472. இப்படி யிழந்த மாற்றா னிகலினால் வெல்ல
                                மாட்டான்
 
  மெய்ப்பொருள் வேந்தன் சீல மறிந்துவெண் ணீறு
                                  சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே யற்றத்தில் வெல்வா
                                   னாகச்
செப்பரு நிலைமை யெண்ணித் திருக்கோவ லூரிற்
                                சேர்வான்.
6

     (இ-ள்.) வெளிப்படை. இப்படி யிழந்தவனாகிய அந்தப்
பகையரசன் போர்முனையிலே நாயனாரை வெல்லமாட்டாதவனாகி,
மெய்ப்பொருள் வேந்தராகிய நாயனாரது சைவசீலத்தைத்
தெரிந்துகொண்டு, திருநீறு சாத்திக்கொள்வதாகிய அந்தப் பெரிய
வேடந் தரித்தே, வஞ்சனையினாலே வெல்வான்போல, வாக்கினாற்
சொல்லவுங் கூடாததாகிய, அந்த நிலைமையை மனதில்
எண்ணிக்கொண்டு திருக்கோவலூரினுட் சேரும் பொருட்டு,


     (வி-ரை.) இப்படி யிழந்த - மேலே கூறியபடி பலமுறையும்
பரிபவமடையும்படி சேனையை யிழந்த. இப்படி - இந்தப் படி
பூமியை அதாவது படியை; நாடு கவரும் உலக நலத்தை
என்றுரைத்தலுமொன்று. இப்பொருட்குப், பின்னர்ச் செய்யும்
வஞ்சனையாலே மேலுலகம் இழத்தலே யன்றி இந்தப் படியாகிய
நலத்தினையும் என்று எதிரது தழுவிய எச்சவும்மை விகாரத்தாற்
றொக்கதென்க.

     மாட்டான் - மாட்டாதவனாய் எச்சமுற்று. மாட்டானாய்
எண்ணி என்றுகூட்டி முடிக்க.

     மெய்ப்பொருள் வேந்தன - இதுவே நாயனாரின் பெயர்
குறித்த முதல் இடமாம். ஆதலின் சீலத்துடனும் வெண்ணீற்றுடனும்
சாத்தி இவ்வடியினை அமைத்த அமைதி குறிக்க. சீலம -
நல்லொழுக்கம். மெய்ப்பொருளாவது வேடமே என்று
கொண்டோழுகியதே அவர்தம் சீரிய கொள்கை பூண்ட நல்
ஒழுக்கமாம். 458 காண்க. அறிந்து - தெரிந்து.

     வெண்ணீறு - சாத்தும் அப் பெருவேடம் - அ - உயர்வு
குறித்த சுட்டு. வேதங்களால் விதந்து பேசப் பெற்ற அந்த,
பெருவேடம் - பெருமை தங்கிய - பெருமை தருகின்ற என்றதாம்.
“பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு“ என்பன
வாதியாக வரும் தமிழ் வேதமுங் காண்க. அற்றத்தில் -
வஞ்சனையினால்.

     வெல்வானாகச் செப்பரு நிலைமை - வஞ்சனையால்
வெல்வேனாவேன் என்று வாக்கிற் சொல்லவுந்தகாத நிலையினை
மனத்தினால் நினைத்து. சொன்னாலுந் நரகந் தருவதாம் என்றபடி.
வெல்வானாக - வெல்வான்போல. உண்மையில்
வெல்வதில்லையென்ற குறிப்புமாம். எண்ணி - அவ்வாறே துணிந்து.
சேர்வான் - வானீற்று வினையெச்சம். சேர்வதற்காக -
சேரும்பொருட்டு. சேர்வனாகி என முற்றெச்சமாக்கி யுரைத்தலுமாம்.
சேர்வான் - பூசி - கட்டி - ஏந்திப் - புகுந்தனன் என
வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. ஆக - போல;
“ஆள்வாரிலிமாடாவேனோ“ (திருவாசகம்)

     செல்வான் - என்பதும் பாடம். 6