493. என்னும் பெயரின் விளங்கியுல கேறும் பெருமை
                            யுடையதுதான்
 
  அன்னம் பயிலும் வயலுழவி னமைந்த வளத்தா
                            லாய்ந்தமறை
சொன்ன நெறியின் வழியொழுகுந் தூய குடிமைத்
                            தலைநின்றார்
மன்னுங் குலத்தின் மாமறைநூன் மரபிற்
                   பெரியோர் வாழ்பதியாம்.
3

     (இ-ள்.) என்னும்.....தான் - (செங்குன்றூர்) என்கின்ற பெயராற்
விளக்கம் பெற்று உலகு ஏறும் பெருமைதான் உடையது; அன்னம் ...
வளத்தால் - அன்னங்கள் பயிலும் வயல்களில் உழவுத் தொழிலால்
அமைகின்ற வளத்தினைக் கொண்டு; ஆய்ந்த...நின்றார் -
(உண்மையறிவோர்) ஆய்ந்த மறைகளின் விதித்த வழிகளில் நடந்து
வரும் தூய்மையான குடிமைத் திறத்திலே தலைசிறந்து விளங்கி
நின்றார்கள்; மன்னும்...பெரியோர் - நிலை பெற்ற குலத்திலே
அப்பெருமறை நூல்களிற் கூறும் மரபிலே பெரியோர்கள்;
வாழ்பதியாம் - வாழ்தற் கிடமாகிய ஊராகும்.

     (வி-ரை.) என்னும் - செங்குன்றூர் என்கின்ற. செம்மை பெற்ற
குன்றுகளின் ஊர், எனப் பெயர்ப்பொருள் பெறுதலின், இது,
காரணம்பற்றிய இடுகுறியாகவும் அமைந்த தென்பார், என்னும்
என்றார். பெயரின் விளங்கி - தன் பெயரினாலேயே இது
மலைநாட்டின பல ஊர்களிலும் அந்நாட்டுக்குரிய சிறப்புக்கள்
பலவற்றுடன் விளங்குவது என்க. ஊர்களின் முன் சிறந்த மூதூர்
என்றதும் இக்குறிப்புப்பற்றியேயாம். பெயர்மட்டினன்றிப்
பெருமையிலும் சிறந்தது. செங்குன்றூர் - செம்மை -
சிவத்தன்மையின் குறிப்புமாம்.

     உலகு ஏறும் பெறுமையுடையது தான்
- உலகை மிக
ஏற்றமடையச் செய்யும் பெருமை தானேயுடையது. உலகை
வாழச்செய்து ஈடேற்றும் பெருமை. மேற்பாட்டின்கீழ் உரைத்தவை
காண்க. தான் உடையது என மாற்றுக. தானே - பிரிநிலை ஏகாரம்
தொக்கது. தேற்றேகாரம் எனினுமாம். உலகிலே மேன்மேல்
அதிகரிக்கும் பெருமை என்றலுமாம்.

     உழவின் அமைந்த வளத்தால் - முதனிலைத் தீபமாக்கி
உழவின் வளத்தாற் குடிமைத் தலை நின்றார் எனவும், உழவின்
வளத்தால் மரபிற் பெரியோர் எனவும் இரண்டிடத்தும் கூட்டி
யுரைக்க. உழவுத் தொழில் மறையோர்க்கு விதித்தலின்று. ஆயின்
இந்நாடு பரசிராம முனிவனால் மறையோர்க்குத் தானமாகத்
தரப்பெற்றமையால் மறையோர் நிலத்துக் குரிமைபெற்ற கிழவராயினர்.
ஆதலின் நிலக்கிழமை பூண்டார் உழவு வளத்தால்
மன்னுவ
தியல்பாம். ஆயினும் இவர்கள் உழவு தங்கட்குரிய
தொழிலன்றாகவே, நிலத்தை உழவுத் தொழிற் குரியோராகிய
வேளாளமக்களிடம் ஒப்புவித்து அவர் தரும் மேலுரிமைப் பங்கு
வருவாயைத் தமதாகக் கொண்டு நிலைத்து வாழ்வார். அவ்வாறு
இவர்களின்கீழ் உழவுசெய்யும் வேளாண் மக்களும் தாந்தாம்
உழுகின்ற நிலத்தை ஆளும் உரிமையுடையாராயும் மறையவர்பாற்
குடிமை பெற்றாராயும் வாழ்வார். இரு திறத்தினரும் நில
உரிமையுடையாராய்த் தொடர்புற்று இந்நாட்டில் விளங்குதல்
இன்றைக்கும் காணப்பெறும். இருவரும் உழவின் வளத்தாலே
வாழ்வார். இவ்விருதிறத்தாரது நில உரிமையின் விரிவுகள் இந்நாட்டு
நில உரிமைச் சட்டத்தினுட் கண்டுகொள்க.

