502. சீரி னீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்  
  காரின் மேவிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரி னீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
1

     (இ-ள்.) வெளிப்படை. சிறப்பிலே நீடிய சோழர்களது,
காவிரிபாயும் நன்னாட்
டிலே, மேகத்தின் அமைந்த, களிப்புடைய
வண்டுகள் மொய்த்த, பூஞ் சோலைகளாற் சூழட்பெற்றும்,
தேர்களோடு கூடிய செழிய மணியுடைய வீசகளாலே
சிறக்கப்பெற்றும், உலகில் நீடி நிலைத்த பெருமைசேர் பதியாவது
பழையாறை என்பதாம்.

     (வி-ரை.) சீரின் நீடிய - சீரால் நீடப்பெற்றது அதன்
சிறப்பாலே என்க. சீராவது தங்கள் பொங்கொளி வெண் திருநீற்றுச்
சிறப்பை எங்கும் பரப்புதல். நீடிய செம்பியர் எனவும், நீடிய நாடு
எனவும் இரு வழியும் கூட்டியுரைக்க நின்றது.

     செம்பியர் - சோழர்கள். சிபிச்சக்கரவர்த்தியின் வழியிலே
வந்தவர்கள். “துலையிற் புறவி னிறையளித்த சோழர்“ -
(கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் - 1).

     பொன்னி - நன் - நாடு - காவிரி பாய்தலால் நன்மை
மிக்க நாடு. இவற்றின் விரிவு முன்னர்த் திருநாட்டுச்சிறப்பில்
உரைக்கப்பெற்றது. “வம்புலா மலர் நீரால் வழிபட்டு“ (57) என்ற
திருப்பாட்டிற் குறித்தது இந்நன்மைகளின் தேற்றம்.

     காரின் மேவிய அளி - வண்டுக் கூட்டங்கள் மேகம்
போன்று பொருந்தியன என்க. “சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல
பகலெல்லாம்“ (65) என்ற ஆடத்துக் காண்க. அங்கு விரித்துக் கூறிய
இந்நாட்டுச் சிறப்பை ஆசிரியர் அழகுபெற நினைப்பித்த குறிப்பும்
காண்க. காரின் மேவிய பொழில் என்று கூட்டி மேக
மண்டலத்தை அளாவிய பூஞ்சோலைகள் என்றுரைப்பாருமுண்டு.
களிஅளி - தேனுண்பதனாற் களிப்புடைய வண்டுகள். சோலைகள்
சூழ்தல் மழைச் சிறப்புத் தரும் என்பர்.

     பொழில் சூழ்ந்து - பொழில்களாற் சூழப்பெற்று.
செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது. சூழ்ந்து - சிறந்து -
பெருமைசேர் பதி - எனக் கூட்டி முடிக்க.

     தேரின் மேவிய செழுமணி வீதிகள் - தேரின் மேவிய
மணி எனவும், தேரின் மேவிய வீதி எனவும் கூட்டி உரைக்கத்தக்கது.
தேர்களில் மணிகள் கட்டுதல் வழக்கு. மணி - அழகு. “வாளுடைய
மணிவீதி வளர்காழிப் பதிவாழ“ (திருஞான - புரா - 25), “படர்ந்த
பேரொளிப் பன்மணி வீதி“ (91) முதலியவை காண்க. வீதிகளின்
செழுமை செல்வப் பொலிவாலும் மக்கட் பொலிவாலும் ஆம்.

     தேர் - பழையாறை என்ற இத்திருநகருடன் வடதளியும்
மேற்றளியும் கூடுதலால் அவற்றின் திருவிழாக்களிற் சேரும்
தேர்களைக் குறித்தது. அரசர்களின் தேர்களும், சிறார்கள் ஆடும்
சிறு தேர்களும் கூட்டித் தேரின் மேவிய செழுமை சிறந்தது
என்றலுமாம். “ஆழிமணிச் சிறுதேரூர்ந் தவ்விரதப் பொடியாடும்,
வாழி வளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுகு“ (திருஞான
- புரா - 11) என்பது காண்க.

     நீடிய பெருமை சேர் - காலத்தாலும் இடத்தாலும் நீடு
செல்லும் பல பெருமைகளும் இப்பதியினைத் தேடிவந்து சேர்ந்தன
என்க.


     பழையாறை - இதனைப் பற்றிய குறிப்புக்கள் தலவிசேடத்திற்
காண்க.

     காரினீடிய - தேரினீடிய - என்பனவும் பாடங்கள். 1