416. மனைவியார் சுற்றத் தாரும் வள்ளலார் சுற்றத்
                                   தாரும்
 
  “இனையதொன் றியாரே செய்தா?ரியற்பகை பித்த
                                  னானாற்
புனையிழை தன்னைக் கொண்டு போவதா
                         மொருவ?“ னென்று
துனைபெரும் பழியை மீட்பான் றொடர்வதற்
                         கெழுந்து சூழ்வார்,
13

     (இ-ள்.) மனைவியா...என்று - மனைவியாராகிய அம்மையாரது
சுற்றத்தார்களும், வள்ளலாராகிய நாயனாரது சுற்றத்தார்களும் “இது
போன்றதொரு செயலை யார்தான் இதுவரைச் செய்தர்கள்? வேறு
ஒருவரும் செய்யாத செய்கை செய்யுமாறு இயற்பகை பித்தம்
கொண்டு விட்டானானால் அது காரணமாக மனைவியாரைக்
கொண்டு ஒருவன் போய் விடுவதாகுமா?“ என்று கருதி;
துனை...சூழ்வார் - இச்செயலால் உற்ற பெரும் பழியினின்றும்
மீட்பதற்காக அவரைப் பற்றித் தொடர்வதற்குக் கூடி எழுந்து
சூழ்வார்களாகி,


     (வி-ரை.) வள்ளலார் - கொடுத்தற்கரிய மனைவியைக்
கொடுத்தும் விடுத்தும் புரிந்த கொடைச் சிறப்பு நோக்கி இங்கு
வள்ளலார் என்ற பெயராற் கூறினார். வள்ளல் - வரையாது
கொடுப்போன். அதனினும் மிக்க சிறப்புத் தோன்ற, வள்ளல்
என்றமையாது, பன்மையாக்கி வள்ளலார் என்றார்.

     பித்தனானால் - நாட்டவர் பிறரெவரும் செய்யாத பழிச்
செயலைக் கூசாது வெளிப்படையாய்ச் செய்த அதனால் அவன்
பித்தனேபோன்றனன்; அவ்வாறு அவன் பித்தனேயாயினும்.

     புனையிழை - இழை - இழைக்கப்பட்டது. செயப்படுபொருள்
விகுதி குன்றியது. புனையிழை - அணிகள் புனைந்து
அம்மையாரைக் குறித்த அன்மொழித் தொகை.

     வணிகர்களாயினமையின் அணிகளின் விலையைக்
கருதினார்கள் என இங்கு விசேடவுரை காண்பாரு முண்டு. பின்
நிகழ்ச்சிகளால் ஆசிரியர்க்கேனும், சுற்றத்தார்க்கேனும் அது
கருத்தன்றென்று விளங்கும்.பழி போக்குவதே அவர்கள் கருதியதாம்.

     துனை பெரும் பழியை - துனை - துன்னுவதாகிய (துன் -
பகுதி); பழியை - பழியினின்றும். வேற்றுமையுருபு மயக்கம். மீட்பான்
- மீட்பதற்கு - மீட்கும் பொருட்டு பானீற்று வினையெச்சம்
பழியினின்றும் நாயனாரையும் மனையிாரையும் குலத்தையும் மீட்க -
விடுவிக்க. பழிவிட (418) என்று கூறுவது காண்க.

     சூழ்வார் - முற்றெச்சம். சூழ்வார் - எதிர்வளைத்துக்
கொண்டார் என முடிக்க.

     யாரேசெய்தார் - ஒருவரும் செய்தாரிலர். வினா எதிர்மறைப்
பொருளில் வந்தது.  13