50. உலக முய்யவுஞ் சைவநின் றோங்கவும்  
  அலகில் சீர்நம்பி யாரூரர் பாடிய
நிலவு தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை
குலவு தண்புன னாட்டணி கூறுவாம்.
40

     (இ-ள்.) உலகம்.....கூட்டம் - உலகில் எல்லா உயிர்களும்
உறுதிபெற்று உய்யும் பொருட்டும், சைவத்துறையானது நிலைபெற்று
நின்று வளரவும் அளவில்லாதசிறப்புக்களையுடையார் நம்பியாரூரர்
திருத்தொண்டத்தொகையினாலே துதித்தருளிய, என்றும் நின்று
நிலவும் திருத்தொண்டர் திருக்கூட்டம்; நிறைந்து உறை.....கூறுவாம்
- எப்போதும் நிறைந்து உறைகின்ற குலவும் தண்ணிய நீர் நிறைந்த
காவிரிபாயும் சோழ நாட்டின் சிறப்பினை இனிக் கூறுகின்றோம்.

     (வி-ரை.) உய்ய - ஓங்க - பாடிய - கூட்டம் என்று கூட்டுக.

     ஆரூரர் பாடிய - ஆரூரராற் பாடப்பெற்ற; செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது.

     உலகம் உய்ய - சைவம் நின்றோங்க; உலகம் உய்வதற்குக்
காரணம் சைவம் நின்று ஓங்குதலேயாம். ஆதலால் இம்முறையே
வைத்தார், “தீதிலாத் திருத்தொண்டத் தொகை“ என மேலே (25)
கூறியதும் காண்க.

     குலவு - குலவு - புனல்; குலவுதல் - விளக்குதல்;
யாவராலும் புகழப்பெற்ற புனல் என்க. குலவு என்பதனை நாடு
என்றதனோடு சேர்த்துக் குலவுநாடு என்று உரைத்தலுமாம். கூட்டம்
நிறைந்துறைவதனாற் குலவப்பெற்ற நாடு என்க. இது சோழநாடு.

     நிலவு தொண்டர் - ஆண்டானாகிய சிவபெருமானைப்
போலவே தொண்டர் கூட்டமும் என்றும் நிலைபெற்றது என்றபடி.

     தண்புனல் நாடு - குளிர்ந்த நீர்; என்றும் பொய்யாது
பெருகும் காவிரிபாயும் நாடு. “பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யாதளிக்கும் புனல்நாடு“ சண்டேசுரர் புராணம் - 1.

     இது சோழநாடாம். “ஓருலகோ ஒரு திசையோ ஒருபதியோ“
என்றபடி இப்புராணத்துட் கூறப்பெற்ற தொண்டர்களுடைய நாடுகள்,
தொண்டை நாடு - சேரநாடு முதலிய நாடுகள் பலவாயிருப்பவும்,
சோழ நாட்டையே இப்புராணத்துக்குரிய நாடாக உரைத்தது என்னை?
என எடுத்துக்கொண்டு, இப்புராணம் திருத்தொண்டர் புராணம்
ஆதலாலும், அவர்கள் அனைவரும் திருத்தொணடத் தொகையிலே
தொகுத்துத் துதிக்கப் பெற்றாராதலாலும், அத்திருத்தொண்டத்
தொகையின் விரிவே இப்புராணமாதலாலும், அவர்கள் திருவாரூரிலே
தேவாசிரிய மண்டபத்திலே நிலைபெற எழுந்தருள்வார்களாதலாலும்,
அந்தப் பதிகம் பிறந்ததும், அவர்கள் இருந்ததும், ஆகிய சோழ
நாடும், திருவாரூர்த் திருநகரமுமே இப்புராணத்திற்கு நாடு
நகரமுமாம் என்பார் “தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை -
நாட்டணி கூறுவாம்“ என்று காரணமும் தொடர்பும்
காட்டியருளினார்.  40