503. மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்  
  பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகின் முதலா
வெந்நி லத்தினு முள்ளன வருவளத் தியல்பா
லந்நி லைக்கண்மிக் கவரமர் நீதியா ரென்பார்.
2

     (இ-ள்.) வெளிப்படை. நிலைத்த அந்தப் பதியிலே
வணிகர்களுக்குரிய குலத்திலே வந்து அவதரித்தவர்; பொன்னும்
முத்தும் ஏனைய நன்மணிகளும், பிற பூந்துகில் முதலியனவுமாக
எல்லா நிலத்தினின்றும் வருகின்ற எல்லா வளங்களும் மிகுதியாய்ப்
பெற்ற இயல்பினால் அவ்வாணிப நிலையிலே மிகுந்தவர்
அமர்நீதியார் என்று சொல்லப்படுபவர்.

     (வி-ரை.) மன்னும் அப்பதி - மேற்பாட்டிலே பாரின் நீடிய
பெருமை சேர்
என்றபடி நிலைத்த அந்தப் பதி.

     வணிகர் தம் குலம் - வாணிபம் செய்தற்குரியதாகிய அந்த
மரபு.

     பொன்னும் முத்தும் நன்மணிகளும் பொன்னும் -
பொன்வேறு; முத்துமுதலிய மணிகள் வேறு உம்மை அதனின்
வேறாகிய என எச்சப் பொருள் குறித்தது. முத்தும் நன்மணிகளும்
- எண்ணும்மை. முத்தும் நன்மணிகளில் ஒன்றாயினும் அவை
பிறக்கும் பலவகையிடங்களினின்றும் தனித்தனி முழுமணிகளாகவே
விடுபட்டுப் பிறத்தலானும், ஏனைய மணிகள்போல முறுக வாங்கிக்
கடைதலானன்றி இயல்பானே ஒளி பரப்புதலானும், மற்றும்
பலவகையானும் தனித்தன்மைப்படுதலின். நன்மணிகளும் என
ஏனைய மணிகளை ஒன்று சேர்த்துத் தொகுத்து
அத்தொகுதியினின்றும். முத்தினை உம்மை தந்து வேறு பிரித்துக்
கூறினார். 492 - ம் பாட்டுக் காண்க. நன்மணிகளும் - இந்நாளிற்
கண்ணாடியா லியன்று செயற்கையாற் காணும் பலவகை யிழிந்த
போலி மணிகள் போலாது இயற்கையான் விளைந்து உயர்ந்த
குணமுடையன என்பார் நன்மணி என்றா 539 பார்க்க.

     பூந்துகில் - பட்டு முதலிய துகில் வருக்கங்கள் 536, 537
பாட்டுக்கள் பார்க்க. உம்மை தொக்கது. முதலா - பொன், மணி
முதலியவற்றின் வாணிபம் ஒருபுறமும், பட்டு ஆடை முதலிய வேறு
பலவகை வாணிபம் மற்றொரு புறமுமாக நடாத்தி அதனால்
வளத்தில் மிக்கவர் என்க. பூந்துகில் முதலா என முதன்மைக்
குறிப்புக் கொடுச்சோதியது இச்சரித நிகழ்ச்சிக் குறிப்பு.

     எந்நிலத்தினும் வரும் வளம் - ஒவ்வோர் பொருள்கள்
ஒவ்வோர் நிலத்துக் குரியனவாம். ஆயினும் அவை யாவும் வாணிபப்
பொருட்டால் இங்கு வந்து கூடியன என்க. இவற்றினியல்பு
பட்டினப்பாலை முதலிய நூல்களுட் காண்க. திருக்குறிப்புத்தொண்ட
நாயனார் புராணம் (44) முதலியனவும் காண்க. எந்நிலம்
என்றதனால் யவனம் முதலிய பிற நாடுகளும் கொள்க. உள்ளன -
முற்றும்மை தொக்கது.

     வளத்து இயல்பால் அந்நிலைக்கண் - அந்தந்த
வளங்களின் தன்மைக் கேற்றவாறு அந்தந்த வாணிபநிலைமையிலே
மிக்கவர் மிக்க ஊதியம் பெற்றுவிளங்கியவர்.

     என்பார் எனப்படுவார். ‘இல்வாழ்வா னென்பான்' என்ற
குறளிற்போலக் கொள்க. செயப்படு பொருள் வினைமுதல் போலக்
கூறப்பட்டது என்பர் பரிமேலழகர். எனப்படுவான் எனற்பாலது
செயப்பாட்டு வினைப் பொருளுணர்த்தும் படு விகுதி தொக்கு
என்பான் என நின்ற தென்பர் பிரயோக விவேக நூலார்.
தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் இவ்வாறே கூறினர். 2