518. போன வேதியர் வைத்தகோ வணத்தினைப்
                              போக்கிப்
 
  பான லந்துறைப் பொன்னிநீர் படிந்துவந் தாரோ?
தூந றுஞ்சடைக் கங்கைநீர் தோய்ந்துவந் தாரோ?
வான நீர்மழை பொழிந்திட நனைந்துவந்
                            தணைந்தார்.
17

     (இ-ள்.) வெளிப்படை. போயின வேதியர், (நாயனார் காப்பிற்
சேமத்து) வைத்த கோவணத்தைப் போகச்செய்துவிட்டுப், பின்னர்,
நீலோற்பலகங்கள் மலர்தற்கிடமாகிய அழகிய துறைகளையுடைய
காவிரியின் நீர்மூழ்கித் திரும்பினாரோ? அதுவன்றித் தூய
மணமுடைய சடையில் உள்ள கங்கைநீர் தோய்ந்து வந்தாரோ?
அறியோம்; ஆனால் ஆகாயத்தினின்றும் வரும் நீராகிய மழை
பொழிய அதில் நனைந்து வந்து சேர்ந்தனர்.

     (வி-ரை.) போன வேதியர்......போக்கி - என்ற நயம்
காண்க. பிறர் அறிய வியலாது தாம் போயினது போலவே,
அதனையும் பிறர் அறியாமற் போகச்செய்து. போக்கி - உலகங்களை
யெல்லாம் சங்கார காலத்தில் காரணமாகிய மாயையில் ஒடுக்கிக்
காணாமற் செய்கின்ற இறைவனுக்கு இக்கோவணத்தைப்போக்கி
ஒடுக்குவது பெரிதோ என்க. சிருட்டியில் முதற்காரணமாகிய அருவப்
பொருளினின்றும் காரியங்கள் உருவமாகித் தோன்றும். ஒடுங்குங்கால்
உருவமாகிய காரியங்கள் அருவமாகிய காரண ரூபமாய் மறையும்
என்றது சாத்திர உண்மை. போக்கி என்பது இங்குக் காண
இயலாதபடி தன் காரணத்தினுள் மறையச்செய்து ஏனும் பொருளில்
வந்தது.

     பானல் அம் துறை - பானல் - நீலோற்பலம். காவிரித்
துறைகளில் அந்நீர் பாய்ந்து நிற்கும் பல கயங்களிலும் கரைகளிலும்
நீலம் முதலிய நீர்ப்பூக்கள் மலரும். பால் - நல் அம் -
நீர்த்துறைப் பொன்னி
என்று மாற்றிப் பிரித்துப் பால் போன்ற,
உண்ணுந் தன்மையும், தூய்மையும், தெளிவும் கொண்ட, நீரையுடைய
நல்ல அழகிய துறைகளையுடைய காவிரி என்றுரைப்பினும் அமையும்.
“வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும், உய்யவே சுரந்தளித்
தூட்டு நீரது“ (53) என.

     இக்கருத்துப் பற்றியே முன்னர்க் கூறியதுங் காண்க. படிந்து
வந்தாரோ? தோய்ந்து வந்தாரோ?
- ஓகாரங்கள் இரண்டும்
ஐயங்குறித்தன. இவர் காவிரியாட என்று அகன்றதே (516) யன்றி,
அதில் ஆடினாரல்லர்; கங்கை மடுத்ததும்பிய வளர்சடை மறைத்து
வந்தாராதலின் (516) சடைக் கங்கை நீரும் தோய்ந்திலர் என்பது.
காவிரியும் கங்கை போலவே கைலாயத்தினின்ற எழு பெரு நதிகளுள்
ஒன்றாதலின் இரண்டையும் ஒன்றுபடுத்திக் கூறினார். “கங்கையாம்
பொன்னியாங் கன்னி நீத்தமே“ (55) என்றதுங் காண்க. “கங்கை
யாடிலென் காவிரி யாடிலென்“ என இவ்விரண்டினையுமே
தொடர்புபடுத்தி யருளினார் அப்பர் சுவாமிகள். காவிரி நிலத்தில்
ஆழ ஓடி வருதலின் அதில் ஆடவேண்டுவோர் அதனுள்
வீழ்ந்துபடிய வேண்டுதலின், அதனிற் படிந்து என்றும், கங்கை
அவ்வாறு படிதல் வேண்டுதலின்றிச் சிரமிசைச் சடையினின்று வடிந்து
திருமேனியைத் தோய்விக்குமாதலின் அதனிற் றோய்ந்து என்றும்
கூறினார்.

     “ஆடிநான்வர மழைவரினும்“ (514) என்று கூறினாராதலின்,
அதன்படி ஆடிவரும்போது மழையில் நனைந்து வந்தார்
என்றபடியாம். மழைநீரால் நனைந்து வந்தது மடடும் கண்டார்களன்றி,
முன்னர் நீராடிய செயல் யாவருங் கண்டிலர். ஆனால் அவர் சத்திய
உருவராதலின் சொல்லிய வாக்குத் தவிராது நீராடியே வந்திருத்தல்
வேண்டும். ஆயின் அவர் அவ்வாறு ஆடியது காவிரியோ?
கங்கையோ? இவற்றுள் எதுவென்று அறியோம் என்றபடியாம்.காவிரி,
இவ்வுலகத்துள்ளதாலும், “தூய காவிரியினன்னீர் கொண்டிருக் கோதி
யாட்டி“(திருநேரிசை) என்றபடி அதுவே அவர் ஆடுதற்கடுத்ததாலும்,
அதனை முன்னர்க் கூறினார்.

     தூநறும் சடை - சடைக்குத் தூய்மை - கங்கையாலும்,
நறுமை
- மணம் - அதனிற் சூட்டிய கொன்றை மலராலுமாம்.
சடைக்கே தன்னியல்பில் தூய்மையும் நறுமையுமுண்டெனினு
மொக்கும். சடைத் தூநறுங் கங்கை நீர் என மாற்றி இவற்றைக்
கங்கை நீருக்கு அடையாக்கினு மமையும். திருமஞ்சன நீருக்கு இவை
யிரண்டும் அமையவேண்டுவன என்க.

     மழை பொழிந்திட
- (அவ்வாறு பொழிந்த) வான நீரில்
நனைந்து
என மாற்றிக் கொள்க. வானத்தில் நீராக உருப்பெற்ற
மேகம் மழையாய்ப் பொழிந்திட அதில் நனைந்து என்றலுமாம்.
வானநீரே கங்கைநீரும் காவிரிநீரும் ஆம்; ஆதலின் அதில்
நனையவே இந்நதிகளில் தோய்ந்தது முடன்கொள்ளப்படுமென்பதும்
குறிப்பாகும்.

     வந்து அணைந்தார் - நாயனார் திருமடத்திற்கு
வந்துசேர்ந்தனர். 17