482.
|
மறைத்தவன்
புகுந்த போதே மனமங்கு வைத்த
தத்தன்
|
|
|
இறைப்பொழு
தின்கட் கூடி வாளினா லெறிய
லுற்றான்;
நிறைத்தசெங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட
கையாற்
றறைப்படு மறவிற் றத்தா! நமர் எனத் தடுத்து
வீழ்ந்தார்.
|
16 |
(இ-ள்.)
வெளிப்படை. மறைத்தவன் உள்ளே புகுந்த போதே,
அங்கே மனம் வைத்துப் பார்த்திருந்தவனாகிய தத்தன் மிக
விரைவில் அவ்விடத்திற் கூடி வாளினாலே அவனை வெட்ட
முற்பட்டான்; மிகவும் இரத்தம் பெருகுதலால் விழுகின்றவராகிய
நாயனார், தாம் தரையில் வீழ்கின்ற அந்த அளவுக்குள் தமது நீண்ட
கையினால் தத்தா! நமரேகாண் என்று சொல்லி அவன்
செய்கையைத் தடுத்து வீழ்ந்தார்.
(வி-ரை.)
மறைத்தவன் - (1) மறைத்தவன்
- மறைகளிற்
சொல்லிய தவத்திரு வேடந்தாங்கியவன்; (2) தவவேடத்திற்குள்ளே
தன்னை மறைத்துக்கொண்டவன்; (3) நின்றிடு நீயும் என்று
தன்னையு மறுத்துப் புகுந்தவன் எனப் பலவும் உரைக்க அமைத்த
அழகு காண்க. இவையே மனம் அங்கு வைக்கக் காரணமாயின
என்க.
அங்கு மனம் வைத்த
என மாற்றுக. மனம் வைத்தல் -
அதுவே கருத்தாக மனத்துட் கொள்ளுதல். பொன்னடிக்கே மனம்
வைத்த புகழ்த்துணை என்பது திருத்தொண்டத்தொகை.
இறைப்பொழுது
- கணப்பொழுது - நொடி - மாத்திரை. இது
தனது காவற்கடமை செய்வதில் தத்தனுக் கிருந்த தீவிரதரம்
உணர்த்துகின்றது.
நிறைத்த செங்குருதி
சோர வீழ்கின்றார் - முத்தநாதன்
பத்திரம் வாங்கிச்செய்த செயலால் நாயனாரது திருமேனியினின்றும்
நிறையக் குருதி சோர்ந்து, அதனால், அவர் வீழ்கின்றாராக.
செங்குருதி - செம்மை இயற்கை யடைமொழி.
குருதி -
செம்புண்ணீர். சோர - சோர்தலால்; குருதி
சோர்தல் - இரத்தம்
வடிதல். உடலினின்றும் இரத்தம் பெருக வெளிவருவது மிக்க
அயர்ச்சிக்கும், இறுதியில் இறப்புக்கும் காரணமாம் என்பது உடல்
நூற்றுணிபு. Death due to Hemorrage and loss of blood
என்பர் நவீன மருத்துவர். இரத்தம் உயிர் நிலைப்பதற்கு ஆதரவாம்;
அதன் கழிவு உயிர் போதற்குக் காரணமாம் என்பர். இரத்தத்தை
Life blood என்ற ஆங்கில வழக்கும் காண்க.
வீழ்கின்றார்
- உபதேசங் கேட்கத் தாம் இருநிலத்திருந்தவர்
அவ்வாறிருக்க மாட்டாதவராகிக், குருதி சோர்தலால் தரையிலே
வீழ்வாராயினவர். நிகழ்கால வினையாலணையும் பெயர்.
வீழ்கின்றாராகிய நாயனார் (தடுத்து) வீழ்ந்தார் என்ற
வினைமுற்றுக்கொண்டு முடிந்தது. வீழத் தொடங்கிய அவர்
வீழ்தலாகிய அச்செயல் முற்றுமுன், தத்தனைக் கையாற்றடுத்துவிட்டு
அதன் பின் வீழ்ந்தார். வீழ்தலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கு
மிடையில் தடுக்கும் சொல்லும் செயலும் நிகழ்ந்தன. குருதி சோர
வீழ்கின்ற அந்நிலையினும் அவரது மனம், மொழி, மெய்என்ற
முக்கரணங்களினுடைய, நினைக்கவுமரிய, உண்மை நிலையினை
இவை காட்டியவாறு கண்டுகொள்க.
நீண்ட கை
- கை நீண்டிருத்தல், அரசுச் செல்வமுணர்த்தும்
உறுப்பிலக்கணமெனவும், அது வள்ளற்றன்மை குறிக்கும் எனவும்
கூறுவர். ஆஜானுபாகு - என்பது வடநூல் வழக்கு. பெருங்
கொடையாளியைப்பற்றிப் பேசுவோர் அவனுக்குக் கை நீளம்
என்று கூறுவதும் ஒரு பழமொழியாயிற்று.நீண்டகை என்பது
இங்குக்
குறைவறக் கொடுத்து வந்த (470) கொடையிற்
சிறந்த கை என்க.
