449. ஈர மேனியை நீக்கி யிடங்கொடுத்
 
  தார வின்னமு தூட்டுதற் காசையாற்
றார மாதரை நோக்கித் “தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்“ னென்று,
10

     (இ-ள்.) வெளிப்படை. (முதலில்) அவரது திருமேனியின் ஈரம்
போக்கிப் பின் அவர் எழுந்தருளியிருக்க ஓர் இடங்கொடுத்து, அதன்
பின், அவர் தம் மன நிறைவு கொள்ளுமாறு அமுதூட்டுதற்கு
ஆசைகொண்டமையினாலே, தமது தாரமாகிய அம்மையாரை
நோக்கி, “இந்தத் தபோதனர் தீரப்பசித்துள்ளார்; நாம் செய்வதென்னே“ என்று பின்னரும்,


     (வி-ரை.) ஈரமேனியை நீக்கி - மேனி ஈரத்தை நீக்கி.
இரண்டனுருபைப் பிரித்துக் கூட்டி மாற்றுக. இடங்கொடுத்து -
வந்தவர் எழுந்தருளியிருத்தற்கு ஒரு இடம் கொடுத்து. இதனைத்
தாபனம் என்பது சைவ சம்பிரதாயம்.

     இன்னமுது ஆரஊட்டுதற்கு என்று மாற்றி யுரைத்துக்கொள்க.
அவர் மனமகிழ எனவும், தமது மனமார எனவும் இருவழியும் கூட்டி
யுரைக்கத் தக்கது. தாரமாதர் - தாரமாகிய அம்மையார். தாரம் -
மனைவி, பெறற்கரிய மாதரார் என்றலுமாம்.

     தபோதனர் தீரவே பசித்தார் - தபோதனர் - தவத்தையே
தனமாக உடையவர். தவமாகிய செல்வத்தை யுடையவர். தவம -
சிவபூசை. தீரவே பசித்தார் - அறப்பசித்தார் - மிகவும்
பசியுடையராயினர். “தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந்,
துண்டது மூன்று புவனமு முண்டது“ என்ற திருமூலர்
திருமந்திரத்தின்படி, (ஏழாம் தந்திரம் - மாகேசுவரபூசை - 155),
அடியார் உண்ட வுணவு மூவுலகத்தினும் உயிர்களுக்குப் பசிதீர்க்கும்.
என்னை? இவர்கள் உண்ணவே, இவர்களுக்குள்ளே நிறைந்த
இறைவன் உண்கின்றான்; அவன் உண்ணவே, அவன் உயிர்க்குயிராய்
நிறைந்த மூவுலகத்துயிர்களுக்கும் அவ்வுணவு ஆகின்றது என்க.

     தீரவே பசித்தார் - நாம் இனிப் பசிப்பிணி இல்லாமற்
றீரும்படி - அதாவது பசிப்பிணியுடன் கூடிய பிறவி யறும்படி என்ற
குறிப்பும் காண்க. அவர் மிகப் பசித்து வந்த விருந்தினர் என
நாயனார் அறிந்த வகை மேலே “பசிதலைக் கொள்வது“ (448)
என்றதன் கீழ்க் குறிக்கப்பெற்றது. 10