433. அழைத்தபே ரோசை கேளா “வடியனேன்
                       வந்தேன்! வந்தேன்!“
 
  பிழைத்தவ ருளரே லின்னும் பெருவலித் தடக்கை
                                   வாளி
னிழைத்தவ ராகின் றாரென் றியற்பகை யார்வந்
                               தெய்தக்,
குழைப்பொலி காதி னானு மறைந்தனன் கோலங்
                            கொள்வான்.
30

     (இ-ள்.) வெளிப்படை. (இவ்வாறு) அழைத்த பேரோசையைக்
கேட்டு இயற்பகையார், “அடியேன் இதோ வந்து விட்டேன்!
வந்துவிட்டேன்! இன்னும் பிழைத்தவர்களாய் உம்மைத் தடுப்பவர்கள்
யாரேனும் இருந்தார்களானால் எனது மிக வலிய கையில் ஏந்திய மிக
வலிய வாளினால் வெட்டுண்டவராகின்றார்கள்“ என்று சொல்லிவந்து
சேர்தலும், குழை விளங்கிய காதினையுடைய இறைவனும் அவருக்கு
அருள் செய்யும் பொருட்டு அருட்சத்தி வெளிப்படக் கோலம்
கொள்வதற்கு மறைந்தனர்.

     (வி-ரை.) பேரோசை - உரத்த சத்தத்தால் ஓலமிட்டார்
என்பது.எங்கும் நிறைந்த நாத உருவனாகிய இறைவனது ஒலியாதலின்
எங்கும் நிறைந்த பேரோசையாயிற்று என்க. இவர் செய்கை புவன
மூன்றுய்ய நிகழ்ந்தது என முன்னர்க் குறித்ததும் காண்க. இயற்பகை
முனிவா - என்பதாதியாகப் பேர் குறித்த ஓலமாகிய ஓசை
என்றுரைத்தலுமாம்.

     வந்தேன்! வந்தேன்! - மிக விரைவுபற்றி வருவேன் என்னாது
இறந்த காலத்திலே வந்தேன் எனக் கூறினதோ டமையாது இருமுறை
அடுக்கியும் கூறினார்.

“வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள் வென்மனார் புலவர்.“
                  - வினையியல் 44.
 
“விரை சொல்லடுக்கே மூன்றுவரம் பாகுமே.“
                    - எச்சவியல் 28.

என்ற தொல்காப்பியச் சூத்திரங்கள் காண்க.

     பிழைத்தவர் - பிழை செய்தவர் எனவும், முன்னரே ஒழிந்தே
மாளாமல்தப்பிப் பிழைத்தவர் எனவும், இருபொருளுங் கொள்க.

      பெருவலித்தடக்கை வாளின் - பெரு வலி தட என்னும்
அடைமொழிகளைக் கையினுக்கும் வாளினுக்கும் தனித்தனிக் கூட்டுக.
வாளின
- வாளினால்.

     இழைத்தவர் - வாளினால் இழைத்தவர் - இழைக்கப்பெற்றவர்.
செய்வினை செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. வாளின்
இழைத்தல
- வெட்டித் துண்டித்தல். ஆகின்றார். எதிர்காலத்து
நிகழும் பொருள் நிகழ்காலத்தாற் கூறியது நிச்சயம - உறுதி
என்னும் பொருட்டு.

“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ் வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை“
                   - வினையில் 48.

என்பது தொல்காப்பியம்.

     வாளால் இழைத்தவராகின்றார். அது உறுதி - தெளிந்த
பொருள் - என்றது தற்புகழ்ச்சியாகாது; போர் முதலியவற்றில்
இவ்வாறு கூறல் மரபும் இயல்புமாம். வேதியர்க்குத் தேற்றமும்,
பிழைத்த பகைவருளரேல் அவர்க்கு அச்சமும் தருதலே கருத்தாலின்
இஃதமையுமென்க.

     என்று - வந்து - எய்த - சொல்லல் - வருதல் - எய்துதல்
(சேர்தல்) மூன்றும் ஒருங்கே நிகழ்ந்தன. எய்த - மறைந்தனன் -
அவ்வாறே அவர் சேர்தலும் இவர் மறைதலும் ஒருங்கே நிகழ்ந்தன.

     குழை - சங்கக்குழை. குழைப்பொலிகாது - குழையைப்
பொலிவித்த காது என்றலுமாம்.  கோலங் கொள்வான் - முன்
பூண்டு வந்ததும் ஒரு கோலமேயாயினும் அதுமாய வண்ணமாகித்
தந்தொண்டர் மறாத வண்ணத்தை உலகர்க்குக் காட்டக்
கொண்டதாம். அக்கோலங் கொண்ட செயல் முற்றவே அதனை
மறைத்தனர். இனிக் கொள்ளும் கோலம் நாயனார்க்கும்
மனைவியார்க்கும் அருளக் கொள்வது. கொளவான் - வானீற்று
வினையெச்சம் கொள்ளும் பொருட்டு என்க. மறைந்த விரைவுபற்றி
வினைமுற்றை முன்னர்க் கூறி அதனைக் கொண்டு முடியும் வினை
யெச்சத்தைப் பின்னர் வைத்தார். வேதியக்கோலம் திரோதானசத்தி
கூடியது. இனிக் கொள்ளும் கோலம் அருட்சத்தியுடன் கூடியது.
அக்கோலம் வரும் பாட்டிற் காண்க. உம்மை இறந்தது தழுவியது.30