இங்கு நாயனார் திருவேடத்தாரின் குறிப்பின்படி தம் உயிரினையே
ஒப்புக் கொடுத்ததுமன்றி, அவ்வஞ்சகனுக்குப் உயிர்ப்பிச்சையுங்
கொடுத்தலின் இவரது மிக்க வள்ளற்றன்மையின் மிக்கது முண்டோ?
அதுபற்றி நீண்டகை என இங்குச் சிறப்பித்தவாறு.
தத்தா! நமர்
- தத்தனே! நீ இவரை வேற்றவர் என்று கருதி
வாளினால் எறியலுற்றாய். அற்றன்று. இவர் நம்மவரே என்று
வாக்கினாற் கூறினார். ஆதலின் நீ உன் செயலினைத் தவிர்தி
என்பது குறிப்பு. அதனைக் கையினாற் செய்து முடித்தார் என்க. என
- வாக்கினாற் சொல்லிக் கையாற் றடுத்து
என்று கூட்டு.
தத்தா நமர் - நமர்
- நம்மவர் என்றது நமர் என நின்றது.
இது பழஞ் சாசன வெட்டுக்களிற் கண்ட தொடர். இராசராசச் சோழர்
எடுத்த தஞ்சை இராசராசேச்சரத்திருக்கோயிலில் அமைத்த
நாயன்மார் படிமங்கள் பலவற்றில் இந்நாயனார் திருவுருவமும்
ஒன்றாம். இதனில் தத்தா நமரே காண் என்ற
மெய்ப்பொருணாயனார் என்று பெயர் பொறித்துள்ளார்.
இச்சொற்றொடரை வகைநூலாரும் தத்தா நமரே! எனச் சொல்லி
என்று எடுத்தாண்டுள்ளார். இதனையே ஆசிரியர் இங்குத்
தலைப்பெய்து வைத்தனர்.சரித்திரத்தின் முன் ஆதரவுகளை ஆசிரியர்
போற்றும் அரியமுறை காண்க. நாயனார் இங்குச் செய்த அரிய
செயல் கொல்லாமை, எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை,
அஹிம்சை என்ற பொது அறத்தின் பாற்படும் என்று ஆராய்ச்சி
செய்வாருமுண்டு. வேதங்களில் விதித்த தர்மம் சர, அஹிம்சா
பரமோ தர்மா என்ற அறங்கள் வேறு; கொல்லாவிரதம், இன்னா
செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்துவிடல்
முதலியனவாக நமது பெரியோர்கள் விதித்தனவும். ஒரு கன்னத்தில்
ஒருவன் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு முதலியனவாகப்
பிறநாடுகளிலும் பிறரும் உறைத்த உபதேசங்களும் இவ்வாறே
வேறாவன. இங்கு நாயனார் தத்தா! நமர் எனத் தடுத்ததின்
கொள்கை வேறு. இவைகள் ஒன்றாக மயங்கி உணரற் பாலனவல்ல.
முன்னே குறித்தவை சாமானிய உலக நீதியாகிய பசு தருமங்கள்.
இங்கு நாயனார் செயலுக்கு அடிப்படையாய் நின்றது திருவேடமே
மெய்ப்பொருள் என்றும், திருவேடத்தார் கருத்தறிந்து ஏவல்
செய்தல் என்றும், கொண்ட கொள்கையைக் காத்தலாகிய பதி
தருமம். இந்நாயனார்பால் முன்எதிர்த்துப் போர்செய்த இந்த
முத்தநாதன் தனதுயானை முதலிய சேனைகளைப் பன்முறை இழந்து
தோற்றுப் பரிபவப்பட்டுப் போனான் என்பதையும், அந்தப்
போர்களில் எத்தனை பேர் உயிர் துறந்தனர் என்பதனையும் இங்கு
நினைவு கூர்ந்தால் நாயனார் கொண்ட அறத்தின் உண்மைநிலை
புலப்படும். திருவேடந்தாங்காது வந்திருப்பின் முத்தநாதன் நிலை
எவ்வா றிருந்திருக்கும் என்பதைச் சிந்திப்பின் இவற்றின் வேறுபாடு
நன்கு புலனாகும். சாமானிய உலக நீதிகளின் மேம்பட்டு, உலகிறந்த
சிவபுவனத்திற் சஞ்சரித்து, வெளிப்பார்வைக்கு மட்டும் உலகர்போல,
உண்டுடுத்து, அரசர் முதல் ஆள்வரை பல நிலைகளிலும் வாழந்து,
உலகை வாழ்வித்த எந்தம் பெருமக்களின் வாழ்க்கை நிலையினை
உலக நீதிகளான அற விதிகளைக் கொண்டு அளத்தல் நம்மை
உண்மை நெறியினின்றும் வழுக்கி விடுவதனோடு அபசாரத்திற்கும்
இடம் தரும். 16
|