466. இப்பரி சிவர்க்குத் தக்க வகையினா லின்ப நல்கி
 
  முப்புரஞ் செற்றா ரன்பர் முன்பெழுந் தருளிப்
                                 போனார்
அப்பெரி யவர்தந் தூய வடியிணை தலைமேற்
                                 கொண்டு
மெய்ப்பொருட் சேதி வேந்தன் செயலினை
                          விளம்ப லுற்றேன்.
27

     (இ-ள்.) வெளிப்படை. இப்பரிசாக இவர்க்குத் தகுந்த
வகையினாலே இன்பங் கொடுத்துப் பின்பு திரிபுர மெரித்த
இறைவனார் அன்பரின் முன்பு தோன்றிய வெளிப்பாட்டு
நிலையினின்றும் தமது வியாபகநிலைக்குள் எழுந்தருளிப் போயினார்.
அந்தப் பெரியவராகிய இளையான்குடி மாற நாயனாருடைய தூய
திருவடியிணைகளை எமது தலைமேற் சூடிக்கொண்டு,
அத்துணைகொண்டு மெய்ப்பொருள என்ற பேருடைய
சேதிநாட்டரசரது செய்தியைச் சொல்லப் புகுகின்றேன்.

     (வி-ரை.) இது கலிக்கூற்று. இதுவரை சொல்லிவந்த சரிதத்தை
முடித்துக் காட்டி மேல்வருஞ் சரிதத்திற்குத் தோற்றுவாய் செய்தபடி.

     இப்பரிசு - மேலே சரிதத்திற் கூறியபடியாலே.
தக்கவகையினால
- இவர்செய்த திருத்தொண்டிற்குத் தகுந்த
வகையினாலே. அது மேற்பாட்டிற் காண்க.

     முப்புரஞ் செற்றார் - அடியாரது மும்மலங்களையும் நீக்கி
அடியவரை அளவில்லா ஆனந்தத்தில் வைக்க வந்த நிலையாதலின்
இப்பெயராற் குறித்தார். “முப்புரமாவது மும்மல காரியம்“ - என்பது
திருமந்திரம். முன்பு - முன்பு நின்றும் ஐந்தனுருபு விரிக்க.
எழுந்தருளிப் போனார்
- வெளிப்பாட்டு நிலையினின்றும் நிறைவு
நிலையினுள் மறைந்தனர். பெரியார் - செய்தற்கரிய செயல் செய்தார்.

     தலைமேற் கொண்டு விளம்பலுற்றேன - அடியார் புகழ்
அளவிடற்கரிதென்று கூறிய யான், இப்பெரியவரைத் துதித்து அவர்
பாதந் தலைவைத்த புண்ணியத்தின் துணைகொண்டு சொல்லலுற்றேன்
என்பது.

     சேதி வேந்தன் - சேதி - நாட்டுப் பெயர். மெய்ப்பொருள்
- நாயனார் பெயர். செயல் - செய்கை; சரிதம். 27