467. சேதிநன் னாட்டி னீடு திருக்கோவ லூரின் மன்னி
 
  மாதொரு பாக ரன்பின் வழிவரு மலாடர்
                                கோமான்
வேதநன் னெறியின் வாய்மை விளங்கிட
                          மேன்மை பூண்டு
காதலா லீசர்க் கன்பர்கருத்தறிந் தேவல்                                 செய்வார்;
1

     (இ-ள்.) வெளிப்படை. நன்மை பொருந்திய சேதி நாட்டிலே
திருக்கோவலூரிலே நிலைபெற்ற அரசு செலுத்தி வாழ்ந்து,
உமாதேவியாரை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமானிடத்தில்
வைத்த அன்பிலே வழிவழியாக வருகின்ற
மலாடர் கோமானாகிய
மெய்ப்பொருணாயனார், வேத நன்னெறியினது உண்மைத்திறம்
உலகிலே விளக்கமடையும்படி மேன்மை பூண்டவராய் மிக்க
அன்பினாலே இறைவனது அடியார்களது கருத்தறிந்து அவர்களுக்கு
ஏவல் செய்து வருவாராகியும்.


     (வி-ரை.) சேதி நன்னாட்டுத் திருக்கோவலூர் - சேதி -
நாட்டின் பெயர். திருக்கோவலூர் - நகரின் பெயர். எனவே,
இப்புராணத்திற்குரிய நாடும் நகரமும் கூறியவாறு. நன் - நீடு -
என்பன முறையே அவற்றின் சிறப்புக் கூறியன. மலாடர்- வழிவரும்
- ஏவல் செய்வார்
- எனக் கூறியவாற்றால் அந்நாட்டு மக்கட்
சிறப்பும், அரசு மரபுச் சிறப்பும், அரசரும் அவரது பண்பும் என்ற
இவற்றை எடுத்துரைத்தார்.

     சேதிநாடு - இது நடுநாட்டின் ஒரு சிறு உட்பகுதியாம்
தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ளதாதலின்
நடுநாடு எனப் பெறும். தொண்டைநாடும் அதன் வடக்கில் உள்ள
வடநாடும், சோழநாடும் அதன் தெற்கில் உள்ள தென்னாடு எனப்
பெறும் பாண்டிநாடும் என்ற பலவற்றுள்ளும் நடுவில் உள்ளது
இந்நடுநாடு என்றலும் பொருந்தும். இந் நடுநாட்டினுள், வழிவழி வந்த
பல சிற்றரசு மரபினர்களால் ஆளப்பெற்ற பல உட்பகுதிகளான சிறு
நாடுகள் உண்டு. அவற்றிலே சேதிநாடு ஒன்று. நாட்டினை ஆளும்
அரசமரபினர் பேரால் வழங்கும் சோழநாடு, பாண்டியநாடு
என்பனபோல, இந்நாட்டினை ஆளும் சேதியர் மரபுப்பேரால்
சேதிநாடு எனும் பேரும் வந்தது என்பர். திருவிசைப்பாப் பாடிய
சேதிராயர் இம்மரபில் வந்த அரசர்களில் ஒருவர் என்ப.

     மலாடர் கோமான் - இந்தச் சிற்றரசு மரபு வழியிலே
மலையமான், நத்தமான், சுருதிமான் என மூன்று உட்பிரிவினர்
உள்ளார் எனவும், அவர்களில் மெய்ப்பொருணாயனார் மலையமான
என்ற பிரிவினைச் சேர்ந்தவர் எனவும் கூறுவர். சோழன் நாடு
சோணாடு என வந்ததுபோல, மலையமான்நாடு மலாடு என மருவி
வந்ததென்பர். புணரியற் புறனடையானே மரூஉ வழக்கிற்கு
இலக்கணங்களில் இதனைப் புலவர் உதாரணங்காட்டுவதும் காண்க.
திருநாவலூரில் அரசு செலுத்திய நரசிங்கமுனையரைய நாயனார்
இம்மூன்றுட்பிரிவுகளில் ஒன்றனைச் சார்ந்தவர் என்று
கூறுவாருமுண்டு. சுருதிமான் மரபினர்க்கு மூப்பர் என்ற பேரும்
உண்டென்பர். முனையதரையர் என்பதே முனையரையர்
என்றாயிற்றென்றும், அம்மரபும் இவற்றுடன் விரவியதென்றும்
ஆராய்ச்சியாளர் கூறுப. இவற்றின் விரிவெல்லாம் சரித்திர
ஆராய்ச்சியிற் கண்டு தெளிக.


     சேதி நன்னாட்டு
- நன் - சேதி என்ற பெயருக்கும்
அதனைக் கொண்டுமுடியும் நாடு என்ற பெயருக்கும் இடையில் வந்த
பண்பு குறித்த இடைப்பிறவரல் என்பர் இலக்கண நூலார். “தூய
மாதவஞ் செய்தது தொண்டை நன்னாடு“ என்புழிப் போலக் கொள்க.
“உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும், பெயர்வினை யிடைப்பிறவரலுமா
மேற்பன என்பது இலக்கணம். ஏற்பனவே இடைப்பிறவரலாய் வரும்
என்றதனாலே இந்நாட்டுக்கு நன்மையே ஏற்றதென்பது கருத்தாம்.
நன்மையாவது நாடாவளங்கள் மிகுதலோடு, நலங்களுள் மிக்கதாகிய
வீடுபேற்றுக்குரிய நலமும் மிகுதல்.

