406. ஆறு சூடிய வையர்மெய் யடிமை  
       யளவி லாததோ ருளநிறை யருளா
னீறு சேர்திரு மேனியர் மனத்து
     நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கு
     மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாமவ ரேவின செய்யும்
     பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்,
3

     (இ-ள்.) ஆறு...முடித்து - கங்கையைச் சடையிற்சூடிய
இறைவனது உண்மையாகிய அடிமைத் திறத்திலே அளவுபடாததாய
உள்ளத்திலே அருள் நிறைதலினாலே, நீறு பொருந்திய
திருமேனியையுடைய அடியவர்கள் தமது மனத்திலே எண்ணிய
எல்லாவற்றையும் செய்கையிலே நிறைவேற்றிக் கொடுத்து;
மாறிலாத...என - மாறுபெறாத நல்வழியிற் சிறந்த இல்லறத்தின்
வாழ்கின்றதால் வருகின்ற சிறப்புக்களெல்லாம் அவ்வடியவர்கள்
இடுகின்ற ஏவல் எவையோ அவற்றைச் செய்து முடிக்கும்
பெருமையேயாம் என்று கொண்டு; பேணி வாழ்நாளில் -
அக்கொள்கையின் வழியினின்று தவறாமற் பாதுகாத்து வாழ்ந்து
வருகின்ற நாளிலே;  


     (வி-ரை.) ஆறு சூடிய - சடையில் என்பது வருவித்துரைக்க.
ஆறு சூடுதல் உயிர்கள்பால் வைத்த கருணையைக் காட்டுவது.
“ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்“ என்றதற்குக்
கங்கையின் செருக்கடக்கிப் பிறையை வாழ்வித்த பெருமான் என்ற
பொழிப்புரை காண்க.

     ஐயர் அடிமை - ஐயரது அடிமைத்திறம் என ஆறாம்
வேற்றுமை யுருபு விரிக்க. மெய்யடிமை - உளத்தில் - ஐயர்
நிறைக்கும் அருள் எனக் கூட்டியுரைப்பினு மமையும்.

     ஐயர் - பெருமை யுடையவர்.

     மெய் அடிமை அளவிலாதது ஒர் உளநிறை அருள - மெய்
அடிமை - எவ்வித வஞ்சனையுமின்றி உண்மையாகிய அடிமை
செய்தல். யாவரும் அடிமைகளேயாயினும் அதனை நினைப்பதில்லை.
நான் என்பதனை முற்றும் அவர்க்கே ஆளாகச் செய்யும் அடிமைத்
திறம்.

     அளவிலாததோர் உளம் - இவ்வடிமைத் திறம் இம்மட்டிற்
செல்லும், இவ்வளவிற்கு மேற் செல்லாது என்றதொரு அளவுட்படாது
எல்லையின்றிச் செல்கின்ற மனப்பான்மை. “அளவு படாததோ
ரன்போ டையா றடைகின்ற போது“ என்று அப்பர் பெருமான்
அருளியதும் காண்க.

     நிறை அருள - அன்பினாலே அடிமைத் திறம் வரும்.
அடிமை அளவின்றிச் செல்லுதலாலே அதன்கண் அருள் நிறையும்.
அடிமையால் அருள்நிறை எனக் காரண காரியமாகக் கொள்க.
ஆதலின் நிறை அன்பென்னாது நிறை அருள் என்றார். நிறை
அருளால
- அருள் நிறைதலால் - என மாற்றி யுரைக்க.
அருளால்
- முடித்து எனக் கூட்டுக. அவ்வாறு முடித்தற்கும் பேறெலாம்
பெருமையே எனப் பேணிவாழ்தற்கும் அருள் நிறைந்ததே
காரணமாம் என்பதாயிற்று.

     அருளால் நீறுசேர் திருமேனியர் - என்று கூட்டி, அருளின்
வழி நின்று நீறு பூசிய மேனியராகிய அடியவர் என்றுரைப்பது
மொன்று.

     மேனியர்தம் மனத்து அருளால் நினைத்த - என்று கூட்டி,
தமக்கென்று ஒன்றும் கருதாது இறைவன்றிருவருள் வழியே நிற்கின்ற
அடியவர்கள் அவ்வருள் எழுவித்த குறிப்பின்படி நினைத்த
என்றுரைத்தலுமாம்.

     நீறுசேர் திருமேனியர் - மாறின்றித் திருநீறு தன்னியல்பாகப்
பொருந்திய விளக்கமுற்ற மேனி.

