் - தமக்கே சிறப்பாயுரிய சிறப்பு.

     யானறிவகையால் வாழ்த்தி - செய்தவங் கூறலுற்றாம் (359)
என்றுதொடங்கிய யான் அதனை முற்றவுங் கூறினேனல்லேன் -
யான் என் அறிவின்அளவிலே போந்த வகையாலே வாழ்த்தி
முடித்துக் கொண்டேன். வாழ்த்தி - இச்சரிதப் பெருமை நிலவி
வளர்வதாக என்று துதித்து. இவ்வாறே முன்னரும் “போற்றி வாழ“
(359) என்றமை காண்க.

     “அருந்தமிழா கரர்சரிதை யடியேனுக் கவர்பாதந், தரும்பரிசா
லறிந்தபடி துதிசெய்தேன்“ திருஞா - புரா - 1256 என்றது போல
வரும் புராணங்கள் தோறும் இவ்வாறே கண்டு கொள்க.

     புயல் வளர் மாடம் - மேகந் தவழும்படி உயர்ந்தோங்கிய
மாடம். “தவளந்நெடு மாடம்... விண்டாங்குவ போலுமிகு வேணுபுரம்“
- திருஞான - நட்டபாடை - (1) முதலியன காண்க.இது மாடங்களின்
உயர்வு குறித்தது.

     நீடும் - பெருமையின் அளவாலும் காலத்தாலும் நீண்டிருக்கும்

     பூம்புகார் - புகார் - காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர். பூ -
அழகு - செல்வம் முதலியன குறித்த அடைமொழி. பூம்புகலூர்
என்றதுபோல. “பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக வுடையானும்“ -
திருஞான - சீகாமாம் (2) முதலிய பலவும் காண்க. புகார் என்றதனை
ஆளுடைய பிள்ளையார்,

“மண்புகார்; வான்புகுவர்; மனமிளையார்; பசியாலுங்
கண்புகார்; பிணியறியார்; கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா; வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாங்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே“

     என்று விரித்தருளி யிருப்பது காண்க.

     பொய்யில் செயல் - பொய்ம்மை யில்லாத உள்ளத்தாலே
என்றும் செய்கின்ற செயலையுடைய. இயற்பகையார்- திருநீலகண்டர்
எனப் பெயர் போந்தது போலப் போந்த காரணப்பெயர் என்பர்.
இஃதவரியற் பெயராய் நிகழ்ந்தது.

     செய்த திருத்தொண்டு - சரித வரலாறு.

     மயலிலாத் தொண்டனாரை - என்பதும் பாடம். 44