     நீடு திருக்கோவலூர் - திரு நீடு கோவலூர் என
மாற்றியுரைத்துக்கொள்க. திரு - சைவத்திரு. கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்பர் பேராசிரியர்.

     கோவலூர் - சிவபெருமான் வீரஞ்செய்த எட்டுத் தலங்களுள்
ஒன்றாய் அந்தகாசுரனைச் சங்கரித்த தலம். இதனைத் திருக்கு -
ஓவல் - ஊர்
- எனப் பிரித்து அறியாமையை ஒழித்து உயிர்களுக்கு
அருள் புரியும் தலம் என்று தலமான்மியங்கூறும். எனவே
உயிர்களுக்கு ஊனத்தை நீக்கி அருளும் தன்மை நீடிய ஊர் என்க.
“கோவலூர் வினையை வென்ற வேடத்தான் வீரட்டானஞ்“,
“கோவலூர்தனுள் வீடுகாட்டு நெறியினான் வீரட்டானம்“ என்ற
ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரங்கள் காண்க.

     மன்னி - இவ்வரச மரபு நெடுங்காலமாக நிலைபெற்று வழிவழி
இந்நகரைத் தமது தலைநகராகக் கொண்டு அரசளித்தது என்பதாம்.

     அன்பின் வழிவரும் - இரு மரபிலேயும் சிவனடியார்களான
பரம்பரையில் வழி வழி வந்த சைவ மரபினர் என்க. “வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த, பழவடியார்“ என்பது
திருவிசைப்பா. மாதொரு பாகர் அன்பின் வழிவரும -
“அருளென்னும் அன்பீன்குழவி“ என்றபடி இங்கு, அன்பு என்றது,
அருளின மூலத்தைக் குறித்ததாகக் கொண்டு,பாகர் உயிர்களின்மேல்
வைத்த அருண் மூலத்தினானே அதன் வழி உலகில் வளர்ந்து
வருகின்ற என்றுரைத்தலுமாம். “நாரையூர் அன்பனுக்கு“, “அன்பர்
கோயி லெதிர்கொள் பாடி“ “தீர்ந்த அன்பாய அன்பர்க் கவரிலுமன்ப
போற்றி“ முதலிய தேவார - திருவாசக ஆட்சிகளும் காண்க. பல
பிறவிகளிலேயும் சிவனுக்கு அன்பு செய்த வழி எனவும், சிவன்
வைத்த அருண் மூலவழியிலே வந்த எனவும் இருவழியும் உரைக்க
நின்றது.,

     வேத நன்னெறியின் வாழ்மை விளங்கிட மேன்மை
பூண்டு
- சித்தாந்த சைவம் வேத நெறிகளையெல்லாம் தன்னுள்ளே
அங்கமாய் அடங்கத் தான் இவற்றுள் அடங்காது முழுமுதற் றன்மை
பெற்று விளங்குவது. “வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்
துறைவிளங்க“ என்ற புராணங் காண்க. வேதத்திற் சொல்லிய பலவுங்
சைவத்தின் அங்கமாவன. அங்கங்கள் விளங்கவே முழுமையும்
விளங்குவதாம். “வேதமோது நெறியினான் வீரட்டானம்“ என்ற
இத்தலத் தேவாரங் காண்க.

     வேதநெறி என்னாது வேத நன்னெறி எனவும், அதனோடமையாது வேத நன்னெறியின் வாய்மை - எனவுங்
கூறியது வேதங்களின் உள்ளுறை உண்மையான சைவத்திறத்தினைக்
குறித்தது. “வேத உள்ளுறையாவன“ அரனடியார் பூசையும், அரன்
பூசையுமே எனத் திருநீலநக்க நாயனார் புராணத்துக் கூறியதும்
காண்க.

     வேதநெறி விளங்கிட மேன்மை பூண்ட இவ்வரசர் பொதுப்பட
அதனுள் விதித்த எல்லா அறங்களையும் காவல் புரிந்தனரேனும்,
தாம் காதலால் ஈசர்க்கன்பர் கருத்தறிந்தேவல் செய்வாராயினார்
என்றதாம். அரசராதலின் எல்லா அறங்களையும் காக்குங்
கடப்பாடுடையர்; ஆயினும், அவற்றின் உண்மைநிலையினைத் தம்
ஒழுக்கத்திலே வைத்து உலகில் நடந்து காட்டினார் என்பது.
விளங்கிட - தாம் நிற்பதனோடு உலகினையும் நிறுத்தும் பொருட்டு
- விளங்கச் செய்ய. விளங்கிடம் மேன்மை - விளங்கும் இடமாகச்
சுட்டி யறியத்தக்க மேன்மை என்றலுமாம்.


     காதலால் - ஆசையினாலே. பிறிதோர் பயன் கருதாது
உள்ளெழுந்த ஆசையே காரணமாக.

     கருத்தறிந்து - அவர் கருதியவற்றை, அவர்கள் சொல்லாமல்
தாமே குறிப்பின் அறிந்து. “புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத் திண்மை“ என்ற திருக்குறிப்புத்
தொண்ட நாயனார் புராணம் 112 பாட்டுக் காண்க. 1