461. மனைவியார் கொழுநர் தந்த மனமகிழ் கறிக
                                 ளாய்ந்து
 
  புனலிடைக் கழுவித் தக்க புனிதபாத் திரத்துக்
                                கைம்மை
வினையினால் வேறு வேறு கறியமு தாக்கிப்
                                 பண்டை
நினைவினாற் குறையை நேர்ந்து திருவமு தமைத்து
                                  நின்று,
22

     (இ-ள்.) வெளிப்படை. மனைவியார் தமது கணவர்
மனமகிழ்ச்சியுடன் தந்த கறிகளை இலை வேறு தண்டு வேறு
முதலியனவாக ஆய்ந்தெடுத்துக் கறிக்கானவற்றை நீரினாலே கழுவி,
அதற்கேற்ற தூய பாத்திரத்திலே யிட்டு, முன் பழகிய தமது
கைப்பழக்கத்தினாலே வெவ்வேறாகப் பலவகைக் கறிகளாகச்
சமைத்துப், பழைய நினைவினால் உளதாகிய குறையை எண்ணி
ஒருவாறு மனந்தேர்ந்துகொண்டு, திருவமுது வகைகளை
முற்றஅமைத்து எழுந்து நின்று,

     (வி-ரை.) கொழுநர் - கணவர் (459); மனமகிழ்கறிகள் -
இங்குத் திருவமுதுக்காக வேண்டப்பெறுவனவற்றுள் இறுதியான
கறிவகையும் முட்டுப் படாமற் கைகூடியமையாலே திருப்பணி முற்றுப்
பெறக் கிடைத்ததென்று எண்ணினார். ஆதலின் மனமகிழ்கறிகள
எனப் பெற்றது. ஆய்ந்து - குறும்பயிரின் பல பகுதிகளிலே வேர்
முதலிய ஆகாத பகுதிகளும் கீரை முதலிய ஆகும் பகுதிகளும்,
இலைக்கறி முதலிய ஆகும் பகுதிகளிலே நோய், பழுப்பு, புழுவெட்டு
முதலியன இல்லாத பகுதிகளும் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து
பாகுபடுத்தி. கழுவி - இலைக்கறிகளைச் செம்மையாகக் கழுவிய
பின்னரே அடுப்பில் வேவிக்க வேண்டுமென்பது பாக நூல் விதியும்,
மருத்துவநூல் விதியுமாம்.

     தக்க புனித பாத்திரம் - கறிவகைகளுக்கு ஒத்தனவும்
அடுதலிலே, கைப்பு முதலிய பகைப்பயன் படாதனவுமாகிய பாத்திரந்
தெரிந்து கொள்ளுதல் வேண்டுவதும் அந்நூல்களின் விதியாம்;
ஆதலின் தக்க - புனித என அடை கொடுத்துக் கூறினார்.
பாத்திரம் புனித மற்றவழிக் கறிகள் பகைப்பயன் படுவனவாம் என்க.
தக்க என்றதனால் கறிகளின் தன்மைக்கு மாறுபடாமல் ஒத்தது
என்றும், புனித என்றதனால் அப்பாத்திரந்தானும் தூய்தாக்கப் பெற்ற
என்றும் குறித்தபடி.

     கைம்மை வினையினால - கைப்பழக்கத் தேர்ச்சித் திறத்தினாலே.

     வேறு வேறு கறியமுது - ஒரே வகைக் குறும்பயிர்களை
இலைவேறு, தண்டுவேறு, முதலியவாகப் பொரிக்கறி, துவட்டல்,
புளிக்கறி முதலிய பலவகையாக ஆக்கின கறிகள்.

     பண்டை நினைவினாற் குறையைநேர்ந்து - முன்னர்ச்
செல்வமுற்ற காலத்திலே இன்னும் பற்பல வகையாக உண்டிகள்
“நாலு விதத்தி லாறு சுவைத்திறத்தன“ (443) வாகச் சமைத்து
அடியார்க் கமுதளித்து வந்த நற்பெரு நிலை நனைவிற்கு வர,
அக்குறையை இப்போது உள்ள மட்டில் கைம்மை வினையினாலே
இத்தனைபடியாக இவைகளை அமைத்து அடியார்க்கமுதாக்கப்
பெற்றோமே என்ற மன நிறைவினாலே நிரப்பிக் கொண்டு. 22