439. இன்புறு தாரந் தன்னை யீசனுக் கன்ப ரென்றே
 
  துன்புறா துதவு தொண்டர் பெருமையைத்
                        தொழுது வாழ்த்தி
யன்புறு மனத்தா னாத னடியவர்க் கன்பு நீடு
மன்புக ழிளசை மாறன் வளத்தினை வழுத்த
                               லுற்றேன்.
36

     (இ-ள்.) வெளிப்படை. இதுவரைச் சொல்லி வந்தபடி,
இன்பமுறும் தமது மனைவியை இவர் இறைவனடியார் என்ற
அடிமைத்திறத்தையே நினைத்து யாதொரு கவலையுமின்றி இல்லை
யென்னாது கொடுத்தளித்த தொண்டராகிய இயற்பகையாரது
தொண்டின் பெருமையைத் தொழுது வாழ்த்திக்கொண்டு, அதன்
துணையாலே, இனி, அன்பு கொண்ட மனத்தினால்
இறைவனடியார்களிடத்திலே அன்பு நிடிய நீலை பெற்ற புகழுடை
இளையான்குடியிலே வந்த மாற நாயனாருடைய அன்பின் வளத்தைத்
துதிக்கத் தொடங்குகின்றேன்.

     (வி-ரை.) இன்புறுதாரத் தன்னை...உதவும் - இச்சரிதத்தை
முடித்துக் காட்டி மேல் வருஞ் சரிதத்துக்குத் தோற்றுவாய்
செய்தவாறு. 403 உரை பார்க்க. அங்ஙனம் முடித்துக் காட்டும்
வகையிலே இச்சரிதத்தின் உள்ளுறை சாரமான தத்துவத்தைச் சுருக்கி
எடுத்து வடித்துக் காட்டிய அழகு காண்க. தாமின்புறக் கொண்ட
தாரத்தை இறைவன் அடிமைத் திறமே கருதி அடியார்க்கு எவ்விதக்
கவலையுமின்றிக் கொடுத்ததே இதன் முடிந்த பொருளாகக்
கூறப் பெற்றது.

     நாதனடியார்க் கன்புநீடும
- மேல்வருஞ் சரிதமாகிய
இளையான்குடி மாற நாயனார் சரித தத்துவத்தைச் சுருக்கிக் காட்டித்
தோற்றுவாய் செய்தவாறு. வறுமைவந்த காலத்திலும் மாறாது
அடியாரிடத்தில் அன்பு நீடியிருப்பது அவர் சரித உள்ளுறையாம்.
வளம - வளஞ் சுருங்கிய காலத்தும் மணஞ் சுருங்காமல் நின்று
வளமுடையராகிய செயலைச் செய்தமை புராணத்திலே காண்க.
“வளஞ் சுருங்கியும் மணஞ் சுருங்குதலின்றி“ (446). ஆதலின் இங்கு
வளத்தினைச் சிறப்பிற் குறித்துக் கூறினார்.

     இளசை - இளையான்குடி என்பதன் மரூஉ. தஞ்சாவூர் தஞ்சை
என்றாற் போல. இப்பதியினைப் பற்றிய விவரம் வரும் புராணத்துட்
காண்க.

     மாறன் - நாயனார் பெயர். 36