441. ஏரின் மல்கு வளத்தி னால்வரு மெல்லை
                      யில்லதோர் செல்வமும்
 
  நீரின் மல்கிய வேணி யாரடி யார்தி றத்து
                             நிறைந்ததோர்
சீரின் மல்கிய வன்பின் மேன்மை திருந்த
                        மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன்
                               கொள்வார்,
2

     (இ-ள்.) வெளிப்படை. ஏர்த்தொழிலால் நிறைந்து பெருகும்
உழவு வளங்களினாலே வரும் உணவும், அவை கொண்டு ஆக்கப்
பெரும் அளவில்லாத பிற செல்வமும், கங்கை தங்கிய
சடையாரடியவர்கள் திறத்திலே நிறைந்ததாகிய ஓரும் சிறப்பினின்
மிக்க அன்பினது மேன்மை திருந்தும்படி நிலைத்த மனமும்
உலகிலே வளர்ந்து நிலவுமாறு விரும்பி, அவைகளைத் தாம்
பெற்றதனாலாகிய நீடிய பயனை அடைவாராய்,


     (வி-ரை.) ரின் மல்குவளம் - ஏர்த்தொழிலால் உளவாய்
மிக்க விளைவு. ஏர் - ஆகுபெயராய் ஏர்த்தொழிலாகிய உழவைக்
குறித்தது. வளம - விளைவு.

     செல்வம - விளைவினாலே தரப்படும் பலவகை உணவுப்
பொருள்களும், விளைவுகொண்டு பெறும் பிற எல்லாவகைச்
செல்வங்களும் ஆம். உழவே ஏனை எல்லாச் செல்வங்களுக்கும்
காரணமாதல் குறிப்பு. ஏரின்றெனில் விளைவு - உணவு இல்லை;
அஃதின்றேல் உயிரில்லை என்பர்; ஆதலின் எல்லையில்லதோர்
என்றார். எல்லாவகையு மடங்க மல்குவளம் என்றார்.

     ஓர் - ஒப்பற்ற. “உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா,
தெழுவாரையெல்லாம் பொறுத்து“, “சுழன்று மேர்ப்பின்ன துலகம்
அதனா,லுழந்து முழவே தலை“, “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க்
காண்பார், அலகுடை நீழலவர்“ என்பன வாதி உண்மைக்
கூற்றுக்களைக் காண்க. ஏரின் வளத்தாலே உலகம் இயல்கின்றது.
பொன் முதலிய வேறு எவ்வகையிற் சிறக்கினும் உழவில்லையேல்
உலகம் உணவின்றி யிறக்கும். இவ்வுண்மையை இந்நாள் உலகம்
மறந்து அலைந்து பேய்போற் பிற பலவற்றின் பின்னே திரிகின்றது;
ஏருக்குத் தீமையும் புரிகின்றது; இதனால் ஏர்வளம் சுருங்கவும், அது
பிற வளங்களைத் தரமாட்டாது வாடவும் வைக்கும் இந்நாள் உலக
நிலை பெரிதும் வருந்தத்தக்கது. உலகம் ஏர்க்கண்ணே திரும்பித்
திருந்தி யுய்வதாக.

     நீரின்மல்கிய வேணியர் - நீர் - கங்கை. மல்கிய நீரின்
வேணி என மாற்றிக் கொள்க. நீரின்மல்கிய- உலகத்திற்காதரவாகிய
முற்கூறிய ஏரின் வளத்திற்
காதரவாகிய நீரின் மல்கிய என்று
குறிப்பார் இதனை அடுத்துவைத்த அழகு காண்க. அந்நீருக்கும்
ஆதரவு இறைவன தருளே என்பது குறிப்பாம். “ஏரி னுழாஅருழவர்
புயலென்னும், வாரி வளங்குன்றிக் கால்“ என நாயனார் கூறுவதும்
காண்க. இப்பொருத்தங்களை இம்முறையே,

“பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியி னின்ற
நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
                         போவன்காண்....“
           - திருத்தாண்டகம் திருச்சிவபுரம் - 6.

என்று அப்பர் பெருமான் அருளியிருப்பதும் காண்க. (இங்குப்
பரிசாக நிலவேந்தர் நினைவுறுதலாவது தமது நீதி முறைக்காக
இறைவன் கருணை கூர்ந்து வானம் வழங்கச் செய்து தம் கீழ்உள்ள
உயிர்களை வாழுமாறு செய்கிறானென் றெண்ணுதல்.)

     வேணியர் அடியார் திறத்து - வேணி - ஒன்றோடொன்று
கூட்டிக்கொண்டிருப்பது. வேணியாரது அடியார்களின் திறத்திலே.
வேற்றுமை உருபுகள் விரிக்க. திருந்த - திருத்தமாக இருக்கும்படி.

