42. அத்தி ருப்பதி யின்னமை யாளுடை
 
  மெய்த்த வக்கொடி காண விருப்புட
னித்த னீடிய வம்பலத் தாடும்; மற்
றித்தி றம்பெற லாந்திசை யெத்திசை.
32

     (இ-ள்.) அத்திருப்பதியின் ... ஆடும - (மேலும்)
அத்திருத்தலத்திலே நம்மை ஆட்கொள்ளும் நாயகியாரான
சிவகாமசுந்தரி யம்மையார் விருப்புடன் எப்போதும் காணும்படி
நித்தன் என்றுமுள்ள திருவம்பலத்திலே திருவுருக்கொண்டு
திருக்கூத்து ஆடுகின்றான்; மற்று ...... திசை? வேறு எந்தத் திசை
இதுபோன்ற பெருமை பெற்றுள்ளது?     

     (வி-ரை.) மெய்த்தவக் கொடி - உண்மைத் தவத்திலே
முளைத்த கொடி போல்வாராகிய அம்மையார்.

     விருப்புடன் - இடைநிலைத் தீவகமாய், விருப்புடன் காண
என்றும்,விருப்புடன் ஆடும் என்றும், இரண்டுடனும் கூட்டியுரைக்க.
இருவரும் வேண்டுதல் வேண்டாமை யிலாதவராதலின் இங்கே
குறித்த விருப்பு - உயிர்கள் உய்யவேண்டும் என்று வைத்த
கருணையேயாம், தம் பொரு ட்டன்றிப் பிறர் பொருட்டெழுந்த
விருப்பமாம். இதனையே “நமையாளுடை” என்று குறித்தார்.

     ஆளுடைய - கொடி - காண - அம்மை தவஞ்செய்தல்,
நடங்காணுதல்,அதனால் உயிர்களை உய்ய ஆட்கொள்ளுதல் என்ற
இந்நிலைகளின் விளக்கம்பற்றி மெய்கண்ட ஞான நூல்களிலும்
சிவாகமங்களிலும் கண்டுகொள்க.

     காண - இறைவன் அந்த விருப்புடன் திருக்கூத்தாடவும்
அதனைத் தங்கள் ஊனக் கண்ணாற் காண்பதற்கு ஆன்மாக்கள்
வலிமையில்லார் ஆதலின், இறைவியார் தாம் கண்டு அக்காட்சியின்
பயனை ஆன்மாக்களாகிய தமது மக்களுக்கு ஊட்டுவர். “பாலுண்
குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண் டாங்கு”
என்று குமரகுருபர சுவாமிகள் விளங்க எடுத்துக் காட்டியருளினார்.

     நீடிய அம்பலம் - அறிவு மயமாய் என்று முள்ள சித்து
ஆகிய அம்பலம். இதுவே சிற்றம்பலம் என்பதாம்

     நித்தன் ஆடும் - அம்பலம் என்றும் நீடுவது, அவனும்
நித்தன் - என்றும் உள்ளவன், அவன் ஆட்டமும் முக்காலத்தும்
நிகழ்வது, ஆதலின் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றாற்
கூறினார்.

     எத்திசை - வினா, வேறு இல்லை என இன்மை குறித்தது.

     ஆடும் - என்றதனால் திருக்கூத்து - ஆட்டம் - என்பது
பெறப்பட்டது. இதன் இயல்பு திருமூலர் திருமந்திரம் முதலிய சைவத்
திருமுறைகளிலும் சாத்திரங்களிலும் சிவாகமங்களிலும் கண்டு
கொள்க. இதுவே முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் உயிர்கள்
உய்தற் பொருட்டு நித்தமாகச் செய்தருளும் ஐம்பெருந்தொழில்களைக்
கூட்டும் திருக்கூத்து. பஞ்சகிருத்திய நடனம் என்பர். ஆனந்தக்
கூத்துமாம்.

“தோற்றந் தடியதனிற் றோயுந் திதியமைப்பிற்
சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமா
வூன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு” என்பது சாத்திரம்.

“இத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாக”
என்று துதித்தனர் குமரகுருபர சுவாமிகள்.

“...கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்து கந்தானே”

                - திருமூலர் - 9 - 84

“... தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானே”
 
              - திருமூலர் - 9 - 101

என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. இன்னும் இதன் விரிவுகளை
இப்புராணத்திலே அங்கங்கே வந்த வந்த இடங்களிலும் கண்டு
கொள்க.

“அண்ண லார்தமக் களித்தமெய்ஞ் ஞானமே யானவம்                                    பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழு மானந்த வொருபெருந்
                             தனிக்கூத்தும் ...”
 
      - திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - 160

எனப் பின்னர்க் கூறுவதும் காண்க.

     இக்கருத்துக்களைப் புராண முதற்றிருப்பாட்டிலே “அம்பலத்
தாடுவான
”என்ற இடத்து வைத்தருளினார். ஆண்டுரைத்தவை
பார்க்க.  32