47. என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை  
  அன்று சொன்ன படியா லடியவர்
துன்று சீர்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.
37

     (இ-ள்.) என்று.......படியால் - மேற்கூறியவாறு உபமன்னிய
முனிவர், ஆலால சுந்தரர் வன்றொண்டராகி வரும் செய்கையின் வரலாறுகளை யங்குச் சொல்லியருளினார்; அவர் சொல்லியபடியே; அடியவர்.....விரி - அடியவர்களுடைய நிறைந்த சிறப்பை விளக்கும்
திருத்தொண்டத் தொகையை ஆதரவாக் கொண்ட விரிநூலாகிய
இப்புராணத்தை; இன்று என்........இயம்புகேன் - இப்போது எனது
ஆசையினால் இவ்விடத்துச் சொல்லப் புகுகின்றேன்.

     (வி-ரை.) இது ஆசிரியர் கூற்று. முனிவர் வன்றொண்டர்
செய்கையை அன்று அங்குச் சொன்னபடி திருத்தொண்டத்
தொகையினைப் பின்பற்றிய விரிவாக இன்று இங்கு இயம்புவேன்
என்க.

     மாமுனி - உபமன்னிய முனிவர். மாமுனி வன்றொண்டர்
செய்கையை
- என்றும், மாமுனிவன் தொண்டர் செய்கையை -
என்றும் இருவகையாகப் பிரித்து முரைக்கலாம்.

     செய்கை - செய்த செயல்கள் - வரலாறு; செய்தி - சேதி
எனவும் வழங்கும்.

     அன்று சொன்னபடியால் - முனிவர்களுக்கு முன் காலத்தில்
கயிலாயத்தில் சொன்னார்; அதன்படியே. இது கொண்டு சேக்கிழார்
சுவாமிகள் உபமன்னிய பக்த விலாசம் என்ற நூலின் மொழி
பெயர்ப்பாக இப்புராணம் பாடினார் என்பர் சிலர். முனிவர்
சொன்னபடி
- என்பது நூலின் முன்வரலாறும் பூர்வத்திற்
சொன்னாரும் கேட்டாரும் இன்னின்னார் என்பதும் குறித்ததேயன்றி
உபமன்னிய பக்த விலாசம் என்ற நூலைக் குறித்ததன்று
என்க. இப்போது காணப்படும் அந்நூல் பெரியபுராணத்திலிருந்து
வடமொழியில் மொழி பெயர்க்கப் பெற்றதென்று அறிஞர் பலரும்
கருதுகின்றார்கள். பெரியபுராணம் எந்த வடமொழி நூலிலிருந்தும்
மொழி பெயர்க்கப் பெற்ற தன்று; அது தனித்தமிழ் நூல். இதற்கு
முதல் நூலாகிய திருத்தொண்டத்தொகையும், வழி நூலாகிய நம்பி
திருவந்தாதியும் தனித் தமிழ்நூல்களேயாம். திருத்தொண்டத்தொகை
தொகை நூலாகவும், திரு அந்தாதி வகை நூலாகவும், இப்புராணம்
அவற்றின் விரி நூலாகவும் காண்க. விரி என்று ஆசிரியர் குறிப்பதும் காண்க. அடியார் சரிதங்களை உபமன்னிய முனிவர் பத்தர்
குழாங்களுக்குச் சொல்வார் என இறைவன் உமாதேவியாருக்கு
அருளிய வரலாறு சிவரகசியத்திலே நவமாம்சத்திலே கூறப்பெற்றதும் காண்க.

     இங்கு - என்றதனால் மேலே - அங்கு - என - வருவித்துக் கொள்க.

     ஆதரவு - ஆசை. “அளவிலாசை துரப்ப“ என்ற
அவையடக்கம் காண்க. என் ஆதரவால் என்றது என்னைத் தாங்கும்
ஆதரவாயிருப்பதனால் என்றுமாம். இது நூல் சொன்னார் - கேட்டார்
- இவர்களின் பெருமையும் நூல் வரலாறும் முதனூலும் உணர்த்திற்று.
“தூக்குசீர்த் திருத்தொண்டர் தொகைவிரி, வாக்கினாற் சொல்ல
வல்லபிரான்“ என்பது காஞ்சிப்புராணம். விரி - விரித்து -
என்றுரைப்பாருமுளர்.

     தொன்றுசீர் - என்பதும் பாடம்.  37