     சேர்தல் - இயல்பிற் பொருந்துதல் - மேனியின் இயலும்
நீற்றினியல்பும் தம்மிற் பொருந்துதலாம். “நீறுசேர்வதோர் மேனியர்“
(மேகராகக்குறிஞ்சி - திருப்பராய்த்துறை - 1) என்று ஆளுடைய
பிள்ளையார் ஆண்டவனுக்குச் சொல்லிய திருவாக்கினை ஆசிரியர்
இங்கு அடியவர்க்காக்கி எடுத்தாண்ட அழகு கண்டுகளிக்க.
ஆண்டவனே இங்கு அடியவர் வேடத்தாலணையும் சரிதக் குறிப்பாம்.

     மனத்து நினைத்த - தூயநீறு சேர்ந்த மேனியுள் நின்ற
மனமும் தூயதாம்; அதனுள் நினைத்தவை யாவும் தூயனவாம்
என்பது குறிப்பு. “பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்“ (141) என
முன்னர்க் கூறிய இலக்கணங் காண்க.

     யாவையும - முற்றும்மை. நினைத்தவை எவையேயாயினும்.
சரித நிகழ்ச்சிக் குறிப்பு.

     வினைப்பட முடித்து - நினைத்தவை தொழிற்படுமாறு செய்து
கொடுத்து; எண்ணம். தொழிலாக - செயலாக மாறும்படிச் செய்து;
எண்ணம் அடியாருள்ளத்தே நிகழ்ந்தது, உடனே அது இவரிடத்துத்
தொழிலாய்ப் புறத்தே முற்றியது என்னும்படி. அவர் நினைப்பும் இவர்
செயலும் ஒன்றேயாய் விளைய ஒற்றுமையும் விரைவும் குறித்தது.

     மாறிலாத - ஒப்பற்ற. மறுக்கமுடியாத என்றலுமாம்.
நன்னெறியினில்வந்த மனையறம் - இல்லறத்திற்கு இலக்கணமாய்
நூல்களில் விதித்த வழிகளில் தவறாது நடந்து வரும் இல்வாழ்க்கை.
இதனைத் திருக்குறள் முதலிய நீதிநூல்களுட் காண்க. மனையறம்புரி
மகிழ்ச்சியின் -

    “இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு -
                     நல்லாற்றி னின்ற துணை“
    “துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
                 மில்வாழ்வா னென்பான்றுணை“
    “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்                             தானென்றாங்
        கைம்புலத்தா றோம்பல் தலை“ - திருக்குறள்.

என்பனவாதி நியதிகளின்படி நடத்தலால் மகிழ்ச்சியுளதாம். அதனால்
விளையும் பயனும் பலவாம். இவையே பேறு எனப்பட்டது.
மகிழ்ச்சியாவது ஈத்துவக்கு மின்பமும் - மனைவி மக்கள் ஒக்கல்
முதலியோரால் வருவனவுமாம்.

     வந்த பேறெலாம - செய்யும் பெருமையேயாம்.இப்பெருமையே
பெரிதாவதன்றி ஏனைய வெவையும் பெருமையன்று என்று
கூட்டிக்கொள்க.

     பேணி - அக்கொள்கை தவறாது பாதுகாத்து. மேலே நீதி
நூல்களிற் கூறியமனையற நியதிகளும் இல்வாழ்க்கையின்
பயனேயாயினும் இவை பசுதர்மங்களேயாம்; சாமான்யமானவையும்
அழியக்கூடியவையும் ஆகிய தேவ போகங்களையே தருவன; பொன்
விலங்கேபோல நின்று முத்திபெறுதலைத் தடுக்கு மியல்புடையன;
ஆதலின் இவை பந்தமேயாம்; எனவே, இவை சாதாரண
பலனேயாயொழிவன. இவ்வாறன்றி அடியார்பணியோ எனின்
பதிபுண்ணியமாய் ஞானத்திற் கேதுவாய்ச் சிவானுபவந் தந்து
சிவசாயுச்சிய நித்திய இன்பத்துக் கேதுவாம். ஆதலின் பேறெலாம்
பெருமையே எனப் பேணினார் என்பது கருத்து. அவர் ஏவின -
அவ்வடியவர்களால் எவப்பெற்றன. அவர் - முன்சொன்ன நீறுசேர்
திருமேனியரைச்
சுட்டியது. ஏவின - செயப்பாட்டு வினைப்பொருளில்
வந்தது. அடியார்பணி அடியவர்க்காதலோடு ஆண்டானுக்குமாவன
ஆதலின் அதனையே பேணினார் என்க. மிக்க சீர் அடியார் - (405)
என மேற்பாட்டிற் கூறியதும் காண்க.

     இப்பாட்டிற்கு இயற்பகையார் என எழுவாய் வருவித்துரைக்க.

     வினைப்படி - விளங்க - என்பனவும் பாடங்கள். 3