451. மாது கூறுவண் “மற்றொன்றுங் காண்கிலேன்;
 
  ஏதி லாரு மினித்தரு வாரில்லை;
போதும் வைகிற்றுப்; போமிடம் வேறிலை;
தீது செய்வினை யேற்கென் செய?“ லென்று;
12

     (இ-ள்.) வெளிப்படை. அதற்கு அம்மையார் விடை கூறுவாராய்
“அதனுக்கு வழி வேறொன்றுங் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக்
கொடுப்பவர்களில்லை; காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று; மற்றும்
சென்று தேடக்கூடிய பிற இடங்களும் ஒன்றுமில்லை;தீவினையேனுக்கு
இனி யென்ன செயலுளது?“ என்று சொல்லிப் பின்னரும்,


     (வி-ரை.) மற்றொன்றுங் காண்கிலேன் - மற்று ஒன்றும -
என்றதனால் ஒன்று உள்ளது; அதனைத் தவிர வேறு ஒன்றும் -
என்பது, அவ்வொன்று வரும்பாட்டிற் கூறுகின்றார்.
அவ்வொன்றினையன்றி மற்ற வழிகளாக எண்ணக்கூடியவற்றை
எல்லாம் இப்பாட்டிற் றனித்தனி கூறிக் கழித்து அவ்வொன்றினையே
முடிபாகக் கூறும் காரணமும் காட்டிய அழகு காண்க.

     ஏதிலார் - அயலார். வேறு ஏதும் தொடர்பு இல்லாதவர்.

     இனி - இதுவரைத் தன்னை மாறி யிருக்க உள்ள கடன்கள்
தக்கனவுங் கொண்டு (446) விட்டமையின் இனிக் கடன் வாங்க
இயலாமை குறித்தவாறு.

     போதும் வைகிற்று - வைகுதல் இங்கு நீட்டித்து விட்டமை
குறித்தது. போது - பொழுது. அகாலமாயினமை வேறிடம்
போகக்கூடாமைக்குக் காரணமாம்.

     இடம் வேறு - இவ்வூரன்றிப் பிற ஊறினும் என்ற குறிப்புமாம்.

     தீதுசெய் வினையேற்கு என் செயல்?
- தாமும் தம்
நாயகரும் மனத்தில் எண்ணியபடி அடியார் பூசைக்கு அமுதமைக்க
இயலாமையின், இல்லாளின் கடமையாகிய இதற்குரிய தாம் செய்த
தீவினையின் பயனாகவே கருதி மனைவியார் வருந்துகிறார்.12