     இருவரும் மறைவழி நிற்பாரே யாவர். வேளாளர்கள் மறை
சொன்ன வழி ஒழுகுவர்; மறையோர் அம்மரபினர். மறையோர்
தம்மதாகப்பெற்ற நிலக்கிழவராயிருக்கவும், அவர்களை முன்னர்க்
கூறாது, அவரின் கீழ்க்குடிமைத் தலைநின்ற வேளாளரை முன்னர்க்
கூறியது என்னை? எனின், மறையோராவர் “அறுதொழிலாட்சி யாலே
யருங்கலி நீக்கி- யுள்ளார்“ என்றபடி அறுதொழில் உரிமையாகக்
கொண்டு அவற்றானே வாழ்வு நடத்துவார்; இந்நாட்டு மறையோர்
அவ்வாரல்லாது உழவு வளத்தால் வாழ்வார். மறையோர்க்கு யாண்டும்
உழவுத்தொழிலுரிமையின்றாதலின் அதற்கு உழவுக்குரிய
வேளாண்குடிமையாளரின்றியமையாது முதற்கண் வேண்டப்பெறுவர்.
வளத்தால் மன்னும் குலம் என்றதும் காண்க. குடிமைத்தலை
நின்றோரே இவர்களை மன்னவைப்பர் என்றாயிற்று. “உழுவா
ருலகத்தார்க் காணியஃ தாற்றா, தெழுவாரை யெல்லாம் பொறுத்து“
- குறள. ஆதலின் அவர்களை முன்னர்க் கூறினார். அவர்களும்
இவர்கள் போல நாட்டு நிலத்தின் வாழும் உரிமை பெற்றாராதலுடன்
அவர்கள் இந்நாட்டு மக்கட்டொகுதியிற் பெரும்பான்மையோரும்
இவர்கள் சிறுபான்மையோருமாவர். மேலும் இப்புராண நாயகராகிய
நாயனார் வேளாளராதலும் ஒருகுறிப்புமாம். இக்குறியினைத்
திருஞானசம்பந்த நாயனார், திருநீலநக்க நாயனார், சண்டீச நாயனார்
முதலியோர் புராணங்களிலும், மற்றும் பலவற்றிலும் உய்த்துணர்ந்து
கொள்க.

     அன்னம் பயிலும் வயல் உழவின் வளம் - அன்னங்கள்
வயல்களிற் பயிலுதல் நீர்வளங் குறித்தது. அன்னம் - சோறு எனக்
கொண்டு, உழவின் வளத்தாற் சோறளிக்கும் பெருமை அந்நாட்டு
இவ்விரு மக்களிடையும் மிகப் பயின்று விளங்குகின்றது என்றலுமாம்.
மறையோர் அன்னம் பயிலப் பெறுதல் இன்றைக்கும் இந்நாட்டிற்
போல வேறெந்நாட்டினும் காண்பரிதாம். உழவின் வளம் -
இந்நாட்டு வளம் பலவற்றினும் வேறெந்த வளனும் உழவுவளனுக்
கொப்பாக தென்பது குறிப்பு. “உழந்து முழவேதலை“ - குறள்.
உழவிலேமட்டில் அமைந்த வளம் என்க. பிரிநிலை ஏகாரம்
தொக்கது. அமைந்த வளம் - பிறதொழில்களினும் வளங்கள்
படினும் அவை அமையா வளமாம். ஆய்ந்த மறை - உண்மைப்
பொருளை ஆய்ந்து ஆய்ந்து உணர்த்துகின்ற மறைகள். ஆய்தல்
- தெரிந்து சிக்கறுத்தல். அவை சொன்ன நெறியாவது இல்வாழ்வார்
முதலிய நிலையினர்க்கும், வேளாளர் முதலிய மரபினர்க்கும்
விதித்தனவும் விளக்கியனவுமாகிய நெறிகள். இவை திருக்குறள்
முதலிய நீதிநூல்களில் அறம் பொருள் இன்பம் என்ற
முப்பகுதியினும் வைத்துக் காண்க.

