421. “ஏட!நீ யென்செய் தாயால்? இத்திற மியம்பு
                               கின்றாய்;
 
  நாடுறு பழியு மொன்னார் நகையையு நாணா;
                                 யின்று
பாடவ முரைப்ப துன்றன் மனைவியைப் பனவற்
                                கீந்தோ?
கூடவே மடிவ தன்றிக் கொடுக்கயா மொட்டோ“
                               மென்றார்.
18

     (இ-ள்.) வெளிப்படை. (நாயனார் இவ்வாறு சொல்லிப்
போர்க்கு நேரவே) சுற்றத்தார்கள், “ஏட! நீ என்ன காரியம்
செய்தனை? இந்நாட்டவர்க்கு உன் செய்கையால் வருகின்ற
பழியினையும், பகைவர் இகழ்ந்துநகைப்பதனையும் கண்டு
நாணமடைகின்றாயில்லை; மனைவியை வேதியனுக்குக்
கொடுத்துவிட்டோ நீ உனது வலிமையைப புகழ்ந்து சமர்த்துக்
கூறுவது? இக்காரியத்தில் இறக்க நேரினும் நாங்கள் ஒருசேர
இறந்துபடுவதல்லாமல் நீ உன் மனைவியை வேதியனுக்குக் கொடுக்க
விடமாட்டோம்“ என்று கூறினார்கள். 

     (வி-ரை.)
ஏட! இகழ்ச்சி குறித்த விளிச்சொல். தோழனை
விளிக்கும் முன்னிலைச் சொல் என்று கொள்வாருமுண்டு.

     ஒன்னார் - பகையாயினார். பழியும் இரண்டாம் வேற்றுமை
உருபு தொக்கது.

     பாடவம் - பெருமை கூறுதல் என்றலுமாம்.

     கூடவே மடிவதன்றி - பின் நிகழ்ச்சியின் முற்குறிப்பு. தம்
மழிவு தம் வாக்கிலே பிறந்தது. இஃதோர் உலகியல்பு. இவ்வாறே
“அணைந்தன ரெங்களை வாதினில் வெல்ல“ (திருஞான - புரா -
685) முதலிய பல இடங்களிலும் அவ்வவர் வாக்கிலே வரும்
முற்குறிப்பு மொழிகளைக் காண்க. கூடவே மடிவது
உன்னோடுங்கூடவே நாங்களும் என்றுரைப்பாருமுளர்.

     கொடுக்க - நீ கொடுக்க. ஒட்டோம் - நாங்கள்
சம்மதிக்கமாட்டோம்; விடமாட்டோம். ஒட்டு - இணங்குதலைக்
குறிப்பதோர் வினைச்சொல். யாம் கொடுக்க ஒட்டோம் என்பது
அவர்களது மனத்தின் நிலையாகிய கோபங் கருதி நிலைமாறிக்
கொடுக்க யாம் ஒட்டோமென வந்தது. மோனை கருதியதுமாம்.

     மணஞ் செய்காலத்தில் - வேள்வித்தீ - தேவர்கள் -
சுற்றத்தார் முதலிய அனைவர் முன்னிலையிலும் அவர்களைச்
சாட்சியாக வைத்து இந்தப் பெண்ணை மணஞ் செய்தது ஆயுள்வரை
அறவழியிலே வைத்துக் காக்கவேயல்லாமல், அறம் பிறழ்ந்து
பிறர்க்குக் கொடுத்துவிட அன்று; ஆதலின் இது எங்கள் சம்மதியன்றி
நிறைவு பெறாது; இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம் என்ற
தொடர்புபற்றிக் கூறினார்கள்.

     இத்திறல - என்பதும் பாடம். 18