     பாரின் மல்க விரும்பி - “யான்பெற்ற வின்பம் பெறுகவிவ்
வையகம்“ என்றபடி உலகினரும் செல்வமும் சிவசிந்தையும் பெற்று
என்றும் பெருகி நீடுக என்று விரும்பி. “பூதபரம்பரை பொலிய“,
“மன்றுளா ரடியாரவர் வான்புகழ், நின்ற தெங்கு நிலவி
யுலககெலாம்“ என்ற புராணத் திருவாக்குக்கள் காண்க. இதனானே,
இம்பர் ஞாலம் விளக்கினார் என மேற் பாட்டிற் கூறியதும் காண்க.

     மற்றவை பெற்ற நீடு பயன் - மற்று அந்தச் செல்வமும்
சிந்தையும் தாம் பெற்றதனால் உளதாகிய நீடிய பயன். “கற்றதனா
லாய பயன்“ (குறள்) என்புழிப் போலக் கொள்க. நீடுபயன் - தம்மோ
டொழியாது பின்னரும் வழிவழி நீடி வருவதாகிய பயன். அவை
பெற்ற பயன் தாம் அடியவர்களைப் பேணுவதனோ டொழியின், அது
தம்மோடு நின்றுவிடும். தாம் பேணுவது போலப் பாரின் மல்கப்
பிறரும் பேணுவாராயின் அப் பயன் நீடி வரும் - என எண்ணி,
உலகில் யாவரும் செல்வமும் சிவசிந்தையும் பெற்று அடியாரைப்
பேணி ஒழுகி உய்யக் கடவர் என்றதனையே விரும்பி வந்த நாயனார்
செய்தவற்றை மேல் வரும் இரண்டு பாட்டுக்களிற் கூறுகின்றார்.

     இவ்வாறு பாரின் மல்க விரும்பி வந்தமை காரணமாகவே,
பின்னர், இவர் சிவப்பேறு எய்திய காலத்து“இருநிதிக் கிழவன்றானே,
முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி யேவல்கேட்ப வின்பமார்ந்
திருக்க“ என்று இறைவன் அருளினன் என்பதும் காண்க (465).
விரிவு ஆண்டுக் காண்க.

     செல்வமும் சிவசிந்தையும் தாம் பெற்றதன் நீடுபயன் கொள்வார்
அவ்வாறே உலகமும் பெற்று மல்க விரும்பிய நாயனாரது மனத்தின்
றொழில் இப்பாட்டாற் கூறினார். அங்ஙனங் கொண்ட
மனத்தோடுபசரித்த வாக்கின் றொழில் வரும் பாட்டாலும், பாதம்
விளக்கி அருச்சித்து அமுதூட்டுவதாகிய காயத்தின் றொழில்
அதன்மேல் வரும் பாட்டானும் கூறுகின்றார்.

     சிவபூசை அடியார் பூசைகளில் மன முதலாயின
முக்கரணங்களும் ஒன்ற வழிபடும் முறையும், மகேசுவர பூசை
முறையும் வகுத்துக் காட்டியவாறுமாம். மகேசுவர பூசையிலே
மகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதத்தின் பலனாலே உலகிலே
செல்வமும் சிவசிந்தனையும் பெருகி நிலவும் என்பது.

     நீடுபயன - காலத்தால் நீடுவதன்றி அளவினாலும் நீடுவதாம்
- பெரியதாம். அரன் பூசையினும் அடியார் பூசை இரட்டைப்
பயனுடைய தென்பது ஆகமங்கள் மொழிந்த உண்மை, “படமாடக்
கோயிற் பகவற் கொன்றீயி, னடமாடக் கோயி
னம்பர்க்கங் காகா;
நடமாடக் கோயி னம்பர்க்கொன் றீயிற், படமாடக் கோயிற் பகவற்க
தாமே“ (ஏழாந் தந்திரம் - 154) என்பது திருமூலர் திருமந்திரம்.
“கபாலீச்சர மமர்ந்தான், ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்,
கட்டிட்டல் காணாதே போகியோ பூம்பாவாய்“ என்ற ஆளுடைய
பிள்ளையார் திருமயிலைத் தேவாரத்தையும், அதனை வடித்தெடுத்துக்
காட்டிய “மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடு, மண்ணலா
ரடியார்தமை யமுதுசெய் வித்தல், கண்ணினாலவர் நல்விழாப்
பொலிவுகண் டார்தல், உண்மையாமெனி லுலகர்முன் வருக“ (திருஞா
- புரா - 1087) என்ற புராணத் திருவாக்கும், “வேத வுள்ளுறை
யாவன விரிபுனல் வேணி, நாதர் தம்மையு மவரடி யாரையு நயந்து,
பாத வர்ச்சனை புரிவதும் பணிவது மென்றே, காத லாலவை
யிரண்டுமே செய்கருத் துடையார்“ (திருநீலநக்கர் புராணம் - 5)
என்ற புராணமும் இங்கு நினைவுகூரத் தக்கன.

     பயன்கொள்வார் - அளித்துளார் - எனக்கூட்டி முடிக்க.
இதனை வினைமுற்றாகக் கொண்டு விரும்பி.(விரும்பியதனாலே)
அவை பெற்ற நீடு பயனைக் கொள்வாராயினார் என முடிப்பாரு
முண்டு. திருந்தி - மற்றிவை - என்பனவும் பாடங்கள். 2