     ஒழுகும் தூய குடிமை - ஒழுகுதலாற்றூய்மைபெற்ற
குடிகளாகுந் தன்மை. குடிமை - ஒன்றன் கீழ் நிலைத்து வாழும்
தன்மை. ஊர்க்குடி - அடிக்குடி என்பன வாதி வழக்குக்கள் காண்க.
“கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப், பாதத்தைத் தொழநின்ற
பரஞ்சோதி“ “பண்ணொன்ற விசைபாடு மடியார்கள் குடியாக,
மண்ணின்றி விண்கொடுக்கு மணிகண்டன் என்ற ஆளுடைய
பிள்ளையாரது திருப்புள்ளிருக்கு வேளூர்த் தேவாரங்கள் காண்க.

     தலைநின்றார்
- தலையிலே நின்றார் - தலைமையிற் சிறந்து
நிலைபெற்றார். தலைநின்றார் - பெரியோர் - உம்மைத் தொகை.
நின்றாரும் பெரியோரும் வாழ்பதி என்க.

     நிலவுரிமையாளர் இவ்விருவருமே யாதலின் இவர்களைக்
குறித்தார். நால் வகைமரபில் முதலும் இறுதியும் கூறவே, இடைப்பட்ட
மற்ற இரண்டுமரபும் இவற்றுடன் கொள்ளப்படு மென்று கொண்டு,
“குறியில் நான்கு குலத்தின“ரையும் இங்குக் குறித்ததாகக்
கொள்வாருமுண்டு. தலைநின்றாராகிய பெரியோர் எனப்
பண்புத்தொடராகக் கூட்டி மறையவர் என்ற ஒரு மரபினரையே
குறித்ததாகக் கொள்வாரு முளர்.

     குலத்தின் - குலத்தினும். எச்சவும்மை தொக்கது.
முன்கூறியவர்க்கு மறை ஒழுக்கம் மட்டில் அமைந்ததாக,
இவர்களுக்கு அதனுடன் மறைக்குலமரபும் உடன்
அமைந்தது
என்பதாம். மறையொழுக்கம் மறையவர்களிடம் இன்றும் பெரு
வழக்கில் நிலவுவது இந்நாட்டிலே காணப்பெறுவதாகும். அவர்கள்
நம்பூதிரிகள் எனவும் போற்றிகள் எனவும் பெறுவர்.

     தில்லை மூவாயிரவர் போன்று, திருச்செங்குன்றூரிலும்
மூவாயிர வேதியர்கள் இருந்தனர் என்றும் கூறுவர். “மனக்கொள்சீர்
மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானு மொப்பார் வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன்றூரிற்றிருச்சிற்றாற்
றங்கரையானை, யமர்ந்த சீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
யவனிதேவர்வாழ்“ என்ற நம்மாழ்வார் பாசுரங்கள் காண்க.

     வாழ்பதி ஆம் - (செங்குன்றூர்) வாழும்பதி; அதுவே ஆகும்
தன்மை பெற்றது. வாழ்பதி - முக்கால வினைத்தொகை. அவ்வாழ்வு
முக்காலத்தும் நிலைத்ததென்பதாம்.

     பதி - மக்களுள்ளத்தே தன் பெருமை பதிய நிற்றலாலும்,
பதியின் மொழியாகிய மறைவழி நின்று உலகையும் பதியுன் வழி
நிறுத்தும் பெரியாரைத் தன்பாற் கொண்டு பதியின் பெருமை விளங்க
நிற்றலானும், பதி என்ற பெயராற் குறித்தார். 3