489. தொண்டனார்க் கிமையப் பாவை துணைவனா
                         ரவர்முன் றம்மைக்
 
  கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி, மிக்க
வண்டவா னவர்கட் கெட்டா வருட்கழ னீழல்
                                   சேரக்
கொண்டவா றிடைய றாமற் கும்பிடுங் கொள்கை
                                  யீந்தார்.
23

     (இ-ள்.) வெளிப்படை. சிந்தை செய்த தொண்டனாருக்குப்
பார்வதியம்மையார் கொழுநராகிய சிவபெருமான் அவர் முன்
பன்னாளும் தம்மைக் கருத்தினில்வைத்துக் கண்டிருந்த வண்ணமே
வெளிப்பட அவர் எதிரிலே வந்து காட்சி கொடுத்து அருள்புரிந்து,
மிகுந்த தேவர்களுக்கும் எட்டாத தமது அருளாகிய சீபாதநீழல்
சேரும்படி அருள் கொடுத்து, இடையறாமற் கும்பிட்டிருக்கும்
பேற்றினையும் ஈந்தருளினார்.

     (வி-ரை.) தொண்டனார் - இறைவனது தொண்டனாராகவே
தம்மை வைத்துச் சிந்தை செய்தாராதலின், முன் “கொற்றவன்“ (486)
“புரவலர்“ (488) என்று அவ்வந்நிலைக்கேற்றவாறு குறித்த ஆசிரியர்,
இங்குத் தொண்டனார் என்று வழங்கிய அழகுந் தகுதியுங் காண்க.
தொண்டனார் என்றதற் கேற்ப இறைவன் கழனீழலிலே
இடையறாமற்
கும்பிடுங் கொள்கையீந்ததும் காண்க.
இமயப்பாவை துணைவனார்
- சிவகாமவல்லியாருடன்
வெளிப்பட்டுத் தந்த காட்சியினை விரித்தவாறு. அவர் முன்
தம்மைக் கண்டவாறு
- முன்னர்ப் பன்னாளும் சிந்தித்தும்
வந்தித்தும் அகத்தே கண்டிருந்தபடி. தில்லையம்பல வாணரையே
ஆன்மார்த்த நாயகராக வழிபட்டு வந்தவர் நாயனாராதலின் அவரே
அம்மையாருடன் எழுந்தருளிக் காட்சி தந்தனர் என்க. இக் காரணம்
பற்றியே இடபவாகனங் கூறிற்றிலர் போலும்.

     எதிரே நின்று காட்சி தந்து அருளி - முன் உள்ளப்
புண்டரிகத்துள்ளிருந்து காட்சி தந்தருளினவர், இப்போது அகம்புற
மென்பதின்றி யாங்கணும் விரிந்து நின்று காணுமாறு காட்சி
யளித்தருளி. அவ்வாறு - காட்சி தந்தருளியவாறு. “விறகிற் றீயினன்
பாலிற் படுநெய்போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான்
உறவு கோனட்டுணர்வு கயிற்றினான, முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே“
, “நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான்
றன்னை“ (திருநாரையூர்த் திருத்தாண்டகம் - 2) , “இவனென்னைப்
பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே“ முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     மிக்க அண்டவானவர்கட் கெட்டா அருட் கழல் - மக்கள்,
தேவர், நரகர் எனு மூவகை உயர்திணையிலும், புலமை, ஆயுள்,
தவம், ஒளி முதலிய பலவற்றாலும் மிகுந்த தேவர்களுக்கும்
எட்டமுடியாத கழல், உயர்வு சிறப்பும்மை தொக்கது. அண்ட
வானவர்
- அண்டங்களாகிய மேலுலகங்களை ஆட்சி புரியும்
வானவர்கள். பிரமன் - விட்ணு - இந்திரன் முதலியோர். “ஆரேனுந்
தன்னடியார்க் கணியான் றன்னை, யமரர்களுக்கறிவரிய வளவி
லானை“ (கோயிற் றிருத்தாண்டகம் - 8) முதலியவை காண்க.

     கழல் நிழல் - திருவடி வியாபகத்தின் நிறைவே நீழல
எனப்பெறும். பிறவித் துன்பமாகிய வெயிலுக்கு மறைவு தந்து
ஆற்றுவிக்கும் நிழல. வெயிலின் வெப்ப மாற்றும் நிழல்போலத்
துன்ப நீக்கி யின்பமான தண்மை தருவதனாலே நிழல் என்று
உருவகப்படுத்திப் பேசப்பெறும். “தண்ணிழலாம்பதி“ என்பது
சிவஞானபோதச் சூத்திரம். “சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித்
தொண்டர் துன்னு, நிழலாவன.....ஐயாற னடித்தலமே“ என்ற
திருவிருத்தத்தில் அப்பர் பெருமான் இவ்வுருவகத்தை முற்றும்
விரித்தருள்வது காண்க. நிழல் நீழல் என முதனீண்டது. நீழல் சேரக்கொண்டு - திருவருள் வியாபகத்தில் அவர் கலந்திருக்க
ஏற்றுக்கொண்டு “முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு“ என்றபடி
ஆடுங் கழலே முத்திநிலையாம். அதனையே அவர் வந்தித்தார்;
அதனையே சிந்தித்தார்; ஆதலின் இறைவன் அதனையே அவர்
சேரக்கொண்டார் என்க.      

     இடையறாமல் கும்பிடும் கொள்கை - இதுவே சைவ
சித்தாந்தத்தின்படி முத்தியினதிலக்கணமாம். முத்தி நிலையினும் உயிர்
இறைவனுக்கு அடிமையேயாகி அவனைக் கும்பிட்டு இன்புற்றிருக்கும்
என்பது. “மறக்குமாறிலாத வென்னை“என்ற ஆளுடைய பிள்ளையார்
திருத்துருத்தித் தேவாரமும்,“பண்டு திருவடி மறவாப் பான்மையோர்“
என்ற ஆளுடைய பிள்ளையார் புராணமும் காண்க. இடைவிடாது.
சிந்தித்துக்கொண்டிருத்தல்.“குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டேயிருப்பர்“
(சிவஞானசித்தியார்) கொள்கை - கும்பிடுதலை உட்கொண்ட
நிலை.

     கொண்டவா விடை- கொண்டவரிடை - என்பனவும்
பாடங்கள். 23